Thursday, November 24, 2016

ஆட்சிக்கு வரவுள்ள ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இலங்கை அரசியல் ஸ்தாபகம் அழைப்பு விடுக்கின்றது. By Vilani Peiris 

அமெரிக்க சார்பு அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் உட்பட இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பகுதியினரும், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் வரவிருக்கும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தமது தயார் நிலையை தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப்புக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையும் அமெரிக்காவும் "ஆழமாக வேரூன்றிய மற்றும் நீண்டு நிலைத்திருக்கும் ஜனநாயக பாரம்பரியங்களாலும் பொதுவான மதிப்புகளாலும் பிணைக்கப்பட்டுள்ளன," என பிரகடனம் செய்தார்.

2015 ஜனவரியில் தான் இலங்கை ஜனாதிபதியாக ஆனதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவு "பலமடைந்துள்ளதோடு" தானும் ட்ரம்பும் “இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை இன்னும் உயர்த்த முடியும் என எதிர்பார்ப்பதாக" சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதேபோன்ற செய்தியை அனுப்பியுள்ளார்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் அமெரிக்காவின் ஆதரவில் பெரிதும் தங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அப்போதைய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உதவியுடன், ஒபாமா நிர்வாகத்தால் இயக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலமே, சிறிசேன கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நடவடிக்கை, சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்கவின் புவிசார்-மூலோபாய கொள்கையான "ஆசியாவில் முன்னிலையின்" ஒரு பாகமாகவே இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பெய்ஜிங் உடன் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்துவதை வாஷிங்டன் எதிர்த்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானங்களை முன்கொணர்ந்தது.

அமெரிக்காவின் இராஜதந்திர பிரச்சாரம், சீனாவிடம் இருந்து இராஜபக்ஷவை தூர விலக நிர்பந்திப்பதை இலக்காக் கொண்டிருந்தது. அது அவரை வெளியேற்றுவதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் உச்சக் கட்டத்தை கண்டது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கை எதிர்த்த இந்தியாவும், திரைமறைவில் ஆட்சி மாற்றத்தை ஆதரித்தது.

சிறிசேன ஜனாதிபதி ஆன உடன், ஒபாமா நிர்வாகமானது மனித உரிமைகள் பேரவையாலான தீர்மானத்தை, ஒரு சர்வதேச விசாரணை என்பதில் இருந்து "உள்நாட்டு விசாரணை" ஆக மாற்ற உதவியது. இது கொழும்பில் புதிய ஆட்சியை பாதுகாக்கும் நோக்கிலான ஒரு வெள்ளைப் பூசும் வேலையாகும்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மூலோபாய வலையமைப்புடன் விரைவில் இலங்கையை அணிசேர்த்தது. செப்டம்பரில், ஐ.நா.வில் நடந்த விருந்துபசார நிகழ்வில் புதிய ஆட்சியை பாராட்டிய ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கை "உலகத்துக்கே ஒரு உதாரணம்" என்று அறிவித்ததுடன் கொழும்புக்கு அமெரிக்கவின் "முழு ஆதரவும்" உள்ளது என்றார்.

வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐ.நா. தூதுவர் சமந்தா பவர் உட்பட ஒபாமா நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். அமெரிக்க பசிபிக்-ஆசிய கட்டளையகம் திட்டமிட்டு நாட்டில் அதன் இருப்பையும் இராணுவ உறவுகளையும் கட்டியெழுப்பி வருகின்றது.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ட்ரம்ப்புக்கு அனுப்பிய வெற்றி வாழ்த்து செய்திகள் ஒரு புறம் இருக்க, இலங்கை ஆளும் தட்டின் பிரிவுகள், வாஷிங்டன் தற்போதைய நெருக்கமான உறவுகள் அடுத்துவரும் ட்ரம்ப் நிர்வாகத்தினால் பராமரிக்கப்படுமா என்பதையிட்டு பதட்டத்துடன் விவாதித்து வருகின்றன.

