Sunday, January 27, 2019

புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை - விசேட விசாரணைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளவேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

2019 ம் ஆண்டுக்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உரிய நேரத்தில் மாணவர்களுக்கான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகள் கிடைக்காமை காரணமாக மேல், வட மத்திய, மத்திய மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் 97 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான புத்தங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் பத்மினி நாலிகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கையேடுகள், அச்சகத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்களுக்கான கையேடுகள் விநியோகிக்கப்படுவதாகவும் பத்மினி நாலிகா தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் கிடைக்காத பட்சத்தில் பாடசாலை அதிபர் ஊடாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com