Saturday, April 13, 2019

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 4 + 5 வை எல் எஸ் ஹமீட்

சாதாரண சட்டங்களால் கையாளப்படவேண்டிய சிறிய குற்றங்கள்கூட பயங்கரவாதக் குற்றங்கள்

ஐ நா மனித உரிமை உயரதிகாரி ( Special Rapporteur on the promotion and protection of human rights and fundamental freedoms while countering terrorism) அரசுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் “வழமையாக சாதாரண சட்டங்களால் கையாளக்கூடிய சிறிய குற்றங்களைக்கூட ( ஒருவருடைய உயிருக்கு ஆபத்துவிளவிக்கக்கூடிய செயல், சுகாதாரத்திற்கு பாரதூரமான கேடுவிளைவிக்கக்கூடிய செயல், அத்தியாவசிய பொருட்கள், சேவைகளுக்கு இடையூறு விளைவித்தல்) இச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது; என சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக, ஹர்த்தால்கள் இடம்பெறும்போது வாகனங்களைத் தடைசெய்வதற்காக வாகனங்கள் வரும்போது மரக்கட்டைகளைகளை சிலநேரங்களில் ரோட்டில் உருட்டிவிடப்படுவதைக் காணுகின்றோம். இது குற்றம்தான். ஆனால் பயங்கரவாதமாகுமா? இது சாதாரணசட்டத்தினால் கையாளமுடியாதா?

புதிய சட்டத்தின்கீழ் ‘ வாகனம் வரும்போது அவ்வாறு மரக்கட்டையை உறுட்டிவிட்டது, வாகனத்திற்கு விபத்தை ஏற்படுத்தி உயிராபத்து விளைவிக்கக்கூடியது, என்று இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்.

இங்கு பொலிசார் விரும்பினால் இக்குற்றத்திற்கு சாதாரண சட்டத்தின்கீழும் கைதுசெய்ய முடியும், புதிய பயங்கரவாத சட்டத்தின்கீழும் கைதுசெய்யமுடியும். இதுபோன்ற விடயங்களால்தான் திரு G L பீரிஸ் அவர்கள் இச்சட்டம் ஒரு பொலிஸ் ராஜ்ஜியத்திற்கு இட்டுச் செல்லும்; என்று தெரிவித்திருக்கின்றார்.

மட்டுமல்ல, அவ்வாறு மரக்கட்டைகள் போட்டு ரோட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அத்தியாவசியமான உணவுப்பொருளை ஏற்றிக்கொண்டு ஒரு லொறி வந்து செல்லமுடியாமல் தடைப்பட்டிருக்கின்றது; என வைத்துக் கொள்வோம்.

இவ்வாறான நிகழ்வுகள் ஹர்த்தாலின்போது வழமையாக காணுகின்ற விடயம். அவ்வாறான சூழ்நிலையில் சாதாரணமாக பொலிசார் வந்து கட்டைகளை நீக்கி லொறி போவதற்கு வழிசெய்வார்கள். சில நேரங்களில் அங்கு வேடிக்கை பார்த்து நிற்கும் சிலரைக் கைதுசெய்து கொண்டுசென்று சில மணித்தியாலங்களில் விடுதலை செய்வார்கள்.

இவை நாம் சாதாரணமாக காணுகின்ற விடயம். புதிய சட்டத்தின்கீழ் அவ்வாறு வேடிக்கை பார்த்தவர்களைக்கூட பயங்கரவாத குற்றமிழைத்தவர்களாக கைதுசெய்யமுடியும். அதாவது “ அத்தியாவசிய சேவை விநியோகத்திற்கு இடையூறு விளைவித்தமை” என்ற அடிப்படையில்.

உண்மையில் கட்டை போட்டவர்கள் ஓடிவிடுவார்கள். வேடிக்கை பார்த்தவர்கள் மாட்டுப்படுவார்கள். ஆனால் நாங்கள் கட்டை போடவில்லை, வேடிக்கைதான் பார்த்தோம்; என பின்னர் நீதிமன்ற விசாரணையின் போதுதான் நீங்கள் நிறுவமுடியும். அதற்குமுன் கைது, தடுப்புக்காவல் என்று அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.

எனவேதான் இது ஒரு பயங்கர சட்டம்; என்று எல்லோரும் எதிர்க்கிறார்கள்.

கைது செய்யும் அதிகாரம்

தற்போதைய PTA யின் கீழ் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது எழுத்துமூல அதிகாரத்தின்கீழ் ஒரு S I தரத்திற்கு குறையாத ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே கைது செய்யமுடியும். புதிய CTA யின்கீழ் பொலிசார், முப்படையினர் மாத்திரமல்ல, கரையோர காவற்படையினரும் பயங்கரவாத குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்ய முடியும்.

யுத்த காலத்திலேயே போலீசாருக்கு மட்டும் இருந்த அதிகாரம் யுத்தம் இல்லாதபோது இவ்வளவு பேருக்கும் எதற்காக? நோக்கம் என்ன? இதனை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 5 Counter Terrorism Bill and Its Impact-Part 5

பாகம் 4 இல் பயங்கரவாத குற்றமாக மேற்படி சட்டத்தில் கருதப்படக்கூடிய சில விடயங்களைப் பார்த்தோம்.

