Saturday, June 8, 2019

சுயபரிசோதனை- பாகம்-3 ஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும். வை எல் எஸ் ஹமீட்

உலகின் ஆட்சிமுறையை பிரதானமாக இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஜனநாயகம், அடுத்தது சர்வாதிகாரம். சர்வாதிகாரம் என்பது மன்னராட்சியாக, கம்யூனிசமாக, சோசலிசமாக எந்தவடிவத்தையும் எடுக்கலாம்.

இரண்டுவகை ஆட்சிக்குமான அடிப்படைவேறுபாடு

ஜனநாயகம் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிக்கும். சர்வாதிகாரம் அனுமதிக்காது. உதாரணமாக கம்யூனிச நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜனநாயகம் liberalism மற்றும் human rights ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் அரவணைத்துச் செல்லும். அதனால்தான் human rights promote democracy என்று கூறுவார்கள்.

Liberalism


இங்கு liberalism என்பது தனிநபர் சுதந்திரத்தைக் குறிப்பிடுகின்றது. இந்த சுதந்திரம் என்பதை தனது ஆட்சியாளரை தான் தீர்மானிப்பது, தனது வாழ்வுமுறையை தான் தீர்மானிப்பது போன்ற பலவிடயங்களை உள்ளடக்கும். தனது வாழ்வுமுறையைத் தீர்மானிப்பதில் ஆட்சியாளரின் தலையீட்டு எல்லை என்பதைப் பொறுத்து இந்த liberalism த்தின் எல்லை தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு liberalism, அதனைவிட விரிந்த neo liberalism என்கின்ற விடயங்கள் வருகின்றன. இந்த liberalism த்தைக் கட்டுப்படுத்துவதில் socialism இத்தின் பங்கு- அதாவது welfare state இன் பங்கு போன்றவை இருக்கின்றன.

வாக்குரிமை

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் எங்கோ ஓர் இடத்தில் சம உரிமையுடன் வாழுகின்ற தகுதி இருக்கின்றது. அத்தகுதி ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் இருக்க முடியாது.

இருவரில் இருந்து பெருகிய மனித இனம் உலகின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்கு அவன் சில தலைமுறைகளாக வாழ்கின்றானோ அது அவனது முழு உரிமையுடைய வாழ்விடமாகும்.

நாடுகள் என்ற கோட்பாடு மனித தொடக்கத்தில் உருவானதல்ல. பிற்காலத்தில் உருவானதாகும். காலப்போக்கில் நாட்டின் பிரஜை என்ற கோட்பாடு உருவாகியது. இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் அங்கு சம உரிமை இருக்கின்றது.

ஜனநாயகத்தில் ஒரு நாட்டுப்பிரஜைகள் தனது ஆட்சியாளரைத் தீர்மானிப்பதற்கு வழங்கப்படுகின்ற அந்த உரிமைதான் வாக்குரிமையாகும். எல்லாரும் சமம் என்பதனால்தான் எல்லோருக்கும் ஒரேவிதமான வாக்குரிமை வழங்கப்படுகிறது.

பெரும்பான்மை தத்துவம்

தனது ஆட்சியாளரைத் தீர்மானிக்கின்ற உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கின்றது. அதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு ஆட்சியாளன் இருக்கமுடியாது. இந்தக்குழப்பத்தைத் தவிர்க்க உருவான கோட்பாடுதான் பெரும்பான்மைத் தத்துவம் என்பதாகும்.

அதாவது 100 பேரில் 51 பேர் ஒரு முடிவையும் 49 பேர் மாற்றுமுடிவையும் எடுத்தால் 51 பேரின் முடிவு செல்லுபடியாகும். இங்கு 51 பேருக்கும் 49 பேருக்குமிடையில் ஓர் மறைமுக உடன்பாடு ஏற்படுகின்றது. அதாவது உங்கள் 51 பேரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்; அடுத்த தடவை நாங்கள் 51 பேராக மாறும்போது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்பதாகும். இதுதான் பெரும்பான்மைத் தத்துவத்தின் அடிப்படையாகும்.

ஜனநாயகம் செயற்படுவதென்பது இந்த பெரும்பான்மைக் கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலமாகும். அதேநேரம் இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலவீனமுமாகும். இன்று ஜனநாயக உலகில் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணியே இப்பெரும்பான்மைவாதக் கோட்பாடே!

