Wednesday, February 6, 2019

யாழ் மாணவர்களின் கொலை குற்ற விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மனு மீதான விசாரணைகள், யாழ்ப்பாண நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர், நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

அதே போன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், வழக்குத் தொடுனர் தரப்பில், அரச சட்டத்தரணியும் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர், கொக்குவில் பகுதியில் வைத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஆனால் 11 மாதங்கள் கடந்து, அவர்களை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. பின்னர் அந்த காவல்துறையினர், பொலிஸ் சேவையிலும் மீள இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அத்துடன் வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த ஐவரில், இரண்டாவது சந்தேக நபரான ஏக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபரான தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபரான கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

அதேபோன்ற கடமைக்கு பொறுப்பாக இருந்த முதலாவது சந்தேகநபரான சரத் பண்டார திசாநாயக்க மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேக நபரான சமர ஆராய்சிலாகே சந்தன குமார ஆகிய இருவருக்கும் எதிராக, இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296 ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ், குற்ற பத்திரத்தை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம், விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com