Sunday, January 21, 2018

கனடா துர்க்கையம்மன் ஆலயத்தினுள் மனித உரிமை மீறல். போட்டுடைத்தது கனடிய ஊடகம்.

கனடாவின் ரொரொண்டோ மாநிலத்திலுள்ள துர்கையம்மன் ஆலயத்தின் கோபுரக்கட்டுமானப் பணிகளுக்கென இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கனடிய ஊடகமான சீபீசீ நீயூஸ் அம்பலப்படுத்தியுள்ளது. புலம்பெரும் நாடுகளெங்குமுள்ள பெரும்பாலான ஆலயங்கள் மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றபோதும் நிர்வாகத்தினர் அவற்றை வழமையான பாணியில் நிராகரித்து தவறுகளை திருத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதபோது அவை வெளிநாட்டு ஊடகங்களால் பல தருணங்களில் அம்பலப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களால் அம்பலப்படுத்தப்படுகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வெட்கித்தலைகுனியவேண்டிய அல்லது சமூககுற்றவாளிக்கூண்டில் ஏறவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

கனடிய ஊடகச் செய்தி பின்வருமாறு அமைகின்றது.

ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.

(சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன.)

CBC ரொறன்ரோவுடன் மட்டுமே பேசிய இரண்டு தொழிலாளர்களின் கருத்துப்படி, ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழலுக்கு முகம் கொடுத்ததுடன் மிகவும் குறைவான ஊதியத்தையே பெற்றிருக்கின்றனர்.

'It's slavery in the modern world': Foreign workers say they were hungry, abused at Toronto temple


சேகர் குருசாமி, 51 மற்றும் சுதாகர் மாசிலாமணி, 46 இன் கருத்துப்படி, ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிகளில் ஒன்றைப் பகல் நேரத்தில் செதுக்கி, பூச்சு வேலை செய்த அவர்கள், இரவில் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உயிர்ப்பற்ற நிலையில், கொதிகலனுக்குப் பக்கத்தில் மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்வார்கள்.

"நாங்கள் மிகவும் பசியுடன் இருந்தோம், எங்களால் அதைத் தாங்கமுடியாமலிருந்தது. சாப்பிடாமல் இருப்பதால், எங்களுக்குத் தலைசுற்றும்" என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக CBC உடன் பேசிய குருசாமி கூறினார்.

CBC ரொறன்ரோவுக்கான அறிக்கை ஒன்றில், குற்றச்சாட்டுகள் "பொய்யானவை," என ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் கூறுகிறது.


ஆலயத்தின் அடித்தளத்தின் ஒரு அறையிலிருந்த நான்கு மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்ளும்படி தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தமிழர்கள் கூறுகின்றனர்.

'எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை'

தேவாலயம் ஒன்றில் உள்ள தூபிக்கு ஒத்த, ஆலயக் கோபுரத்தின், $1.2 மில்லியன் பெறுமதியான புனருத்தான வேலைகளின் ஒரு பகுதியைச் செயலாக்குவதற்காக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் இந்தியாவிலிருந்து நேரடியாக இந்த நான்கு தமிழ் ஆண்களை வேலைக்கமர்த்தியது.

இந்த நான்கு தமிழ்த் தொழிலாளர்களும் உணவுக்காக இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவர் சொற்களால் துன்புறுத்தியதுடன் வன்முறை செய்வதாக மிரட்டினார் எனக் குருசாமி கூறினார்.

"அவருக்கு மிகவும் கோபம் வந்தது, வெளியேறச் சொல்லி எங்களிடம் சொன்னார். 'நாயே வெளியேறு' என அவர் சொன்னார். தகாத சொற்களைப் பயன்படுத்தினார்." எனக் குருசாமி கூறினார். "என்னுடைய மனம் புண்பட்டுப்போனது. எங்களுக்குப் போதுமான உணவு கிடையாததால் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். வேறு என்னத்தைச் செய்வதெண்டு எங்களுக்குத் தெரியேல்லை. எங்களுக்கு ஆரையும் தெரியாது. இந்த நாட்டுக்கு இப்பதான் முதல் தரமாக வந்திருக்கிறோம்."

அவருக்கு அல்சர் இருப்பதாகவும், அதனால் ஒழுங்காகச் சாப்பிடுவது அவருக்கு முக்கியமானது எனவும் மாசிலாமணி CBC ரொறன்ரோவுக்குக் கூறினார்.

