ஜனநாயகத்தை மீறியவர்களே இப்போது அரசாங்கத்தை பற்றி விமர்சிக்கின்றனர் – ரணில்.
நாட்டில் 18 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக ஜனநாயகத்தை மீறியவர்களே இப்போது அரசாங்கத்தை பற்றி விமர்சித்து வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றில் விவாதமொன்றுக்கும் செல்லத் தாம் தயார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, பிரதமர் இதனை கூறினார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு என்ன நடந்தது என எம் அனைவருக்கும் தெரியும். 17 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தான் கொண்டு வந்தோம்.
ஆனால், மஹிந்த அரசாங்கம் 18 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து அனைத்தையும் மாற்ற முயற்சித்தார்கள். இதன் விளைவாகவே, மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வியடைந்தார்.
தற்போது உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து வருகிறார்கள். யார் இதற்கெல்லாம் காரணம்? ஜனநாயகத்தை மீறியவர் யார்?
அனைத்துக் குற்றங்களையும் செய்து விட்டு நீதித்துறையையும் சட்டத்தரணிகளையும் விமர்சிப்பதில் என்ன பயன்? இதற்கு நாம் இடமளிக்க முடியாது.
அத்துடன் தற்போது அரசியலமைப்புச் சபையினாலேயே அனைத்து நியமனங்களுக்கும் சுயாதீனமாக வழங்கப்பட்டுள்ளன“ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment