Tuesday, September 25, 2018

தமிழ் தேசியம் என்ற கரும்போர்வையால் மூடி மறைக்கப்படும் போதநாயகியின் (தற்)கொலைக்கு கிடைக்குமா நீதி.

வவுனியாவைச் சேர்ந்த ஓர் உழைப்பாளியின் மகள், போதாநாயகி. (தற்)கொலை செய்து கொண்டதாக ஊடகங்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக செய்திகளை வெளியிட்டன. ஆனால் அவர் தற்கொலைதான் செய்துகொண்டிருந்தாலும் அதற்கான காரணங்களை தேட எவரும் முயற்சிக்கவில்லை மாறாக நம் ஊடகங்கள் தீர்பெழுதிமுடித்து விட்டது.

அத்துடன் போதாநாயகிக்காக நீதிகோருவோரது குரல்வளைகள் தமிழ் தேசிய ஊடகங்கள் என முத்திரை குத்திக்கொண்டவைகள் நெருக்கிக்கொண்டிருக்கின்றது. அதற்கான காரணம் வேறொன்றும் அல்ல. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அக்கொலை அவரதும் கரத்தை பிடித்தவர், அயோக்கியர்கள் இறுதியா தஞ்சமடையும் „தமிழ் தேசியம்„ என்ற முகாமைச் சேர்ந்தவரென்பதாகும்.

ஆனாலும் போதாநாயகிக்கு நீதி வேண்டும் என்ற குரல்கள் தமிழ் தேசியப் பீரங்கிகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கைநெட் அதன் பாணியில் விடயம் தொடர்பில் தனது புலனாய்வினை மேற்கொண்டு மக்கள் மன்றில் சமர்பணம் செய்யும். அதேநேரம் போதாநாயகிக்காக முகநூலூடாக நீதிகோரும் சுப்ரமணிய பிரபா வின் மனுவினை வாசகர்களின் பரிசீலனைக்கு விடுகின்றோம்.

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் சாவுக்கு இதுவும் காரணம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரும் வன்னியூர் செந்தூரன் என்று அறியப்படுபவரின் மனைவியுமான நடராசா - போதநாயகி அவர்கள் திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்?
கொலை செய்யப்பட்டாரா?
அல்லது தற்கொலை செய்துகொண்டாரா?
என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.

எனினும் அவரின் சமீப கால முகநூல் பதிவுகளை பார்க்கும் போது பல கேள்விகளுக்கு விடை இருப்பதுபோல தோன்றுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் வன்னியூர் செந்தூரனை திருமணம் முடித்த போதநாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தந்தை தும்பு மிட்டாய் விற்றும் தாய் கூலி வேலைக்கு சென்றுமே அவரை படிப்பித்தனர். அச்சிறிய கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய முதல் மாணவி போதநாயகி நடராசா ஆவார். பல கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் கற்றுத்தேர்ந்து பட்டம் பெற்று பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியில் சேர்ந்த போதநாயகியின் வாழ்வு திருமணம் முடித்த ஆறே மாதங்களில் மண்ணோடு மண்ணாகிப்போனமைக்கு யார் காரணம்?

அவரை திருமணம் முடித்த வன்னியூர் செந்தூரனின் கடந்த காலமும் நிகழ்காலமும் பல திடுக்கிடும் அம்சங்களை கொண்டது. வெளியில் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, இன உணர்வாளராக காட்டிக்கொள்ளும் செந்தூரன் தனிப்பட்ட வாழ்வில் படு கேவலமான நடத்தை உடையவர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே வன்னியூர் செந்தூரன் பிரான்ஸ் வதிவிட உரிமை கொண்ட அவரிலும் வயதில் கூடிய ஒரு பெண்ணை முகநூல் ஊடாக காதலித்து இந்தியாவில் வைத்து பதிவுத்திருமணம் செய்தார். அப்பெண்ணிடம் இருந்து பல லட்சம் பணம் விலை கூடிய கைபேசி என ஏராளம் பெற்றுக்கொண்டு ஈற்றில் இவரை நம்பி வந்த அப் பெண்ணை இந்தியாவில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்று நண்பர்களால் காப்பாற்றப்பட்டார். தன் ஆற்றாமையையும் ஏமாற்றப்பட்டதையும் செந்தூரனின் உண்மை முகத்தையும் முகநூலில் ஆதாரபூர்வமாக எழுதி தனக்கு நீதி கிடைக்காது போயினும் இன்னொரு பெண் தன்னைப்போல எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாதென்று போராடினார்.

