Tuesday, September 24, 2019

ஜெனிவா கொல்லன் தெருவில் ஊசி விற்கும் பொன்னம்பலத்தின் மகன்.

ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாட்டில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ள பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இலங்கையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சாவேந்திர சில்வா என்பவர் யுத்தக் குற்றவாளி என 'அடையாளம் காட்டப்பட்டவர்' என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசானது மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்பட்ட இலங்கை மீதான அலுவலக விசாரணையின் அறிக்கையின் பிரகாரம் முக்கியமான யுத்தக் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா என்பவரை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக்கியுள்ளது எனக் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

கற்றறிந்த சட்டத்தரணி என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னப்பலம், இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வாவை நியமித்தது தவறானது என்ற தனது வாதத்திற்கு காரணமாக அவர் யுத்தக்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டவர் என தெரிவிக்கின்றார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை நிரபராதி என அடிப்படைச் சட்டம் கூறுகின்றது. அவ்வாறாயின் அவர் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ற ஒரு காரணத்திற்காக அவரது சேவை அடிப்படையில் அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள பதவி உயர்வை தடுக்கவேண்டும் என்று கோருவது சவேந்திரசில்வாவின் அடிப்படை உரிமை மீறலாகும் என மனித உரிமைகளுக்காக போராடும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

எனவே இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமைகளை மீறும்மாறு கோரிக்கை விடுத்துள்ளார் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

மேலும் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டபோது, இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கையர்கள் உலகெங்கும் போர்க்கொடி தூக்கினர். ஐ.நா சவேந்திரசில்வாவை தூதுவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது என வலியுறுத்தினர். ஆனால் அவர் ஒரு சந்தேக நபர் மாத்திரமே என்றும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்வரை அவர் நிரபராதி என்றும் தெரிவித்த ஐ.நா அவரை தூதுவராக ஏற்றுக்கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com