Monday, August 12, 2019

கோத்தபாய ஜனாதிபதியானால் தமிழர்களின் கதி அதோகதிதான்... எதிர்வுகூறுகிறார் குதிரை கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது உரையில்,

'கோத்தாபே ராஜபக்ஷ பதவி ஏற்பதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மிகப் பயங்கரமானது. அதேபோன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பதும் மிகவும் பயங்கரமான ஆபத்தொன்றை எதிர்நோக்கப் போகின்றது. கோத்தபாய ராஜபக்ஷ ஓர் இன அழிப்புச் செய்தவர். ஒரு சர்வதேச நீதிமன்றிலே நிறுத்தப்பட்டு, போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டி ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் பதவிக்கு வந்தால் நிச்சயமாக அவர் எஞ்சியிருக்கின்ற தமிழர்களின் நிலங்களை முழுமையாக சிங்களமயமாக்குவார். பெளத்தமயமாக்குவார். அவர் தோற்கடிக்கப்பட வேண்டியவர்.

தமிழர்களுக்கு அவரால் ஏற்படக்கூடிய ஆபத்தை விட, சீனாவை அவர் உள்ளே அனுமதிப்பதனால் சீனாவால் இந்திய எதிர்நோக்கக் கூடிய ஆபத்து மிகப் பெரியது. அதனால் இந்தியா பல்லாயிரம் மடங்கு தீவிரமாகச் செயற்படும்.

இந்த இடத்திலே தமிழர்களுடைய வாக்குகளை வைத்துக்கொண்டு மட்டும்தான் இந்தியாவால் அவரைத் தோற்கடிக்க முடியும். இந்த இடத்தில் தமிழர்கள் தமிழ்த் தேசியம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் கருத்து முன்வைப்பதனுூடாக இந்தியா இந்திய நாடாளுமன்றிலே அந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற அந்த உறுதிப்பாட்டை எடுத்தால் இந்தியா கட்டாயம் செய்யும்.

தமிழர்கள் வாக்களிக்கத் தவறினால் கோத்தபாய ராஜபக்ஷ வரக்கூடிய ஒரு ஆபத்து இருக்குமானால், இந்தியா பல நாடுகளாக சீனாவால் சிதறடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே அந்த ஆபத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது.' என்றும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com