Sunday, February 10, 2019

போலியான தகவல்களை வழங்கி, நட்டஈடு பெற, சிலர் முயற்சிக்கின்றனர் - அமைச்சர் ஹரிசன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களை வழங்கி, பலர் நட்டஈடு பெற முயற்சிப்பதாக, விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் வடக்கிலுள்ள நெற்செய்கையாளர்கள் வெள்ளத்தால், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நட்டஈடு வழங்க, தாம் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல் 14 நாட்களுக்குள் நட்டஈடு வழங்கப்படாவிட்டால், அவர்கள் முறைப்பாடு பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சேதங்கள்,அழிவுகள் தொடர்பில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு, தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. முழுமையான அழிவு, பகுதி அளவிலான அழிவு, சிறிய சேதம் என்று பல கட்டங்களாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் 50 ஆயிரம் நெற்செய்கை வெள்ளத்தால், அழிவடைந்துள்ளன. இதற்கமைய முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 40 ரூபாய் வழங்கப்படும் என, அமைச்சர் கூறினார். இந்த நடவடிக்கை எதிரவரும் 14 ஆம் திகதி முதல், 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். இந்த நட்டஈடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அலுவலகங்களில் வைத்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வெள்ளத்தால், சோள பயிர்செய்கையும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். சோள பயிர்செய்கையும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பின், பிரதேசத்திற்கு பொறுப்பான மாவட்ட செயலர், தமக்கு பரிந்துரைத்தால், நிச்சயமாக அவர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க தயாராக உள்ளதாக, விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டார்.

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால், 1600 மாடுகளும், 700 ஆடுகளும், 5000 கோழிகளும் இறந்துள்ளன. இவற்றின் மொத்த பெறுமதி 55 மில்லியன் ரூபாய்களாகும். எனவே இதற்கான நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனினும் உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே எம்மால் நட்டஈட்டை வழங்க முடியும். பலர் தமக்கு பொய்யான தகவல்களை வழங்கி நட்டஈட்டை பெற முற்படுவதாகவும், அவர்களுக்கு எந்தவித நட்டஈடும் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்த, விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர் முகாமைத்துவம், கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசன், போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com