ஆனால் செந்தூரன் தன் மேல் போர்த்திக்கொண்டிருந்த தேசிய வேசத்தினால் அப்பெண்ணின் குரலை வலுவிழக்க செய்துவிட்டார். கவிஞர் மீதான காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார் மண முறிவு இயல்பானதுதானே இதிலென்ன புதுமை என்றெல்லாம் நியாயம் பேசினார்களேயொழிய அப்பெண்ணுக்கு ஆதரவாய் எவரும் குரல் கொடுக்கவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. போராடிப்பயனில்லை அவமானமே மிஞ்சும் என்று நினைத்த அவர் தானாக விழகிப்போனார். செந்தூரன் பொன்னாடை போர்த்திக்கொண்டு அடுத்த பெண் வேட்டைக்கு தயாரானார்.

பிரான்ஸ் பெண்ணை ஏமாற்றிய அடுத்து ஆண்டே (2017) அவர் லண்டனில் வசிக்கும் கணவனை இழந்த பெண் ஒருவரின் மகளை குறிவைத்து தன் நகர்வை மேற்கொண்டார். அப்பெண் இலங்கையிலும் தாய் லண்டனிலும் உள்ளனர். இலங்கையில் உள்ள அவரின் மகளை தான் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தை கூறியிருகிறார். லண்டனில் உள்ள அவர் வன்னியூர் செந்தூரனைப்பற்றி வெளியாட்களிடம் விசாரிக்க அவர் நல்லவர் வல்லவர் என்றே அனைவரும் கூறியிருக்கின்றனர். வெளி உலகுக்கு அவர் பிரான்ஸ் பெண்ணை பதிவுத்திருமணம் செய்த விடயம் தெரியாது முகநூலில் ஒரு சிறுவட்டத்துடனேயே அச்சம்பவம் முடிந்து போனது.

ஏற்கனவே தான் ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் செய்து கைவிட்டதை செந்தூரனும் அவரிடம் கூறவில்லை எனவே அவரை நம்பி மருமகன் மருமகன் என்று கூப்பிட்டிருகிறார் இவரும் மாமி மாமியென்று தேவை ஏற்படும் போதெல்லாம் போன் செய்து பேசி பணம் வாங்கி இருக்கிறார். அப்பெண் கணவரை இழந்தவர் மிகவும் கஸ்ட்டப்பட்டு சிறுக சிறுக சேமித்த பணத்தை மருமகனாகப்போகிறவர் தானேயென்று இவருக்கு அனுப்பி இருக்கிறார் அதையெல்லாம் வாங்கிக்கொண்டு அவர்களுக்குத்தெரியாமல் தற்போது இறந்து போன நடராசா - போதநாயகியை ஏமாற்றி இவ்வாண்டின் ஆரம்பத்தில் திருமணம் செய்திருக்கிறார்.