அதில் சாதாரண சட்டங்களால் கையாளப்படக்கூடிய சாதாரண அல்லது சிறிய குற்றங்களைக்கூட பயங்கரவாத குற்றமாக இச்சட்டத்தின்கீழ் கருதமுடியுமெனப் பார்த்தோம்.

பிரிவு 13இல் அக்குற்றங்களை இழைப்பதற்கு ஆயத்தம் செய்கிறார், அல்லது உதவுகிறார், என்று ஒருவருக்கு நம்புவதற்கு காரணம் இருந்தும் அந்தத்தகவலை அவர் அருகேயுள்ள பொலிசிற்கு அறிவிக்காவிடின் அதுவும் பயங்கரவாதக்குற்றமே!

அதாவது X என்பவர் ஒரு பயங்கரவாத குற்றத்தைப் புரியப்போகிறார் அல்லது புரியப்போகின்றவருக்கு உதவுகிறார். அவ்வாறு Y நம்புவதற்கு காரணம் இருக்கின்றது; என பொலிசார் நினைக்கின்றனர். ஆனால் Y பொலிசுக்கு தகவல் வழங்கவில்லை. இப்பொழுது அவர் இப்பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படலாம்.

இங்கு, குற்றவாளியா இல்லையா என முதலில் பொலிசார்தான் தீர்மானிக்கிறார்கள். அதன்பின் தடுப்புக்காவல் போன்ற அனைத்து வேதனைகளையும் அனுபவித்தன்பின் நீதிமன்றத்தில் நியாயங்களை முன்வைத்து விடுதலைபெற முயற்சிக்கலாம்.

சுருங்கக்கூறின் அருவாக்காட்டு குப்பை கொட்டுவதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் சிலவேளை யாராவது பஸ்ஸிற்கு கல்லெறிந்தால் அவரை பயங்கரவாதியாக கருதலாம். அல்லது கல்லெறிய அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; ஆனாலும் அவர் கல்லெறிய ஆயத்தம் செய்தார்; என கைதுசெய்யலாம். மட்டுமல்ல, இவர் கல்லெறியப்போகிறார்; என்பது இன்னொருவருக்குத் தெரிந்தும் அவர் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை; என அவரையும் கைதுசெய்யலாம். இவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளே!

ஐ நா மனித உரிமை உயரதிகாரி குறிப்பிடும்போது, பொலிசார், கடலோர காவல் படையினர் மற்றும் முப்படையினர் பல தரப்பட்ட செயற்பாடுகளை பயங்கரவாதமாகவும் அவற்றோடு நேரடியாக அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டார்; என ஒருவரை இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்ய முடியும்; எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உண்மையான பயங்கரவாதக் குற்றங்களே பயங்கரவாதமாக கருதப்பட வேண்டும். இவ்வாறான சட்டங்கள மூலம் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும்போது, ஒரு குற்றம் ஏன் பயங்கரவாதமாக கருதப்படவேண்டும், அதற்குரிய சட்டப்பின்னணி என்ன? அந்தக்குற்றம் பயங்கரவாதமாக கருதப்படவேண்டிய அளவு முக்கியமானதா/ பாரதூரமானதா? என்பவை சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; எனவும் தெரிவித்திருக்கின்றார்.

பிரிவு 14 இன்கீழ் ஒரு பயங்கரவாத குற்றத்தை விசாரிக்கின்ற ஒரு பொலிஸ் அதிகாரி இன்னுமொருவரிடம் அது தொடர்பாக சில தகவல்களைக் கோரும்போது அவர் பிழையான தகவல்களை வழங்கினார்; என சந்தேகித்தால் அவரையும் கைதுசெய்யமுடியும். அவரும் பயங்கரவாதியே!

அதேநேரம் பிரிவுகள் 15 மற்றும் 27 இன்கீழ் பொலிசார், கடலோர காவல் மற்றும் முப்படையினர் பயங்கரவாதக் குற்றம் புரிந்தார்; என்ற குற்றச்சாட்டில் வாறண் இல்லாமல் யாரையும் கைதுசெய்ய முடியும், அவை உண்மையான பயங்கரவாதக்குற்றமாக இல்லாதபோதிலும்கூட.

பிரிவு 17 மேற்படி தரப்பினருக்கு கைதுசெய்வதற்கு அதீத அதிகாரத்தை வழங்குகின்றது.

பிரிவு 27 இன்கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் நிதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். அவருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டிருக்குமாயின் அதனை அங்கீகரித்தே ஆகவேண்டும்.

இங்கு நீதிபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. இதேபோன்றதொரு நிலை பிரிவு 39(4) இன் கீழும் காணப்படுகின்றது.

இவ்விடயங்கள் குறித்து ஐ தா மனித உரிமை அதிகாரி குறிப்பிடும்போது, ஒருவர் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும்போது அவருக்குத் தடுப்புக்காவல் உத்தரவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் வழங்கப்பட்டால் அவ்வாறு தடுப்புக்காவல் அவசியமா? அது சட்டத்திற்கு ஏற்புடையதா? அது அவர் செய்த குற்றத்திற்கு பொருத்தமானதா? என்பவற்றைத் தீர்மானிக்கக்கூடிய முழுமையான அதிகாரம் நீதித்
துறைக்கில்லை; எனத் தெரிவித்திருக்கின்றார்.

(தொடரும்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com