Thursday, October 18, 2018

பத்திரிகையாளர் ஜமால் சவுதி அரேபிய தூதரகதினுள்ளேயே கொலை செய்யப்பட்டார். அடித்துக்கூறுகின்றது துருக்கி.

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜியை சவுதி அரேபியா ஏவிவிட்ட நபர்கள் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்து விரலை துண்டித்து கொலை செய்ததாக துருக்கி புதிய புகாரை தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் துருக்கி அரசு பத்திரிக்கையான யேனி சபாக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

‘‘எங்களுக்கு கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள்படி, சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால்கள் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். 7 நிமிடங்கள் வரை இந்த சித்ரவதை நீண்டுள்ளது. பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரங்கள் சவுதி அரேபியா தூதர் முன்னிலையில் நடந்துள்ளது.

தூதரகத்தினுள் கொலை நடந்தால் தானும் சிக்கிக் கொள்வோம் என அஞ்சிய அவர் அதனை வெளியே சென்று செய்யுமாறு கூறுகிறார். மற்றொரு நபர் அவரை மிரட்டுகிறார். நாங்கள் கைப்பற்றியுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளன’’ என தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்எச்சரித்தார். சவுதியை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகளும் சபையும் கடுமையாக விமர்சித்துள்ளன.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தது.

ஜமால் விவாகாரம் தொடர்பாக சவுதி அரசரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். மேலும், சவுதி மன்னரை சந்திக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை ட்ரம்ப் அனுப்பி வைத்தார். இதனால் சவுதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. கோபத்தை தணிக்கும் முயற்சியாக பாம்பியோ சவுதி அரேபியா சென்று பேச்சுவார்த்தை நடததினார்.

அதேசமயத்தில் அமெரிக்காவின் கோபத்தை தணிக்கும் பொருட்டு அந்நாட்டுக்கு சுமார் 1630 கோடி ரூபாயை சவுதி அரேபியா உதவி நிதியாக அளித்துள்ளது. சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாம்பியோ ரியாத் வந்த நாளில், சவுதி அரேபியாவால், அமெரிக்காவுக்கு இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பத்திரிகையாளர் ஜமால் படுகொலையில் ட்ரம்ப் உறுதியாக இல்லாமல், சவுதி அரேபியாவிடம் பணம் பெறும் நேரம் இதுதானா? என அந்த பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது. சவுதி பணம் அனுப்பியதற்கும், பாம்பியோ அங்கு சென்றதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com