இவர்களின் திருமண படத்தை முகநூலில் கண்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை லண்டனில் உள்ள அந்த பெண்மணி உணர்ந்திருக்கிறார். இவருக்கு போன் செய்து ஏன் என்னை நம்பவைத்து ஏமாற்றினாய் என் மகளை கட்டுவாய் என்ற காரணத்தினால்தானே உனக்கு கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பினேன் என்று பேசியிருக்கிறார் இத்திருமணம் திடீரென்று நடைபெற்றதால் எவருக்கும் சொல்லவில்லை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திருமணம் நடந்துவிட்டது என்று செந்தூரன் கூறி இருக்கிறார். அதற்கு அப்பெண் நான் மகளின் திருமணத்திற்கென சிறுக சிறுக சேர்த்த பணத்தை உனக்கு தந்தேனே அதற்கு பதில் என்ன என்று கேட்டதற்கு யூலை மாதம் வரையும் பொருத்துக்கொள்ளவும் பணத்தை திரும்ப தருகிறேன் என்று கூறியிருக்கிறார். யூலை மாதம் கோல் எடுக்க இவரின் போன் வேலை செய்யவில்லையாம் நம்பரை மாத்தி விட்டார். மூன்று ஆண்டுகளில் உத்தியோகபூர்வமாக மூன்று பெண்களை வெற்றிகரமாய் ஏமாற்றி பல லட்சங்களை சுருட்டிய செந்தூரன் ஒரு பெண்ணை இன்று சாகடித்திருக்கிறார்.

இதற்கிடையில் திருநகரைச்சேர்ந்த ஒரு பெண்ணுடனும் இவர் நெருங்கி பழகியிருக்கிறார் அப்பெண்ணை திருகோணமலைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தெரிந்த கவிதாயினி ஒருவர் வாடகைக்கு பெற்றுக்கொடுத்த வீட்டில் குடித்தனம் நடத்தியும் இருக்கிறார் மேலே குறிப்பிட்ட மூன்று பெண்களை பணம்வாங்கியும் திருமணம் முடித்தும் ஏமாற்றியதற்கும் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது ஆனால் இப்பெண்ணுடனான தொடர்பிற்கு ஆதாரம் இல்லை முகநூல் நண்பர்கள் கூறியவை இவை.

அத்துடன் தமிழகத்தில் வசிக்கும் Ashroffali Fareed வன்னியூர் செந்தூரன் தொடர்பாக மேலும் ஒரு திடுக்கிடும் தகவலை கூறினார். தமிழகத்திற்கு அடிக்கடி சென்றுவரும் செந்தூரன் சென்னையை சேர்ந்த அழகிய இளம் பெண் ஒருவரையும் திருமணம் முடித்து வடபழனி மற்றும் பல்லாவரம் பகுதியில் சிலகாலம் சேர்ந்து வசித்துவிட்டு கைவிட்டுச்சென்றதாகவும் அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அநாதரவாய் நின்ற அப்பெண்ணை தான் நேரில் சந்தித்து உரையாடியதாகவும் தன் அவுஸ்திரேலிய நண்பர் ஊடாக அப்பெண்ணுக்கு உதவிகள் பெற்றுகொடுத்ததாகவும் முகநூலில் பின்னூட்டம் இட்டிருந்தார்.

இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் பெண் தொடர்பு வைத்துள்ள வன்னியூர் செந்தூரன் திருமணம் முடித்த இரு மாதங்களிலேயே தன் பழைய மன்மத விளையாட்டிற்கு திரும்பியிருக்கிறார். இவற்றை போதநாயகி அறிந்து கண்டித்த போது ஊரில் உலகத்தில் நடக்காததையா நான் செய்துவிட்டேன் என அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அவர் அதை முகநூலில் பதிவாக இட்டு தன் மனவாற்றாமையை தீர்த்திருக்கிறார். அப்பதிவும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று மாதமாக போதநாயகியின் திருமண வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவரின் முகநூல் பதிவுகள் அனைத்தும் அதைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு கட்டத்தில் இப்படி 'அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் வாழ்வதை விட மடிந்து போவது மேல்" என விரக்தியோடு பதிவொன்றை இட்டிருக்கிறார்.