நவம்பர் 14 அன்று வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது பற்றிய ஒரு அறிகுறியாகும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய ட்ரம்ப்பின் எதிர்ப்பு, "வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் அமெரிக்கவுடன் வணிக உடன்பாடுகளையும் எதிர்பார்க்கும் இலங்கைக்கு நன்றாக பொருந்தவில்லை," என்று அந்த பத்திரிகை எச்சரித்தது. "ஜனநாயகக் கட்சியால் நிறைந்திருந்த இராஜாங்க திணைக்களத்துடனும் மற்றும் அதன் ஊடாக தமிழ் புலம்பெயர்" அமைப்புகளுடனும், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மூலம் உருவாக்கப்பட்ட ஆழமான நட்பை, புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் "மீண்டும் தொடங்க வேண்டி வருமோ" என்பது பற்றி அது கவலை தெரிவித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ உடனடியாக ட்ரம்ப்பை பாராட்டியதுடன் ஒபாமா நிர்வாகம் தனக்கு எதிராக நடத்திய விதம் பற்றி மறைமுகமாக புகார் செய்யவும் அந்த செய்தியை பயன்படுத்திக்கொண்டார். இராஜபக்ஷ, தனது அரசாங்கம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற்றதாக கூறியதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். "குடியரசுக் கட்சி நிர்வாகம், இலங்கைக்கு பெரும் உதவிகளை, குறிப்பாக இராஜதந்திர மற்றும் புலனாய்வுத்துறை ரீதியில் வழங்கியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிப்பதற்கு அவை எனது அரசாங்கத்துக்கு உதவின," என்று அவர் கூறினார்.

ட்ரம்ப் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போர் குற்றச்சாட்டுகள் பற்றிய எந்தவொரு விசாரணையையும் ஆதரிக்க மாட்டார் என்று நம்பும் இராஜபக்ஷ, மேலும் கூறியதாவது: "நாம், அனைத்து நாடுகளதும் இறைமையை மதிப்பதையும், தேசிய அரசுகளின் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய உலக ஒழுங்கை எதிர்பார்க்கிறோம்."

ட்ரம்ப் தொடர்பான இராஜபக்ஷவின் ஆர்வங்கள், பல்வேறு சிங்கள பேரினவாத அமைப்புக்களின் ஆதரவுடனும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதன் சமூக சிக்கனத் திட்டம் மீதும் வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியை சுரண்டிக்கொள்வதன் மூலமும், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அவரது தொடர் முயற்சிகளின் பாகமாக உள்ளன.

இராஜபக்ஷவை ஆதரிப்பவை உட்பட சிங்கள தீவிரவாத குழுக்கள், ட்ரம்ப் தேர்வானதையிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளன. பல சிங்கள பேரினவாத குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு (FNO), அத்தகைய ஒரு அமைப்பாகும்.

எஃப்.என்.ஓ. அழைப்பாளர் குணதாச அமரசேகர, தமது குழு "எந்த சிக்கலும் இன்றி" ட்ரம்ப்பின் வெற்றியை வரவேற்பதோடு அவரின் குடியேற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் பாராட்டுவதாக கடந்த வாரம் கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தேர்தல் முடிவுகள், "பிரதான தேர்தல்களை பெரும்பான்மை சமூகத்தின் பலத்தின் அடிப்படையில் வெல்ல முடியும்" என்பதை காட்டியுள்ளது என அவர் அறிவித்தார், இதை இலங்கை அரசியலுக்கு மாற்றினால், அரசியல் வாழ்வின் அனைத்து அம்சங்கள் மீதும் சிங்களப் பெரும்பான்மையின் ஈவிரக்கமற்ற ஆதிக்கத்தை அர்த்தப்படுத்துகிறது.

எஃப்.என்.ஓ. தற்போது, புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரித்து வருகிறது. கோத்தபாய இராஜபக்ஷ, ட்ரம்ப்பின் "ஸ்தாபகமுறை-எதிர்ப்பு" தோரணையை பாராட்டியுள்ளார்.

இலங்கை தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் குடை அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), கடந்த ஆண்டு சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்த நடவடிக்கையை முழுமையாக அங்கீகரித்துள்ளது. வாஷிங்டன் ஆலோசனையின் படி வேலை செய்யும் கூட்டமைப்பு தலைவர்கள், சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்துக்கு இடைவிடாமல் பாராளுமன்றத்தில் ஆதரவளிப்பதுடன் அதன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரிக்கின்றது. சிறிசேன ஜனாதிபதி ஆனதில் இருந்தே இலங்கைக்கு வருகை தரும் சிரேஷ்ட வாஷிங்டன் அதிகாரிகள், பிராந்தியத்தில் அமெரிக்க புவிசார் மூலோபாய நோக்கங்களை அங்கீகரித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என நம்பினார். அமெரிக்க தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, இரண்டு வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் கிளின்டன் வெற்றியை எதிர்பார்த்து இந்து மத கோவிலிலும் கிறிஸ்துவ தேவாலயத்திலும் பிரார்த்தனை நடத்தினர்.
சிவாஜிலிங்கம், கிளின்டன் வெற்றி பெற்றால் இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல், சமூகப் பிரச்சினைகளை தீர்க்க அது உதவும் என வலியுறுத்தினார். தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி கவலைபடவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தங்களது சலுகைகளை தக்கவைத்துக்கொள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக அமெரிக்க உதவியைப் பெற முயன்று வருகின்றனர்.