இந்தப்பெரும்பான்மை என்பது அரசியல் கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மையே தவிர இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை அல்ல. அதேநேரம் இந்த அரசியல் பெரும்பான்மை அரசியல் சிறுபான்மையை அடக்கியாள முற்படுவதை “ Tyranny of Majoritarianism என்பார்கள். அதனை ஒரு சில அடிப்படை விடயங்களிலாவது தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுதான் Doctrine of Constitutionalism. இது ஒரு சட்ட ஆய்வுக் கட்டுரை இல்லையென்பதனால் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

ஜனநாயகம் என்பதே ஒரு அரசியல் கோட்பாடாகும். இங்கு பேசப்படவேண்டியது அரசியல் பெரும்பான்மை, அரசியல் சிறுபான்மை என்பனவாகும். ஆனால் சிறுபான்மைகள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நாடுகளிலெல்லாம் அவை இன, மொழி, மத, சாதி போன்ற ரீதியான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

இவற்றிற்கு காரணம் என்ன? இவற்றிற்கு தீர்வு என்ன? இவற்றை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான கருப்பொருளாகும்.

ஜனநாயகம் தவறாகப் பயன்படுத்தப்படல்

மேலே பார்த்ததுபோல் ஜனநாயகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிப்பதாகும். எனவே இங்கு முடிவுகள் கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆட்சிக்காக போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவர் என பெரும்பான்மை நினைக்கிறதோ அவர் ஆட்சியாளராக வேண்டும்.

இங்கு கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மை, அதாவது அரசியல் பெரும்பான்மையே மையப்பொருளாகும். அப்பொழுதுதான் இன்று 49 பேராக இருப்பவர்கள் நாளை 51 ஆகவும் 51 பேராக இருப்பவர்கள் 49 ஆகவும் மாறமுடியும். ஆனால் அதிகமான பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்கு இடமே இல்லை; வெளியில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மையாக தோற்றியபோதும்.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது.

இங்கு கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்குப் பதிலாக இன, மொழி, மத என்று வேறுவகையான பெரும்பான்மையே இந்த “பெரும்பான்மை” என்ற சொல்லை தனதாக்கிக்கொள்கிறது. கருத்தினடிப்படையிலான “பெரும்பான்மைக்கு” அங்கு இடமில்லை.

இதனாலேயே ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இரண்டு வகையான நிரந்தர இனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆளும் இனம் ஆளப்படும் இனம் என இரு நிரந்தர இனம் இருக்குமாயின் அது அடிப்படை ஜனநாயக கோட்பாட்டிற்கு முரணானது. அது ஜனநாயகமாக இருக்க முடியாது.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது. ஆனால் அதனை யாரும் உணர்வதில்லை.

போலிப்பெரும்பான்மை ஜனநாயக் கோட்பாடு

பல்லின சமூகம் வாழுகின்ற பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் “ கருத்தியல் பெரும்பான்மை” என்பதில் உள்ள “ கருத்தியல் “ என்ற சொல் நீக்கப்பட்டு “ பெரும்பான்மை “ என்ற சொல் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

அதாவது, இன, மத, மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஒரு சமூகக்குழு அந்தப்பெரும்பான்மை என்ற சொல்லை தனது சமூகத்திற்குரியதாக வரித்துக்கொள்கிறது. இதனால் அந்த சமூகம் நிரந்தர ஆளும் சமூகமாக மாறுகிறது. கருத்தியல் பெரும்பான்மையை அந்த சமூகத்திற்குள் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த சமூகக்குழுவின் அடையாளங்களிலிருந்து மாறுபட்ட ஏனைய சிறுபான்மையோர் ஆளப்படும் நிரந்த வர்க்கமாக மாற்றப்படுகிறார்கள்.

உதாரணமாக, ஆளப்படும் இனத்தில் இருந்து ஆட்சிசெய்வதற்கு எல்லாவகையிலும் அதிசிறந்தவராக கருதப்படக்கூடிய ஒருவர் போட்டியிட்டாலும் அவர் ஆட்சியளராக தெரிவுசெய்யப்பட முடியாது; ஏனெனில் கருத்தியல் பெரும்பான்மைக்கு அங்கு இடமில்லை. மாறாக, அவரைவிட பலவகையில் தகைமை அல்லது ஏற்புடைமை குறைந்தவராக இருந்தாலும் அவர் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்தான் ஆட்சியாளராக வரமுடியும்.

பெரும்பான்மைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர் போட்டியிடும்போது அவர்களுக்குள் யார் ஆட்சியாளர் என்பதில்தான் கருத்தியல் பெரும்பான்மைக் கோட்பாடு வேலை செய்கின்றது.

எனவே, இந்த ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலயீனமே “ ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இருவகை இனங்களை உருவாக்குவதாகும். ஆனால் அதன் அடிப்படைத் தத்துவம் அதுவல்ல. அது நிரந்தர ஆளும் இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் கருத்து நிரந்தரமானதல்ல.

