Thursday, December 20, 2018

இரவு இராணிகளும் அன்ரன் பாலசிங்கமும்

நான் வாழும் மொன்றியால் நகரில் சென் கதரீன் வீதி, ரொறன்ரோ நகரில் குயீன் வீதி ஆகியவற்றில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை இரவு பகலாக காணலாம். இதில் பலர் விபச்சாரிகள் அல்ல. போதைப் பொருளுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் துன்பப்படும் பெண்களே அதிகம்.வேலையற்ற இவர்கள் போதைப் பொருள் வாங்க பணம் தேவைப்படுவதால் உடலை விற்பவர்கள். அவர்களுக்கு தேவை பணம் அல்ல. போதைப் பொருள். பணம் சம்பாதிக்க உடலை விற்பவளே விபச்சாரி.

இந்த வகையான பெண்கள் தமது போதைப் பழக்கத்தால் தம்மையும் சமூகத்தையும் அழிப்பதை உணருவது இல்லை. அதை உணர அந்தப் போதையும் விடுவதில்லை.

அன்ரன் பாலசிங்கமும் இதே வகையைச் சேர்ந்தவர்தான். அவருக்கு போதை அருந்துவது, சுகபோகமான வாழ்வு இவைகளே பிடித்தமானவை. இதற்காகவே புலிகளோடு ஒட்டிக் கொண்டார். இவரை சிலர் கலாநிதி என்றார்கள். சிலர் மாக்சிசவாதி என்றார்கள். தத்துவஞானி என்றார்கள். ஆனால் எதற்குமே பொருத்தமில்லாத மனிதராகவே வாழ்ந்தார்.

இவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பது புரியவில்லை. போராட்டத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? மாக்சிசத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

இவர் ஒரு மாக்சிசவாதி என்றால், புரட்சிவாதி என்றால் ரெலோ மீது தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த கொடூரமான சம்பவங்களை கண்டித்திருப்பார் அல்லது மன்னிப்பையாவது கோரியிருப்பார். ஏனைய அமைப்புகளையாவது இயங்க அனுமதித்து இருப்பார். இஸ்லாமிய மக்களை வெளியேற்றுவதை தடுத்திருப்பார்.

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. புலிகள் எத்தனை அப்பாவி மக்களைக் கொன்றார்கள். எத்தனை கிராமங்களுக்கும் புகுந்து படுகொலைகள் செய்தார்கள். இந்த தவறுகளுக்கு நியாயம் சொன்னார். தவறுகளை கண்டுகொள்ளவே இல்லை. ஆரம்பம் முதல் தவறுகள் தொடர்ந்து கொண்டே வந்தன. இதை கண்டிக்கவோ, திருத்தவோ இல்லை.

பாலசிங்கம் செய்தது, சொன்னது எல்லாம் பிரபாகரனுக்கு எது பிடிக்குமோ, எப்படி பேசினால் பிடிக்குமோ அப்படி நடந்து கொண்டார். தனக்கு எது தேவையோ அவற்றை அவர் பெற்றார். இதேபோல தமிழர்களுக்கு எப்படிப் பேசினால் பிடிக்கும் என்பதையும் நன்கறிந்து இருந்தார்.

தனது அமைப்பை, போராட்டத்தை, மக்களை என்றைக்குமே பண்படுத்த முயலவில்லை. விரும்பியதும் இல்லை. ஒரு பயங்கரவாத அமைப்பாக தொடர்வதை வேடிக்கை பார்த்தார். ஒவ்வொரு பயங்கரவாத செயல்களுக்கும் நியாயம் தேடிக் கொடுத்தார்.

புலிகளைப் பொறுத்தவரை பல அராஜகங்களை செய்தார்கள். அத்தனைக்கும் மௌனமே அவரது பதிலாக இருந்தது. ஒரு சராசரி மனிதனாகக்கூட அவரால் செயற்பட முடியவில்லை. அவரை பிரபாகரனால் இயக்கப்பட்ட இயந்திரமனிதன் (றொபோ) என்றும் கூறலாம்.

அவருக்கு தமிழர் பிரச்சினையும் தெரியாது. இலங்கை அரசியலும் தெரியாது. பிரபாகரனுடைய உடல், உள மொழிகளை நன்கறிந்து பேசுகின்ற மனிதனாகவே இயங்கினார்.

இந்த சுய உணர்வற்ற மனிதனை உயர்த்துவதன்மூலம் சமூகத்தில் வரவேற்பை கைதட்டல்களை பெற முயலும் மனிதர்கள் இன்றும் உள்ளனர்.

தன்னுடைய போதை சுகபோக தேவைகளுக்காக தன்னிடம் உள்ள ஆங்கில அறிவை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் விற்ற அற்ப மனிதனே அன்ரன் பாலசிங்கம். போதைப் பொருள் வாங்க உடலை விற்று பணம் பெறும் பெண்களைப் போன்ற ஒரு மனிதனே அன்ரன் பாலசிங்கம்.

விஜய பாஸ்கரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com