"சரியான சாப்பாடு எதுவுமில்லாமல். ஐந்து மாதமா நாங்க அங்கே வேலைசெய்திருக்கிறம்," என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக மாசிலாமணி கூறினார். "சாப்பாடு பற்றி அவரிடம் நாங்கள் கேட்க முடியாது. வணங்கவருபவர்கள் முதல் நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியே எங்களுக்குத் தரப்படும்."

அடித்தளத்தில் கொதிகலனுக்குப் பக்கத்தில் நித்திரை கொள்ளும்படி அவர்கள் நான்கு பேரும் வற்புறுத்தப்பட்டதாக அந்தத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், வாரத்தில் 60 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலைசெய்ததாகவும், ஆனால், உணவும் நித்திரைக்கான வசதிகள்தான் அதிகம் கவலைதருவனவாக இருந்தன என்றும் மாசிலாமணியும் குருசாமியும் கூறினர்.

"மூட்டைப் பூச்சிகளைப் பற்றி நான் சொன்னாலும்கூட [பிரதம சிவாச்சாரியாருக்குக்] கோபம் வரும். அவர் எங்களை மன அழுத்தம் உள்ளவர்களாகவும் வேதனைப்படுபவர்களாகவும் மாற்றியிருக்கிறார்." எனக் கூறினார் மாசிலாமணி.

"அவருடைய நடத்தை சிவாச்சாரியார் ஒருவருடைய நடத்தை போன்றதல்ல. நிறையத் தகாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்," எனக் குருசாமி கூறினார். "எங்களை அடிக்கப் போவதுபோல தனது கைகளை அவர் உயத்தினார்."

புகார்கள் ஆதாரமற்றவை என்கிறது ஆலயம்

பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜகுருக்களுடனான ஒரு நேர்காணலுக்கான வேண்டுகோளை ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மறுத்துவிட்டது, ஆனால், அதன் மதரீதியான சிற்ப வேலைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.

"மேலதிக நேர வேலை எதுவும் செய்யப்படவில்லை," அத்துடன் "கட்டுமானத் தளத்தை இலகுவாக அணுகுவதற்காகவும், போக்குவரத்துத்துக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் ஆலயத்தை அணுகுவதற்காகவும்," தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பிடம் வழங்கப்பட்டது என ஆலயம் கூறுகிறது.

"கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, எங்களுடைய மதரீதியான சிற்பவேலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல்கள் தொடர்பாக ஒருபோதும் கரிசனைகளை வெளிப்படுத்தியதுமில்லை புகார்களை எங்களுக்குச் சொன்னதுமில்லை," என அந்த அறிக்கை கூறுகிறது. "ஊதியம், வேலைச் சூழல், வசிப்பிட வசதிகள் தொடர்பாக சிற்பிகள் திருப்தியடைந்திருந்ததை எங்ளுடைய கடந்த காலத் தொழிலாளர் திருப்திக் கருத்தாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன."

"தொழிலாளர்கள் எவரையும் எங்களுடைய பணியாளர்கள் வார்த்தைகளால் தாக்கவுமில்லை, உடல்ரீதியாகப் பலமாகத் தள்ளவோ அல்லது தள்ளவோ இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்."




அந்த நான்கு தொழிலாளர்களையும் மோசமாக நடத்தியதாக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜாக்குருக்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

'இதுநவீன உலகின் அடிமைத்தனமாகும்':  தமிழ் தொழிலாளர் வலையமைப்புக் கூறுகிறது 


முடிவில், தொழிலாளர்கள் முகம்கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ள இந்த நிலைமைளை ஆலயத்துக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒருவர் அறிந்து, தமிழ் தொழிலாளர் வலையமைப்பைத் தொடர்புகொண்டார்.

"இந்தப் பிரச்சினை பாரதூரமானது … நான் இளமையாக இருக்கும் போது, 20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்திருந்தால், அந்த ஆலயத்தை நான் கொளுத்தியிருக்கக்கூடும்," என்கிறார், தமிழ் தொழிலாளர் வலையமைப்பு தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான ராம் செல்வராஜா. "நியாயமான ஊதியத்தை விடுவம் அதைப் பற்றி நான் கதைக்கவில்லை, மனிதர்கள் நடத்தப்பட்ட விதம் … நவீன உலகத்தின் அடிமைத்தனம் இது."

