Thursday, February 14, 2019

வடக்கில் தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு - ஐ.நா வதிவிடப் பிரதிநிதிக்கு ஆளுநர் தெரிவிப்பு

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினை, தேவையாகவுள்ள வீடுகள் மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அண்மைக்காலத்தில் வட மாகாணத்தில் பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால் அதுதொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்தியாவில் அகதிகளாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியையும் எதிர்பார்ப்பதாக ஆளுநர் கோரிக்கை விடுத்தார். அத்தோடு வட மாகாணத்தில் ஐ.நா மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்த ஆளுநர், இறுதி போரின்போது பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால், இந்த மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து அம்மக்கள் வெளியே வரக்கூடிய செயற்திட்டங்களையும் முன்னெடுக்குமாறு ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது கருந்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதி, ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆரோக்கியமாக அமைந்திருந்ததுடன் ஆளுநருடைய கோரிக்கைகள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்துவதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com