Saturday, February 9, 2019

4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாவை விழுங்கி, ஏப்பம் விட்டவர் யாராக இருப்பார்? - யாழ் மாநகர சபையின் ஊழல் அம்பலமானது.

யாழ்ப்பாணம் நல்லூர் உற்சவ காலத்தின் போது யாழ் மாநகர சபையினால் பொருத்தப்பட்ட பாதுகாப்புக் கமராக்களுக்கான ஒப்பந்தத்திற்கு, அதிக நிதி செலாவானதாக காட்டப்பட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த விடயம் குறித்து, நேற்று இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், கேள்வி எழுப்பிய போதே, இந்த ஊழல் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நல்லூர் உற்சவகால திருவிழாவின் போது, நல்லூர் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்புக் கமராக்களை பொருத்துவதற்கு கோரப்பட்டது. இதனை அடுத்து, குறித்த பணிகளை முன்னெடுப்பதற்காக சில நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் இயங்கும் நிறுவனம் ஒன்றிடம் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தும் பணி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த நிறுவனத்திற்கு யாழ் மாநகர சபையால் 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் கொடுப்பனவான வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து யாழ் மாநகரசபையில் நடைபெற்ற அமர்வின் போது நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருந்த நல்லூர் ஆலய வரவு செலவு அறிக்கை ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

அதனை அவதானித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன், நல்லூர் சூழலில் பாதுகாப்புக் கமரா பொருத்திய செலவாக 10 இலட்சத்து 76 ஆயிரத்த 480 ரூபாய் கணக்குக் காட்டப்பட்டிருந்தமை தொடர்பில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தினருடன் தொடர்பு கொண்டு வினவினார்.

இதன்போது குறித்த கண்காணிப்புக் கமரா பொருத்தும் நிறுவனத்தினர் வழங்கிய தகவல் உறுப்பிரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையினால், குறித்த நிறுவனத்திற்கு வழங்கிய தொகையை விட அதிகமாக 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபாய் பணம் செலவு செய்யப்பட்டதை அறிந்த அவர், நேரடியாக அந்த நிறுவனத்தினரைச் சந்தித்து கலந்துரையாடிய போது, தாம் சமர்ப்பித்து வழங்கப்பட்ட பற்றுசீட்டு பிரதிகளை குறித்த நிறுவனத்தினர், உறுப்பினருக்கு, வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நேற்றைய அமர்வின் போது குறித்த விடயத்தைப் பிரஸ்தாபித்த உறுப்பினர் பார்த்திபன், பாதுகாப்புக் கமராக்கள் பொருத்துவதற்கென 6 இலட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், செலவு அறிக்கையில் 10 இலட்சத்து 76 ஆயிரத்த480 ரூபாய் செலவிடப்பட்டதாக கணக்கிடப்பட்டு, மோசடி இடம்பெற்றதை சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து சபையில் பிரசன்னமாகியிருந்த கணக்காளரைப் பதிலளிக்குமாறு, முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவிட்ட நிலையில், அது தொடர்பில் உடனடியாக தமக்கு பதிலளிக்க முடியாது எனவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தவறுகள் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முதல்வர் ஆர்னோல்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை குறித்த கமராக்களைப் பொருத்திய நிறுவனம், யாழ் மாநகர சபைக்குச் சமர்ப்பித்த கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கும் திகதிக்கு முன்னர் உடைக்கப்பட்டு, போட்டி நிறுவனம் ஒன்றிற்கு வழக்கப்பட்டது.

குறித்த போட்டி நிறுவனம், அதன் பிரதியை பாதுகாப்புக் கமராக்களை வழங்கும் சீன நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதனடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்புக் கமராக்களை பொருத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், ஆரம்பத்தில் ஒப்பந்தமான நிறுவனத்தினருடான பணிகளை சீன நிறுவனம் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், சபையின் கவனத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரான சி.தனுஜன் கொண்டு வந்தார்.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பில் தானும் அறிந்ததாகவும் இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான லோக தயாளன் குறிப்பிட்டார். இந்த நிலையில் இவை தொடர்பிலும் ஆராய்வதாக சபை முதல்வர் ஆர்னோல்ட் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com