சாரக்கட்டுகளில், தரையிலிருந்து 20 மீற்றர் உயரத்தில் வேலைசெய்தபோதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் தவிர்ந்த பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சாரக்கட்டுகளில், நிலத்திலிருந்து 20 மீற்றர் அளவு உயரத்தில் அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோதும், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்த நான்கு தொழிலாளர்களும், கடந்த செப்ரெம்பரில் தமிழ் தொழிலாளர் வலையமைப்பைச் சந்தித்து தங்களுடைய தொழில் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அந்த ஆண்களால் வாசிக்க முடியாத ஒன்றாக அது இருந்தது.

அந்த நான்கு ஆண்களும் ஏப்ரல் 15, 2017 முதல் ஒக்ரோபர் 15, 2017 வரையான ஆறு மாதங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததை அவர்களின் வேலைவாய்ப்புப் பதிவேடுகள் காட்டின.

வாரத்துக்கு 40 மணி நேரம், மணித்தியாலத்துக்கு $18படியும், மேலதிக நேரத்துக்கு மணித்தியாலத்துக்கு $27படியும் அந்த ஆண்கள் ஊதியம்பெறுவார்கள் என்பதை அந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது. மேலதிக நேரத்தைத் தவிர்ந்துப் பார்த்தால் இது மாதத்துக்கு கிட்டத்தட்ட $2,500 ஆக இருக்கும்.


ஒரு மாத வேலைக்கு $2,530 அவர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் கூறும் காசோலை ஒன்றுக்கான ஓர் உதாரணம் இது. (Tamil Workers Network)

நான்கு தொழிலாளர்களும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள் என பிரதம சிவாச்சாரியார் அவர்களுக்கு செப்ரெம்பர் 24ம்திகதி காலை கூறியதாகக் குருசாமியும் மாசிலாமணியும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம் முடிவதற்கு மூன்று வாரகாலத்துக்கு முன்னதாகவும், தமிழ் தொழிலாளர் வலையமைப்புடன் அந்த நான்கு ஆண்களும் கதைத்த சில நாட்களுக்குப் பின்பாகவும் அது நடந்தது.

தங்களுடைய ஐந்தாவது மாத வேலைக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து CBC உடன் பேசிய அந்த இரண்டு ஆண்களும் தெரிவித்தனர்.

ஆலயம், தனது அறிக்கையில் அவர்கள் நேரத்துடன் அனுப்பப்பட்டதை மறுத்திருந்ததுடன், அந்த இரண்டு தொழிலாளர்களும், "அந்தச் செய்திட்டத்தை பூர்த்திசெய்வதற்காக 2018 வசந்த காலத்தில் திரும்பிவருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்தாகவும்," கூறியுள்ளது.

குருசாமியுடனும் மாசிலாமணியுடனும் வேலைசெய்த மற்ற இரண்டு சிற்பிகளினதும் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் CBC ரொறன்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில் அவர்களும் தங்களுடைய வேலைச் சூழல்கள் பற்றி அதே மாதிரியான குற்றச்சாட்டுகளையே கூறியுள்ளார்கள்.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் ஒரு 'வர்த்தகமாக' மாறியுள்ளது, என ஒரு செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் கவலைதருவனவாக உள்ளன, ஏனெனில் அந்தப் பிரதம சிவாச்சாரியார் ஆலயத்தை ஒரு "வர்த்தகம்" போல இயக்கிறார் போலிருக்கிறது என்கிறது, தமிழ் தொழிலாளர் வலையமைப்பு

சிவாச்சாரியார் தியாகராஜக்குருக்கள் மேலான CBC ரொறன்ரோவின் புலன்விசாரணை BMW ஒன்று அவர் பெயரில் இருப்பதையும் Mercedes S5A அற நிலையமான ஆலயத்தின் பெயரில் இருப்பதையும் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் செய்த கனேடியர்களுக்கு மதிப்பளிக்க வழங்கப்படும் விருதான, Queen's Diamond Jubilee Medalஐயும் (ராணியின் வைரவிழாப் பதக்கம்) 2012இல் தியாகராஜக்குருக்கள் பெற்றிருக்கின்றார்.

