Friday, February 21, 2020

சாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்- வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த விடயம் கல்முனைக்கு ஏற்படுத்தியிருந்த ஆபத்து, அதனால் ஏற்படுத்தப்பட்ட மனப்புண்கள், ரணங்கள் என்ற கோணத்தினாலான பார்வை ஒன்று.

இந்தக் கோணத்திலிருந்தே அதிகமான கருத்துப்பதிவுகள் தற்போது இடப்படுகின்றன. அதேநேரம், இது தொடர்பான தேசியப்பார்வை ஒன்று இருக்கின்றது. இது தொடர்பாக நமது கவனத்தைச் செலுத்தத் தவறுகின்றோம்.

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி வெளியானதும் ஐ தே கட்சியைச்சேர்ந்த நளின் பண்டா, மரிக்கார், ஹிருணிக்கா போன்றவர்கள் இனவாதக் கருத்துக்களை முன்வைத்தனர். அதனைப் பலரும் விமர்சித்தனர். அது இயல்பானதுதான்.

அதேபோன்று மொட்டுத் தரப்பைச் சேர்ந்த அதுரலிய ரத்னதேரர் போன்றோரும் விமர்சிக்க, முஸ்லிம்களுக்கெதிராக தொடராக இனவாதக் கருத்துக்களைக் கூறிவரும் ஞானசார தேரர் ஆதரவு கருத்தை முன்வைத்தார். அதேநேரம் மொட்டு அரசியல்வாதிகள் சிலரும் எதிர்த்தனர். இறுதியில் வர்த்தமானியை ரத்துச்செய்ய அமைச்சரவை முடிவெடுத்தது.

இந்தக் கருத்துகள், சம்பவங்களை தனித்தனியாகவே நம்மில் பலரும் பார்க்க முனைகின்றனர். இதுதான் நமது அரசியல் பலகீனமாகும்.

பண்டாரநாயக காட்டிய வழி


அன்று தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பண்டாரநாயக ஐ தே கட்சியிலிருந்து வெளியேறினார். போட்டிக் கட்சியாக 1951ம் ஆண்டு ஶ்ரீ சு கட்சியை உருவாக்கி 1952 தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

நாட்டில் உறுதியாக காலூன்றிய ஐ தே கட்சியை கொள்கைரீதியாக தோற்கடிக்க முடியாதென்பதை உணர்ந்தபோது எந்தக் கொள்கைப் பிடிப்பையும் உடைத்துவீசக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் இனவாதம்; என்பதைப் புரிந்துகொண்டு இனவாதத்தைக் கையிலெடுத்தார்.

1956ம் ஆண்டுத் தேர்தலில் சு கட்சியில் போட்டியிடாமல் எப்போதும் இனவாதமுலாம் பூசப்பட்ட மஹாஜன எக்சத் பெரமுன ( MEP) வில் போட்டியிட்டார். தனிச்சிங்கள சட்டக்கோசத்தைக் கையிலெடுத்தார். நாட்டில் ஆழவேர் ஊன்றியிருந்த ஐ தே கட்சியின் செல்வாக்கு தூள் தூளாகப் பறந்தது.

இதைக்கண்ட ஐ தே க தாமும் இனவாதத்தைக் கையிலெடுக்க எண்ணி அதுவும் தனிச்சிங்கள சட்டத்தைப் பிரச்சாரம் செய்தது. ஆனாலும் மக்கள் பண்டாரநாயகாவின் இனவாதத்தையே நம்பினார்கள். பண்டாரநாயக வெற்றிபெற்றார். அதன்பின் பண்டாரநாயக்காவின் கட்சி மீண்டும் சு க வடிவம் எடுத்து SLPP என்ற ஒரு கட்சி உதயமாகும்வரை இந்த நாட்டில் மாற்று அரசாங்கம் அமைக்கக்கூடிய ஒரு கட்சியாக இருந்தது.

இத்தனைக்கும் பண்டாரநாயக இயல்பாக ஓர் இனவாதியாக இருந்திருக்க முடியாது. அவர் ஒக்ஸ்போர்ட்டில் படித்தவர் மட்டுமல்ல, 1925ம் ஆண்டு தமிழருக்காக சமஷ்டியையும் பிரேரித்த ஒருவர். ஆனாலும் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக இனவாதத்தைக் கையிலெடுத்து வெற்றிபெற்றபோதும் அதற்குப் பிராயச்சித்தமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் மூலம் தமிழருக்கு சிலதீர்வினை வழங்க முன்வந்தபோது அவர் தஞ்சம் புகுந்த இனவாதம் அதற்கு இடமளிக்கவில்லை.