மறுபுறம், ஒரு ஜனநாயக நாட்டில் சகலரும் சமம் என்றால் சமூகம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எந்தவொரு பிரஜைக்கும் ஆட்சியாளராக வரும் உரிமை இருக்கவேண்டும். அவரின் தகமை, கொள்கை, ஏற்புடமை என்பனதான் அவரைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கவேண்டும். ஆனால் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவு தகைமையுடையவராக இருந்தாலும் அவர் சிறுபான்மை என்பதற்காக ஆட்சியாளராகும் தகுதியை இழக்கின்றார் சட்டத்தில் அத்தகுதியீனம் இல்லாதபோதும்கூட.

எல்லோரும் சமம் என்றால் எவ்வாறு நிரந்தரமான ஆளும் இனம், ஆளப்படும் இனமென இருவர்க்கங்கள் உருவாக முடியும். ஜனநாயகத்தின் இப்பலயீனம்தான் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படையாகின்றன. அறிஞர்கள் ஜனநாயகம்தான் சிறந்தமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றுள், குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.

எல்லோரினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு புதியமுறை ஒன்றை உருவாக்கமுடியுமா? என்பது எதிர்கால ஆராய்ச்சிகளில் தங்கியிருக்கின்றது. ஆனாலும் தற்போதைக்கு சில தீர்வுகளாகத்தான் மனித உரிமைக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் ஆட்சி, ஐ நா மனித உரிமை ஆணையம் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையும் மீறியதாகவே பெரும்பான்மை வாதத்தின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

சிறுபான்மை நிலைப்பாடு


ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்பது ஜனநாயகத்தின் பலயீனத்தில் இருந்து பிறக்கும் கோட்பாடானபோதிலும் சிறுபான்மைகள் பெரும்பான்மை இனத்தை ஆளும் இனமாக ஏற்றுக்கொள்வதில் ஒருபோதும் மறுப்புத் தெரிவிப்பதில்லை.

சிறுபான்மையைச் சேர்ந்தோர் ஒருபோதும் தாம் ஆட்சியாளராக வரவேண்டுமென்று கேட்பதில்லை. மாறாக பெரும்பான்மையை ஆளும் இனமாக தாராளமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கே ஆட்சியாளராக வர இவர்களும் இணைந்து சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்.

முரண்பாடு

மனிதன், பிரஜை என்ற அடிப்படையில் சம உரிமை இருந்தும் ஆளும் வர்க்கம் என்ற பெரும்பான்மையின் அந்தஸ்த்தை சிறுபான்மையும் ஏற்பதையே சகவாழ்வின் பெரும்பேறாக பெரும்பான்மை கருதவேண்டும். ஆனால் ஆளும் இனம் தன்னை முதல்தர பிரஜைகளாகவும் நாடு அவர்களுக்குரியதாகவும் கருத முற்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.

சிறுபான்மைகளை அரவணைக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளை சிறுபான்மைகள் அரவணைக்க முற்படும்போது அடுத்த பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மைகளின் தயவின்றி தனிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையிடம் சிறுபான்மைக்கெதிரான உணர்வுகளை ஊட்டுகின்றனர்.

தம் அடிமனதில் தாம் ஆளும் இனம், சிறுபான்மை ஆளப்படும் இரண்டாம்தர பிரஜை என நினைக்கும்போது சிறுபான்மைக்கெதிராக அடக்குமுறையை அட்டாகாசங்களைக் கட்டவிழ்ப்பது அவர்களுக்கு இலகுவாகின்றது.

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றபோதிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது என்ற போதிலும் பெரும் ஊர்களையே அழித்தவர்களை சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்து இலகுவாக பிணையில் விடுவித்ததும் அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான சட்டங்களின்கீழ் சிறையில் வாடவைத்ததும் அதே மனோநிலைதான்.

பெரும்பான்மை வாதம்

இந்தப் பெரும்பான்மை வாதம் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மைகளின் தனித்துவ அடையாளங்களை, வாழ்வியல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து பெரும்பான்மையோரின் வாழ்வியல் முறைகளைத் திணிக்க ஏதுவாக இருக்கின்றது.