"முக்கியமாக 'நான் கடவுளின் அடியான்; இது வழிப்பாட்டுக்குரிய ஓர் இடம், என நீங்கள் சொல்லும்போது, உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கடை நம்பிக்கைகளையும் கனவுகளையும் விரக்திகளையும் ஆலயம் ஒண்டுக்குள் கொண்டுவருவினம், அதோடை இது ஒரு வர்த்தகமாகிட்டுது என நான் நினைக்கிறன்; இது ஒரு சுரண்டல்,'' என்கிறார் செல்வராஜா.

கோபுரத்துக்கான கட்டுமான நிதிக்கு அவருடைய தாயார் அன்பளிப்புச் செய்திருக்கிறார். அத்துடன் அவருடைய சமூகத்துக்குள் உள்ள மிக முக்கியமான மதத் தலைவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதலால், இவை "பாரதூரமான குற்றச்சாட்டுகளாக" இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

"என்னுடைய அம்மா, 'இல்லை, இல்லை, இல்லை, அப்படி இருக்கேலாது. இது ஒரு ஆலயம். ஆலயங்களிலை இப்பிடி நடக்கிறதில்லை.' என்கிறார். ஆனபடியால், இது மிகப் பாரதூரமான ஒரு விஷயம். சமூகத்துக்குள்ளை நிறைய எதிர்முழக்கங்களை இது கொண்டுவரப் போகுது எண்டது எனக்கு நிச்சயமாய்த் தெரியுது," என்கிறார், செல்வராஜா.

நகரிலுள்ள தொழிலுக்காக இடம்பெயர்ந்த தமிழர் தொடர்பில் கேள்விப்பட்ட முதலாவது விடயமாக இது இருப்பதால், முறைசாராத புலன்விசாரணைகளை ரொறன்ரோ தமிழ் சமூகத்தினுள் தமிழ் தொழிலாளர் வலையமைப்பு ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இது மட்டுமல்ல இப்படிப் பல நடந்திருக்கும் என அது நம்புகிறது.

"இதன் பூதாகாரத்தை நாங்கள் புரிந்துகொள்ளும்போது, இப்படிப் பல விடயங்கள் வெளியில் வரப்போகின்றன என்பது எங்களுக்கு நன்கு தெரிகிறது," என அவர் கூறினார். "இப்போது இது எங்களுடைய radarஇல் இருக்கிறது."

பனிப்பாறையின் முனை, என்கிறார் சட்டத்தரணி

Parkdale Community Legal Services (சமூக சட்ட சேவைகள்) இந்த வழக்கினை இலவசமாக நடத்துகிறது. உண்மையிலேயே அந்த ஆண்கள் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைக் காட்டும் இந்திய வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்தச் சட்ட மையம் தற்போது முயற்சிக்கின்றது.

"எங்களுடைய ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் குறைந்த வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு இரண்டிலும் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்," என்கிறார், அந்த மையத்தின் தொழிலாளர் உரிமைகள் பிரிவுச் சட்டத்தரணி, John No

தற்காலிக வேலை அனுமதிப்பத்திரம் உள்ள வெளிநாட்டவர்கள், கனடாவில் ஒரு வேலைவழங்குநருடன் மட்டுமே வேலைசெய்யலாம்.

"கனடாவில் தங்கியிருப்பதற்கான திறனும், வாழ்வதற்கான ஊதியம் பெறலும் அந்த ஒரு வேலைவழங்குநரில்தான் முற்றாகத் தங்கியுள்ளது. அதனால் வேலைச் சூழலிலோ அல்லது வேலைவாய்ப்புத் தரங்களிலோ அந்த வேலைவழங்குநர் அவர்களை மோசமாக நடத்தினாலும் அந்த வேலையை அவர்கள் விட முடியாது என்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு மாற்றீடுகளே உள்ளன,"என்கிறார், No.

தொழிலுக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படும் சுமார் 50 வழக்குகளை அவரின் அலுவலகம் ஒவ்வொரு வருடமும் கையாள்வதாக No கூறினார்.

"இது பனிப்பாறையின் முனை என்றுதான் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். "அனேகமான தொழிலாளர்கள் முன்னுக்கு வருவதற்குப் மிகவும் பயப்படுகிறார்கள்."

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com