அத்துடன் கடந்த 20/08/2018 இல் தான் வாழ்வில் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதை ஒரு பெரும் கவிதையாக எழுதி பொதுவில் பகிர்ந்திருக்கிறார். அக்கவிதை அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன் (18/08/2018) மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அடியில் திகதியும் அவர் பெயரும் இடப்பட்டிருக்கிறது அதில் 20/08/2018 என்பதற்கு பதிலாக 20/08/2017 என அவரால் தவறுதலாக பதியப்பட்டிருக்கிறது.

தான் செத்துப்போனால் அக்கவிதை ஒரு மரண வாக்குமூலமாக இருக்கும் என நம்பியே அவர் அதை எடிட் செய்து அடியில் பெயர் திகதி போட்டிருக்கலாம் அல்லது அப்படி ஒரு கவிதையை நீயேன் எழுதினாய் என அவர் கணவரால் அச்சுறுத்தப்பட்டு ஓராண்டுக்கு முன்னர் எழுதியது என்பதுபோல் காட்ட மீண்டும் எடிட் செய்து பெயர் மற்றும் திகதி சேர்க்கப்பட்டிருக்கலாம் எது எப்படியோ அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன் அக்கவிதையை எடிட் செய்து பெயர் திகதி போடவேண்டிய தேவை அல்லது அழுத்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னைப்பொருத்தவரை அவர் திகதியை 2018 என்பதற்கு பதிலாக 2017 என தவறுதலாகவே போட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன் அக்கவிதை அவரின் நிகழ்கால துயர் மிகு வாழ்க்கையினை படம்போட்டு காட்டுகிறது.

அத்துடன் இன்னொரு வேடிக்கையான சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது செந்தூரன் தான் மனைவியை அதிகம் நேசித்ததாக கூறுகிறார் ஆனால் அவர் இறப்பதற்கு இரு நாட்களின் முன் மெசேஜ் மூலம் தான் அவருக்கு போதநாயகி வவுனியாவிற்கு வருவதை தெரிவித்திருக்கிறார். மூன்று மாத கர்ப்பிணியான அப்பெண்ணுடன் போனில் பேசும் அளவுக்கு கூட நேரமில்லாதவராகவும் நெருக்கமில்லாதவராகவும் செந்தூரன் இருந்திருக்கிறார் அவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்படும் வரையில் அவரை தேடாது இருந்திருக்கிறார். தாய் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று தான் நினைத்ததாயும் பின் போன் செய்யும் போது அது வேலை செய்யவில்லை பணி காரணமாக சுவிச் ஓவ் செய்யப்பட்டிருக்கும் என நினைத்ததாயும் கூறுகிறார். இதுவா இருநாட்கள் தொடர்பில்லாமல் இருக்கும் ஒரு மனைவி மீது கணவன் காட்டும் அக்கறை?

அடுத்து அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கு செந்தூரன் பேட்டி வழங்கையில் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எமக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லை இது திட்டமிட்ட கொலை என கூறுகிறார். தற்கொலை என்ற கோணத்தில் எவருமே சிந்திக்காத போது இவருக்கு மாத்திரம் அந்த சிந்தனை எப்படி வந்தது? தமக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லையென்று முந்திக்கொண்டு பேட்டி கொடுத்தது ஏன்? தற்கொலை என்ற கோணத்தில் இம்மரணம் பார்க்கப்பட்டால் தன் கையில் விலங்கு மாட்டப்படும் என்பதை செந்தூரன் நன்கு உணர்ந்ததாலேயே இது தற்கொலை இல்லை கொலையென்று மரண விசாரணை அதிகாரி கூறுவதற்கு முன்பே தீர்ப்புக்கூறி இருக்கிறார்.

தன் மனைவி தற்கொலைசெய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததும் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததும் செந்தூரனுக்கு ஏற்கனவே தெரியும். போதநாயகியின் முகநூலை பார்த்தாலே நமக்கும் அது தெரியும் சந்தோசமாக குடும்பம் நடத்தும் இளம் சோடிகளின் குடும்ப வாழ்க்கையினை வெளிப்படுத்துவதாய் அவர் எப்பதிவுகளையும் கடந்த மூன்று மாதங்களாய் இடவில்லை சோக மயமாகவும் வாழ்கையில் விரக்தியுற்றுமே பதிவுகளை இட்டிருக்கிறார். முதல் சிசுவை கருவில் தாங்கும் ஏனைய பெண்களின் மன மகிழ்ச்சி இவரிடம் இருக்கவில்லை.