புதிய நாடுகள் உருவாதல்


இரண்டாம் உலகமகா யுத்தின்பின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குள் பல இன, மத, மொழி, காலாச்சார வேறுபாடுகளைக்கொண்ட பிரிவினர் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒரு தேசியமாக அடையாளம் கண்டார்கள். அந்நியரிடம் இருந்து சுதந்திரம்பெற்று ஒற்றுமையாக, ஒரு அரசிசயல் கருத்தின் அடிப்படையிலான தேசியமாக தம்மைத் தாமே ஆள முற்பட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

அதற்கு உடன்பாடில்லாதவர்கள் சுதந்திரத்தின்போதே பிரிந்து சென்றார்கள். உதாரணம் இந்தியா, பாகிஸ்தான். இவ்வாறு சுதந்திரம் பெற்றதன்பின் தம்மை ஒரு அரசியலடிப்படையிலான தேசியமாக கருதுவதற்குப் பதிலாக, கருத்தியல் பெரும்பான்மைக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை இனக்குழுக்கள் ஜனநாயகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் ஆளப்படும் இனங்கள் மீது நேரடி, மறைமுக அடக்குமுறைகளை கையாண்டார்கள். இதன் விளைவாக புதிய தேசியக்கோட்பாடுகள், சுயநிர்ணய உரிமை போன்ற தத்துவங்கள் முன்னுரிமை பெற்றன. நாடுகள் பிரிந்தன.

இலங்கையின் அனுபவம்

சுதந்திர இலங்கையிலும் இதே நிலைதான் தோன்றியது. தனிச்சிங்கள சட்டம்; தமிழருக்கெதிராக தொடராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள்; இவ்வாறான நிகழ்வுகள்தான் தமிழர்கள் தங்களை ஒரு தேசியமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ள ஒரு சமூகமாகவும் வலியுறுத்தும் நிலைக்குத்தள்ளி தனிநாட்டுப் போராட்டத்திற்கும் வித்திட்டது.

முஸ்லிம்கள்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியபோதிலும் அவ்வாறான போராட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை. முடிந்தளவு பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்துசெல்லவே முற்பட்டார்கள். ஆனால் யுத்தவெற்றி பெரும்பான்மை வாதத்தின் பிரதான இரையாக முஸ்லிம்கள் மாற்றப்படுமளவுக்கு இட்டுச் சென்றது.

பெரும்பான்மை வாதம் முஸ்லிம்களின் ஹலால் உணவைக் கேள்விக்குறியாக்கியது.

முஸ்லிம்களின் ஆடையைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களது தனியார் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களது தனித்துவ கட்சிமுறையைக் கேள்விக்குட்படுத்தியது.

அவர்களது வர்த்தகத்தைக் கேள்விக்குட்படுத்தியது.

இவ்வாறு பட்டியல் நீளும்.

இவ்வளவும் நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்களைப்போல் தனிநாடு கோரவில்லை. கோரவும் முடியாது. காரணம் அவ்வாறான புவியியல் சூழல் அவர்களுக்கு இல்லை.

பெரும்பான்மையைப் பகைத்துக்கொண்டு வாழமுடியாது. காரணம் அவர்களது மார்க்கம் அமைதி, சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவதே “ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்றுதான். மட்டுமல்ல, முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் சிதறிவாழுகின்ற சிறுபான்மை.

இந்நிலையில், ஜனநாயக் கோட்பாட்டின் பலம், பலயீனம் எவ்வாறானபோதிலும் பெரும்பான்மை சமூகத்தின் நிரந்தர ஆட்சியாளர் என்ற அந்தஸ்த்தை அங்கீகரித்து அழகுபார்ப்பதில் ஒருபோதும் எதுவித தயக்கமுமில்லாத ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித்துவ அடயளங்கள் ஏன் மறுக்கப்படுகின்றன? அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வு ஏன் கேள்விக்குறியாக்கப்படுகின்றது?

இவைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது. சபாநாயகர் முஸ்லிம்களின் ஆடைவிடயத்தில் ‘ இலங்கைக் கலாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அராபிய கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும்; எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயங்களில் இவ்வாறு உயர்மட்டத் தலைவர்களுக்கு மத்தியிலேயே தவறான புரிதல் இருக்கின்றது.

இவ்வாறு பல விடயங்களில் முஸ்லிம்கள் தொடர்பாக தவறான புரிதல்கள் இருக்கின்றன. இவற்றைத் தெளிவுபடுத்த நாம் காத்திரமாக எதையாவது செய்திருக்கின்றோமா? அரசியல்ரீதியாக நமது கடமைகளைச் செய்திருக்கின்றோமா?

இன்று நமது அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு இருக்கின்றது. அது சில சாதக விளைவுகளைத் தரக்கூடிய சில அடையாளங்கள் தெரிகின்றன. எனவே, இவ்வாறான தவறான புரிதல்களை நிரந்தரமாக களைவதற்கு அரசியல், சமூக ரீதியாக நாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் பங்களிப்புக்கள் என்ன?

இவைகள் தொடர்பாக நாம் விரிவாக ஆராயவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com