விழிப்படைந்த கூட்டமைப்பு தலைவர்கள் இப்போது புதிய ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து உதவி தேடுகின்றனர். குளோபல் தமிழ் டைம்ஸ் இணையத்தில் வெளியான ஒரு சுருக்கமான செய்தியில், தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சி தலைவருமான ஆர். சம்பந்தன் கூறியதாவது: "நாங்கள் [தமிழ் மக்களின்] பிரச்சினைகளை தீர்க்க, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஆதரவைப் பெறுவோம். நாம் மனித உரிமைக உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை [அவருக்கு] விளக்குவோம்.” அமெரிக்க கொள்கைகள் ட்ரம்ப்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் மாற்றமடையாது என சம்பந்தன் கண்மூடித்தனமாக வலியுறுத்தினார்.

அவர்களது தந்திரோபாய வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், இலங்கை ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும், புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு சேவை செய்ய தயாராக உள்ளன. ஏற்கனவே ஒபாமாவின் கீழ் கொழும்பு ஆட்சி மாற்றம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது போல், இலங்கை ஆளும் உயரடுக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் பூகோள அரசியல் நலன்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தும்.

Read more...

Thursday, November 3, 2016

நீதி தேவதைக்கு கேரள கஞ்சா மீது காதலா? பருத்தித்துறை நீதவான் மீது சுயாதீன நீதிச் சேவைகள் அணைக்குழுவில் முறைப்பாடு. பீமன்.

வடகிழக்கிலே அரச காரியாலயங்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைநிறைவேற்றுக்காரியங்களாக மாறியுள்ள நிலையிலே நீதிமன்றங்களும் அந்த அருவருக்கத்தக்க செயலை பின்பற்றுகின்றதா என்ற அச்சம்! நீண்ட நாட்களுக்கு பின்பு இக்கட்டுரையை வரைய நிர்ப்பந்தித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கே சொந்தமான கள்ளக்கடத்தலும் கைக்கூலிக்கு கலாட்டாபண்ணுதலும் மீண்டும் குடாநாடெங்கும் தலைதூக்கியுள்ள நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரரையும் கைக்கூலிக்கு பொல்லு தடி வாள்களுடன் கையாலாகத் தொழிலினை செய்து வருவோரை ஜீ.ஜீ பொன்னம்பலம் காலத்திலிருந்து காப்பாற்றிவந்த யாழ் கறுப்பு சட்டையணிந்த ஆசாமிகள் இன்றும் இழிசெயலை எவ்வித வெட்கதுக்கமோ தயவுதாட்சணியமோ இன்றி தொடர்ந்து வருகின்றனர். இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் தமிழ் தேசியம், தமிழரின் உரிமை, உரிமைப்போராட்டம், கலாச்சாரம் என்றெல்லாம் மேடை மேடையாக முழங்கும் ரெலோ முதல்வர் சிறிகாந்தா –படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன்கோவில் என்ற பழமொழிக்கு ஒப்பாக கயவர்கள் - கஞ்சாக்கடத்தல்காரர்கள் சார்பாக ஆஜராகுவதாகும்.

சரி சிறிகாந்தா வாடகைக்கு அமர்த்ததப்படுகின்ற வக்கீல் வாங்குகின்ற பணத்திற்காக தன் கட்சிக்காரன் சார்பாக வாதாடுவார் என்று எடுத்துக்கொள்வோமே. ஆனால் நீதிபதிகள் கள்ளக்கடத்தல்காரர்களை காப்பாற்ற தமக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவரையறையை மீறி குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளக்கூடிய மற்றும் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துக்கின்றவிதத்தில் நடந்துகொள்வதன் மர்மம்தான் என்ன?

