Sunday, January 27, 2019

பதவி ஆசை பிடித்தவர்களின் பட்டியலில், சம்பந்தனும் நுழைந்து விட்டார். எதிர்கட்சித் தலைவர்.

பிரதமர் நகரும் பாணியில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் தனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்கொள்ளத் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் போன்று பதவி ஆசை பிடித்தவர்கள் பட்டியலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்து கொண்டதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து பறிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டமை அநீதியான செயலென்றும், எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருப்பதற்கு, மஹிந்த ராஜபக்ச தகுதி இல்லாதவர் என்றும் , கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பித்து உரையாற்றியிருந்தார்.

இந்த நிலையில் சம்பந்தனின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை நான் கேட்டு வாங்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரிந்துரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபாநாயகர் எனக்கு வழங்கியிருந்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கின்ற போதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்தனர்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது பதவிக்கு எதிராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அதனை சந்திக்க தாம் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com