இறுதியில் அந்த இனவாதத்திற்கு தன் உயிரையே விலையாகக் கொடுத்தார். இங்கு நாங்கள் புரிந்துகொள்ள வேண்டியது:

அரசியல்வாதிகளில் பலவகையினர் உண்டு
1 இயல்பாகவே இனவாத ரத்தம் ஓடுகின்ற அரசியல்வாதிகள். உ+ம் விஜேதாச
2 இனவாதத்திற்கப்பாற்பட்ட அரசியல்வாதிகள். உ+ம் மங்கள
3 இனவாதியாக இல்லாதபோதும் அரசியலுக்காக இனவாதத்திற்குள் தஞ்சம் புகுகின்ற அரசியல் வாதிகள். உ+ம் பண்டாரநாயக்க
4 இனவாதியுமில்லை. இனவாதத்திற்குள் தஞ்சம் புகவுமில்லை. ஆனாலும் இனவாதத்திற்கு முன்னால் நெஞ்சுயர்த்தி நிற்கத் தயங்கும் அரசியல்வாதிகள். உ+ம் ரணில்

பண்டா காட்டிய வழியில் புதிய பயணம்

2008 ஆண்டு தொடக்கம் நடந்த அனைத்து மாகாணசபைத் தேர்தல்கள், 2010 ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்த பொதுத்தேர்தல் அனைத்திலும் யுத்தவெற்றி சந்தைப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் அதனை சந்தைப்படுத்த முடியாது; என்பதால் மீண்டும் இனவாதத்திற்குள் தஞ்சம் புகுதல் அரங்கேற்றப்பட்டது. அன்றைய சூழலில் தமிழருக்கெதிரான இனவாதமே பண்டாரநாயகவுக்கு சாதகமாக இருந்தது. பிந்திய சூழலில் யுத்தத்தால் நொந்துபோன தமிழருக்கெதிரான இனவாதத்தைவிட முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம், குறிப்பாக சர்வதேச சூழலில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் கூர்ப்புக்கொண்ட நிலையில் இலகுவாக சந்தைப் படுத்தக்கூடியதாக இருந்தது.

2015ம் ஆண்டு மொத்த சிறுபான்மைகளின் உறுதியான ஒற்றுமையினால் இனவாத உத்தி தோல்வியடைந்தாலும் 2019இல், குறிப்பாக சிறுபான்மைகளின் ஒற்றுமையில் 2015ம் ஆண்டிலிருந்த உறுதியில் சிலதளர்வு 2019 இல் இருந்ததன் காரணமாக வெற்றிபெற்றது.

வர்த்தமானி ரத்து விவகாரம்

வாக்குகளை இலக்காகக்கொண்டு சாய்ந்தமருது வர்த்தமானி வெளியிடப்பட்டது. அன்று பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கெதிராக இனவாதத்தை தட்டியெழுப்பும் கண்டி பாதயாத்திரையை ஜே ஆர் மேற்கொண்டார்.

அதே உத்தி சிறிய அளவில் ஐ தே கட்சியால் இதில் அரங்கேற்றப்பட்டது. அதன்விளைவுதான் நளின் பண்டா, மரிக்கார், ஹிருணிக்கா ஆகியோரின் கூற்றுக்களாகும். இவர்கள் இயல்பான இனவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, மரிக்கார் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதியாக இருக்கமுடியுமா? ஆனாலும் இனவாதத்தால் ஆட்சிக்கு வந்த அரசை வீழ்த்த ஐ தே க இனிக்கைக்கொள்ளப்போகின்ற ஆயுதம் “இனவாதம்தான்” என்பது தெளிவாகியுள்ளது.

“ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்” என்ற கட்டுரைத் தொடரில் இதனை சுட்டிக்காட்டியிருந்தேன். இத்தேர்தலில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் வெற்றிபெற்றால் அதை ஆட்சியாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடரவேண்டியேற்படும். அதேநேரம் எதிர்க்கட்சியும் அதே உத்தியைக் கையாளும். இன்று அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

ஐ தே க இனவாதம் பேசும்போது தம்பங்கிற்கு இது அரசு செய்தவிடயமாக இருந்தாலும் தாம் இனவாதம் பேசாமல் இருக்கமுடியுமா? என்பதுதான் ஆளுந்தரப்பில் சிலரின் வர்த்தமானிக்கெதிரான இனவாத நிலைப்பாடாகும்.