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மாதகல் பிரதேசத்திற்கு வந்திறங்கிய 60 கிலோ கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரும் கஞ்சாவுடன் பருத்திதுறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அதிபயங்கர போதைப்பொருள் சட்டத்தின்கீழ் குற்றவாளி மன்றில் ஆஜர் செய்யப்பட்டமையால் பிணை என்பது மஜிஸ்ரேட் நீதிமன்றில் கடினமான விடயம். சந்தேக நபர் சுமார் 6 மாத காலங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை ஒரு விசித்திரமான கதை. பிரதேசத்திலுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான இவன் தனது கடத்தல் தொழிலுக்கு ஒவ்வொரு முறையும் புதிய புதிய வியூகங்களை கையாண்டு வந்தமையால் பொலிஸார் இவன் விடயத்தில் தமது கைகளை கசக்கிக்கொண்டு பற்களை நறும்பிக்கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் இளவாலை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி காரியத்தை கையிலெடுத்துள்ளார். புலனாய்வுப் பிரிவொன்றின் முன்னாள் அதிகாரரியான அவர் மக்களுடன் பின்னிப்பிணைந்து தகவல்களை கறந்து கொள்வதில் கில்லாடி. பிரதேசத்திற்கு வந்து ஒரிருமாதங்களிலேயே தகவல் வழங்குனர்கள் வலையமைப்பொன்றை இலகுவாக கட்டமைத்து கொண்டார். இவருடன் ஜம்பு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞனும் தகவலாளியாக இணைந்தான். தகவலாளி என்றாலே சமூகத்தில் துரோகி பட்டம்தான் சுமக்கவேண்டுமென்பதை நன்றாக தெரிந்திருந்தும் அவன் இக்கருமத்தைச்செய்ய துணிந்ததற்கு காரணம் குற்றமற்ற, களவற்ற, கயவர்களற்ற ஒரு சமூகத்தை தான் காண விரும்பியதாகும்.

ஜம்பு சமூகவிரோத செயல்களை வெறுக்கின்றான் என்ற உண்மையை அறிந்திராக கடத்ததல்காரன் ஜம்புவுடன் நட்பு கொண்டான். நாளடைவில் தனது தொழிலுக்கு உதவி புரியுமாறு கேட்டான். என்ன அந்த உதவி? தான் கஞ்சாவை கடலால் இறக்கி கொண்டு செல்லுகின்றபோது பிரதேசத்தை நன்கு கவனித்து பொலிஸாரின் றோந்து மற்றும் அவர்களில் பிரசன்னம் இல்லாத பாதைகளை தொலைபேசியில் அறிவிப்பதாகும். நேரத்தையும் நாளையும் சொல்லுங்கள் உங்கள் பொருளை எங்கு கொண்டு செல்லவேண்டுமோ அங்கே நேரே கொண்டு செல்வதற்கு வழி செய்கின்றேன் என்றான் ஜம்பு. அர்த்தத்தை புரிந்து கொள்ளாத கடத்தல்காரன் நேரம் நாள் போன்ற தகவல்களை ஜம்புவிடம் கூறினான். சகல விடயங்களையும் கவனிக்கின்றேன் என பெருவிரலை உயர்த்தி காட்டிவிட்டு சென்ற ஜம்பு இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நேரடியாக அழைப்பை எடுத்தான். விடயத்தை கூறினான். திட்டம் தீட்டப்பட்டது. மாதகல்லுக்கு வந்த கேரளகஞ்சா ஜம்பு கூறிய பாதை வழியே சென்று திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாட்டிக்கொண்டதது. கச்சிதமாக தீட்டப்பட்டிருந்த திட்டமாகையால் ஜம்பு மீது கடந்தல்காரனுக்கு சந்தேகம் வரவே இல்லை.

விசாரணைகள் நடைபெற்றது. எங்கிருந்து வந்தது? எங்கே போகின்றது என்ற கேள்விகளுக்கு கூட கடத்தல் காரன் கள்வரின் தாய்மொழியான பொய்யில் பதில் சொன்னான். X என்ற நபர் இப்பொதியை அனுப்பி வைத்ததாகவும் அவர் இதை எடுத்து கொண்டு ஒரிடத்தில் ஒப்படைக்க சொன்னதாகவும் பொதியில் கஞ்ஞா உள்ளது தனக்கு தெரியாது என்றும் றீல் விட்டு X இன் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தான். அத்தொலைபேசி இலக்கத்தை பரிசீலித்தால் அது கொழும்பிலுள்ள அபாணஸ் கொம்பனியில் பொது முகாமையாளரின் இலக்கம். ஆனால் நவீன தொலைத்தொடர்பியல் தொழினுட்பத்தினூடாக தேவையான தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு சகல உண்மைகளும் கண்டறியப்பட்ட பின்னார் கடத்தல்காரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