போதநாயகி தற்கொலைதான் செய்துகொண்டார் என உறுதியாக தெரியும் பட்சத்தில் அதற்கு காரணம் தான் தான் என்பதை பொலிசாரும் மக்களும் ஊகித்து உணர்ந்துகொள்வார்கள் என்பதை உணர்ந்த செந்தூரன் தாம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாய் காட்ட பல்வேறு நாடகங்களில் ஈடுபட்டார். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் எழுதிய கவிதையொன்றை ஊடகங்களுக்கு கொடுத்து இத்தனை அன்பு வைத்திருந்தேன் என் மனைவியில் என மக்களையும் சுற்றத்தையும் நம்ப வைக்க முயற்சித்தார்.

அத்துடன் தான் இன உணர்வு கொண்டு செயற்படுவதால் தன்னை பழிதீர்க்க இலங்கை அரச புலனாய்வாளர்கள் திட்டமிட்டு தன் மனைவியை கொலை செய்து விட்டதாய் தன் நண்பர்களுக்கு கூறி அக்கதைகளை சமூக வலைத்தளங்கள் இணையத்தளங்கள் அனைத்திலும் பரவ விட்டார். தான் எழுதிய புத்தகங்கள் பெற்ற விருதுகள் எல்லாவற்றையும் மனைவியின் உடலின் மீது வைத்து அதை படம் பிடித்து அனுதாபம் தேடினார். மொத்தத்தில் ஒரு மாபெரும் நாடகத்தை அரங்கேற்றம் செய்து பிசிரில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நடிப்புக்குள்ளும் சில பெரிய மனிதர்களின் ஆதரவினாலும் தம் மகளின் தற்கொலைக்கு அவள் கணவனே காரணம் என்ற அந்த ஏழைப்பெற்றோரினதும் உறவினர்களினதும் குரல்கள் அடங்கிப்போய்விட்டன.

என் முகநூலில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கற்றறிந்த பெரியோர் என பலரும் இருக்கின்றீர்கள் உங்கள் அனைவரிடமும் ஒரு பணிவான வேண்டுகோள்

இந்த அப்பாவிப்பெண்ணின் படுகொலைக்கு நீதியினை பெற்றுக்கொடுக்க முன் வாருங்கள். தேசியம் என்ற பெயரிலும் இன உணர்வு என்ற பெயரிலும் அப்பாவிப்பெண்கள் இனியும் செந்தூரன்களுக்கு இரையாகக்கூடாது. "இருப்பவர்கள் இருந்தால் இதுவெல்லாம் நடக்குமா" என்பவர்களே இருப்பவர்கள் இருந்தால் ஒரு பெண்ணை தன் நடத்தையால் தற்கொலை செய்யவைத்தவனுக்கு என்ன தண்டனை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அவரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பினை இங்கே தருகிறேன் அவற்றை கருணை கூர்ந்து பாருங்கள்! அப்பெண் சிரிப்பதை நிறுத்தி பல மாதமாகிவிட்டதை நீங்கள் உணர்வீர்கள்.

இறப்பதற்கு முன் அவர் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை இறுதியாய் பதிவேற்றி இருக்கிறார்,

அக்குறள்:-

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருள்:-
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.

ஆம் நேற்று உயிருடன் இருந்த போதநாயகி யை இன்று இல்லாமல் செய்துவிட்டோம் என்ற அகந்தையை பெருமையாக கொண்ட செந்தூரன்கள் வாழும் உலகுதான் இது. 😢

அப்பாவிப்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்:- சு.பிரபா







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com