இந்தப்பின்னணியில்தான் இனவாதத்தில் நீந்தி ஆட்சிக்குவந்த பண்டா எவ்வாறு அந்த இனவாதத்தைமீறி எதுவும் செய்யமுடியாமல் தோல்வியடைந்தாரோ அதேநிலைதான் இன்றைய ஆட்சியாளருக்கும் ஏற்பட்டிருக்கிறது; என்பதைத்தான் வர்த்தமானி ரத்துச்செய்தி காட்டுகிறது.

பொதுத்தேர்தல்

இந்தப் பின்னணியில்தான் பொதுத்தேர்தல் பார்க்கப்படவேண்டும். குறிப்பாக பங்காளிக்கட்சிகளைத் தனித்து போட்டியிடச் சொல்வதோடு, வடகிழக்கில் பெரமுன போட்டியிடுவதில்லை; என்பதற்குப் பின்னால் பெரிய செய்தி இருக்கின்றது.

சிறுபான்மையின் ஆதரவில்லாமல் ஒருபோதும் ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது; என்ற கருத்தை முறியடித்து எவ்வாறு கிட்டத்தட்ட வெற்றிபெற்றார்களோ அதேபோல் சிறுபான்மைகளின் வாக்கு இல்லாமல், குறிப்பாக வட கிழக்கு தமிழ்பேசுவோரின் வாக்குகள் இல்லாமல் இவ்விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழும் தன்னால் பெரும்பான்மை பெறமுடியும்; என்பதை நிரூபிக்க முனைகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானித்த பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தை மீறி தாம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது; என்று கூறியதுபோல் பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவால் மட்டும் வெற்றிபெற்றால் அதன்பின் தாங்கள் ஓர் தனிச்சிங்கள அரசாங்கம். அவர்களின் விருப்பப்படிதான் ஆட்சி செய்யமுடியும்; என்பார்கள்.

தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால் தேர்தலின்பின் 2/3 ஐ இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். அதன்பின் தேர்தல்முறை மாறும். முஸ்லிம்கள் பிரதிநித்துவம் அற்ற ( மிகக் குறைவான பிரதிநிதித்துவம் உடைய) ஒரு சமூகமாக மாற்றப்படலாம். ஒரு நாடு; ஒரு சட்டம் அமுலுக்கு வரலாம். முஸ்லிம்களும் பொதுச்சட்டத்தின்கீழேயே திருமணம், விவாகரத்து போன்றவற்றை செய்யவேண்டிவரலாம்.

சுருங்கக்கூறின் இன்று இந்தியாவில் முஸ்லிம்களை அடிமைகளாக மாற்றமுற்படுவதுபோன்று இலங்கையிலும் சூழ்நிலை தோன்றலாம்.

இந்தியாவில் பல பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட முஸ்லிம்களுக்கு நியாயத்திற்காக கைகொடுக்கிறார்கள். இலங்கையில் ஜே வி பி யைத் தவிர வேறு எந்தக் கட்சியும் முன்வரப்போவதில்லை.

இந்தியாவில் பி ஜே பி இனவாதம் பேசும்போது காங்கிரஸ், சமாஜவாதக்கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பல கட்சிகள் இனவாதத்திற்கெதிராக, சிறுபான்மைக்காக குரல் கொடுக்கிறார்கள்.

இலங்கையில் ஐ தே க குரல் கொடுக்குமா? கடந்த காலங்களில் கொடுத்தார்களா?

எனவே, எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை நமக்கிருந்த தெரிவு “யார் இனவாதத்தில் குறைந்தவர்” என்பதாகும். அதிலும் தோல்வியடைந்தோம்.

பொதுத்தேர்தலைப் பொறுத்தவரை எந்தவொரு தேசியக்கட்சியும் சுயமாக அறுதிப்பெரும்பான்மை பெறக்கூடாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அது சிறுபான்மையில் தங்கியிருக்கவேண்டும். அவ்வாறான ஒரு சூழ்நிலை வரும்போது அவர்கள் நினைத்தபடி, தேர்தல்முறை மாற்றுவதோ, ஒரு நாடு; ஒரு சட்டம் கோட்பாடோ, சிரமமாகலாம்.

அதைவிடுத்து, highway யில் சற்றுத் தூரத்தே நிமிர்ந்து வாகனம் வருகின்றதா எனப் பார்த்து வீதியைக் கடக்காமல் அருகே வாகனம் வருகிறதா? எனப்பார்த்து கடக்கப்போய் தூரத்தே இருந்து வேகமாக வரும் வாகனத்தில் மாட்டுவதுபோல் குறுகிய பார்வையால் பொதுத்தேர்தலில் தீர்மானங்களை எடுத்து மொத்த சமூகத்தையும் ஆபத்திற்குள் தள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com