சுமார் மூன்று நான்கு மாதங்கள் விளக்கமறியலை கழித்த கடத்தல்காரனுக்கு தான் எவ்வாறு மாட்டினேன்? தனக்கு உலை வைத்தது யார்? என்ற உண்மைகள் தெரியவந்தது. தன்னை காட்டிக்கொடுத்தவனை என்ன செய்வது என்ற முடிவுக்கு வந்தான். நீதிமன்றில் யாழ்பாண சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டபோது கையை உயர்த்தி „ கனம் கோட்டார் அவர்களே! நான் ஒரு உண்மையை சொல்லப்போகின்றேன் என்றான். சொல்லலாம் என நீதிபதி அனுமதி வழங்கியபோது, ஜம்புவின் பெயரை குறிப்பிட்டு இவரே தன்னிடம் குறித்த 60 கிலோ கஞ்சாவையும் தந்ததாகக்கூறினான்". உடனடியாக ஜம்புவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆணையிடப்பட்டது. விசேட அறிக்கை ஒன்றை தயாரித்த பொலிஸார் நீதிபதியை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று அதை பாரப்படுத்தினர். அவ்வறிக்கையில் குறித்த சம்பவம் தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட விசாரணையின் முழுவிபரமும் அடங்கியிருந்ததுடன் அதில் ஜம்பு சம்மந்தப்பபட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பதுடன் அதற்கான தகவலை ஜம்புவே தங்களுக்கு வழங்கினார் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை நிராகரித்த நீதிபதி கடந்தல்காரன் விசுவாமித்திர முனிவரின் அண்ணன் மகன் அவன் பொய்யே பேசமாட்டான் அவன் சொல்வதெல்லாம் உண்மையிலும் மகா உண்மை எனவும் ஜம்புவை கைது செய்திடுவீர் எனவும் பொலிசுக்கு மீண்டும் கட்டளை பிறப்பித்தார். நிலைமையை உணர்ந்த ஜம்பு உடனடியாக யாழ்தேவியில் ஏறி கொழும்புக்கு சென்று சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் நீதிபதிக்கு எதிரான முறைப்பாடு ஒன்றினை தனது கைப்பட எழுதி கொடுத்துள்ளார். ஜம்பு தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:

இரு குழந்தைகளின் தந்தையான நான் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றேன். கடற்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்ட எமது வாழ்வியலை மேற்படி போதைப்பொருள் கடத்தல் சீர்குலைக்கின்றது என்பதாலும் இதனால் எமது சமூகத்திற்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதாலும் நான் இவ்விடயத்தை பொலிஸாருக்கு காட்டிக்கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். ஆனால் தற்போது சந்தேகநபரின் பொய்யான தகவலை ஏற்று நீதிபதி என்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் செயற்பாடானது என்னைப்போன்று அநீதிக்கு எதிராக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கும் அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலைமை தொடருமாக இருந்தால் அது குற்றச்செயல்களை ஊக்குவிப்பதாகவே அமையும். எனவே சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு தனது முறைப்பாட்டை சரியான ரீதியில் விசாரணை செய்து நீதிபதிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

இதேநேரத்தில் குறித்த நீதிபதி யாழ் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயலுக்கு எதிராக செயற்பட்டுவரும் தமிழ் பொலிஸ் உத்தியோகித்தர் ஒருவருக்கு எதிராக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு தடவைகளில் காரணங்களின்றி குறித்த பொலிஸ் உத்தியோகித்தரை சந்தேக நபர்கள் முன்நிலையில் திட்டியதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகித்தர் தனது மேலதிகாரியிடம் முறையிட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட , சமூக ஒழுங்கீனங்கள் தொடர்பில் பொலிஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என யாழ் மாவட்ட நீதிபதி திரு இளஞ்செளியன் அவர்கள் பொஸாருக்கு அறிவுரைகளையும் ஆணைகளையும் வழங்குகின்ற அதேதருணத்தில் யாழிலுள்ள சில நீதிபதிகள் சட்டத்தையும் ஓழுங்கையும் நிலைநாட்ட துடிக்கின்ற உத்தியோகித்தர்களை மனநலிவடையச் செய்வது மக்கள் நீதித்துறை மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கைக்கு கேடாக அமைகின்றது.

மறுபுறத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமையை செவ்வனே செய்துவரும் மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீது சேறு பூசல்களும் இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனச்செயலை செய்துவருகின்ற வக்கீல்களும் சில நீதிபதிகளும் உள்ளதாக நம்பப்படுகின்றது. அற்ப அரசியல் மற்றும் பொதுநலன்களுக்காக நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி செயற்படுகின்றபோது சாதாரண மக்களுக்கு நீதி என்பது கானல்நீர்தான்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com