Saturday, March 23, 2019

சர்வதேச நீதிமன்றுக்கு இடமில்லை. ஜெனீவாவில் இலங்கையில் சுயாதீனத்தை உறுதிபடுத்தியுள்ளோம். ரணில்

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான எந்தவொரு வெளிநாட்டு நீதி பொறிமுறைக்கும் நாம் இடமளியோம் என்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஜெனீவா தொடரில் நிராகரித்ததன் மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதப்பட்டுள்ளார்.

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் 67வது நினைவு அஞ்சலிக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே, பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.

'தேசபிதா டி.எஸ் சேனநாயக்க கொள்கை வழியில்தான் நாம் பயணிக்கிறோம் என்பது நேற்று கூட (நேற்று முன்தினம்) உறுதிப்படுத்தப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், கலப்பு நீதிபதிகளையும் உள்ளடக்கிய பொறிமுறை அவசியம் என, ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார். இலங்கை ஜனநாயக நாடு, சுயாதீன நீதிக்கட்டமைப்பு உள்ளதென தெரிவித்து, வெளிவிவகார அமைச்சர் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகமொன்றை இலங்கையில் அமைக்க வேண்டியதில்லை. மனித உரிமை ஆணையாளர் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரலாம் என்று, அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இடமளிக்கப்படாது. எவராவது தவறிழைத்தது உறுதிசெய்யப்பட்டால், உள்நாட்டிலேயே வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். எமது அரசு படையினரை தண்டிப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஐ.நா அமைதிப்படைக்கே நாம் படையினரை அனுப்பியுள்ளோம்' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com