Tuesday, November 12, 2019

இன்று நாடெங்கிலும் சஜித் அலையே வீசுகின்றது....! - மங்கள சமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 70 வீதமானோர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற வாரம் உத்தியோகபூர்வமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது பற்றித் தெரிவித்திருந்தமையை நாங்கள் சென்ற வாரம் தெரிந்துகொண்டோம். எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி என்பது உறுதியே என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவத்தார்.

வெலிகம - மதுராப்புரவில் நேற்றிரவு (11) இடம்பெற்ற, சஜித்திற்கான வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பின்போதேஅமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு அமைப்புக்கள் உத்தியோகபூர்வமாகத் தங்கள் ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளன. வடக்கு - கிழக்கு மட்டுமன்றி நாடெங்கிலும் இன்று சஜித் அலையே வீசுகின்றது. நேற்று முன்தினம் சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். காலி முகத்திடலில் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானோர் அங்கு கூடினர். மேலும் முஸ்லிம்களின் பெரும் ஆதரவு சஜித்திற்குக் கிடைத்துவருகின்றது.

இனவாதத்தை - அடிப்படைவாதத்தைப் பூண்டோடு அழிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுதி செய்துள்ளது. எனவே, இலங்கையர் அனைவரும் அச்சமின்றி ஒன்றாக வாழ வேண்டுமாயின் அன்னச் சின்னத்தை வெற்றிகொள்ளச் செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

இங்கு முன்னாள் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மதுருபால எதிரிவீர, வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தார் ஆகியோரும் உரையாற்றினர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com