Sunday, May 17, 2015

பாரம்பரியத்திற்குள் இருக்கும் போதை, ஆக்குமா? அழிக்குமா?

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது.

பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையே பலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள்.

அண்மையில் இந்த மாவாப்பாக்கை மல்லாகத்திலுள்ள உயர்தரவகுப்பில் பயிலும் இருமாணவர்கள் பாவித்தமை நேரடியாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவசமூகத்தினுள் இளைஞர், யுவதிகள் மத்தியில் இப்படிப்பட்ட போதைப்பாக்கு வகைகளைப் பாவிக்கும் நிலை சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் வருகிறது. இது எப்படி வருகிறது? இதன்பின்னணி என்ன? எதிர்கால இலக்கு என்ன? என்பது பற்றி ஆராயவுள்ளோம்.

பாக்கு

பாக்கை சிங்கப்பூர், சில மத்தியகிழக்கு நாடுகள் போதைப் பொருளாகவே பார்க்கின்றனர். விமானநிலையங்களில் பாக்குடன் பிடிபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கையாகவே போதைப் பொருள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது தமிழ், சிங்கள மக்களிடையோ சர்வசாதராணமாக பாவிக்கும் பாவனைப் பொருளாகவே அன்று இருந்தது. வல்லுவம் என்ற சிறுபையில் பாக்கு வெத்திலை சுண்ணாம்பு போன்றவற்றைக் கொண்டு திரிந்தார்கள். அதில் கொட்டைப்பாக்கு நாறல்பாக்கு எனபலவகையில் பதப்படுத்தி சீவலாக்கிப பயன்படுத்துவார்கள். பல்லும்போனவர்களும் பாக்கை சிறு உரலில் இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்துவார்கள். இன்று சூவீங்கள் எனும் இறப்பறை சப்புவதுபோல் அன்று பாக்கு வெத்திலை என்பது பொழுதுபோக்காகப் பொருளாக சமூகவிணைப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தேனீர்இ காப்பி போன்ற சமூகதொடர்பு உண்டிகள் போல் இதுவும் பயன்படுத்தப்பட்டது. பழக்கமில்லாதவர்கள் இதை உண்ணும் போது தலைசுற்றும். இமமதில் சிறு போதைத்தன்மை இருக்கிறது என்பதற்கு இந்த உதாரணம் போதுமானது.

போதைப்பொருட்கள்

போதை என்று பார்க்கும் போது தேனீர், காப்பி போன்றவைகளும் போதைப் பொருக்களே. போதையின் அளவை, தாக்கு வீரியத்தை வைத்தே போதைவஸ்து எது என்றும் மென்போதைப் பொருள் எது என்பதும் சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டது. தாக்குதிறன் குறைந்த தங்குதன்மையற்ற காப்பி ,தேனீர் போன்றன ஊக்கம் தரும் சமூகப்பாவனைப் பொருட்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதை ஏற்றும், தங்கிவாழப்ப்பண்ணும் பொருக்களான கஞ்சா ,அபின் ,கரோயின், கொக்கோயின் போன்றன தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. இப்போதைப் பொருட்கள் மனிதனை, மனிதமூளையை தாக்கு தங்கிவாழச் செய்வதால் இதை தடைசெய்யப்பட்டன.

வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து எம்மை தம்மில் தங்கிவாழப்பண்ணினான். இதில் ஒருவடிவமே தேயிலை, காப்பி அறிமுகமாக இருந்தது. எமக்கு அதைப் பழக்கி, எமக்கே விற்றுப் பணம் சம்பாதித்தான். இதனால் பாக்கின் பயன்பாடும் குறையத்தொடங்கியது. இதை புதுமுறையில் உயிர்பிக்க பீடா என்று இதேபாக்கை சீனி, வாசனைப் பொருட்களுடன் கலந்து விற்கத் தொடங்கினார்கள். இது இளைஞர் யுவதிகள் மத்தியில் ஓரளவு வளர்ந்தாலும் அங்கிகரிக்கப்பட்டதும் சமூகவந்தஸ்துப் பெற்ற கோப்பி தேனீருடன் போட்டி போட முடியவில்லை. இன்று கோப்பி தேனீருக்கென்றே பல கடைகள் உருவாயிருப்பதை அனைவரும் அறிவர்.

போதைப்வஸ்துக்கள் மனிதனை அதில் முழுமைகாகத் தங்கி வாழப்பண்ணுகிறது என்பதுடன் அழித்தும் விடுகிறது. இதனால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையாளர்களையும் விற்பனையாளர்களையும் தண்டிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படடுத்தப்பட்டது. வன்போதைப் பொருட்கள் பாவனை திறனற்ற சமூகத்தை உருவாக்க வழிகோலும் என்பது திண்ணம். உலகிலேயே தடைசெய்யப்பட்ட வன்போதைப் பொருட்கள் சமூகமயப்படுத்துவது அடிப்படையில் தமிழினத்தை அழிக்கும் ஒருசெயலாகவே பார்க்கப்படவேண்டும். இது ஒரினத்தின் அத்திவாரத்தை ஆணிவேரை பிடுங்குவதாக அமையும். இளையவர்களே ஒரினத்தின் எதிர்காலம். இவர்கள் போதையில் தங்கி வாழ்ந்தால் சமூகம் கட்டுப்பாடு இழந்து வன்செயல்களைத் தொடர்ந்து அறிவிலிகளாக, வல்லுறவாளர்களாக வாழத்தொடங்குவார்கள்.

இப்பாக்கப் போதைப் பொருளை யார்விற்பனை செய்கிறார்கள்? எப்படி நாட்டுக்குள் நுளைகிறது? என்ற கேள்விகளுக்கு விடை அரச அனுமதியுடனே இவை புளக்கத்துக்கு வருகிறது என்பதாகும். வன்போதைப் பொருக்களை பாக்கு என்ற சமூகவந்தஸ்துப் பெற்ற சப்புபொருளை போதைப் பொருட்களுடன் கலந்து இராணுவத்தினூடு இலவசமாக முக்கியமாக இளைஞர் யுவதிகளைக் குறிவைத்தே அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுகிறது. சுயமாகச் சிந்திக்கும் விவேகமுள்ள இளைஞர்களே நாட்டின் நாடி நரம்பாகவும் இனத்தின் காப்பரண்களாகவும் அமைகிறார்கள். இக்காப்பரண்களைச் சிதைப்பதன் ஊடாக ஒரு இனத்தையே அழித்து புரட்சி, போராட்டம் என்ற சொற்களையே அர்த்தமற்றதாக்கி விடலாம் என்பதில் அரசு குறியாக உள்ளது. இப்போதைவஸ்துக்களால் பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், சுயசிந்தனை அழிப்பு, இனவேற்றுமை உடைப்பு, தேசிய அறுப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வன்போதைப் பொருட்கள் இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கப் பெறும் போது அதன் பாவனை வீதம் அதிகரிப்பதற்கும் வன்செயல்கள் உயர்வதற்கும் ஏதுவாக அமைகியும்.

அரசின் சாதகமான முயற்சியோ, உதவியோ கிடைக்காத பட்சத்தில் இதைத்தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். நாட்டின் சட்டம் என்பது கோட்டில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் காலாசாரச்சட்டம் என்பது மனங்களில் உறுதியாக்கப்படுவது. இதனால் இப்போதை வஸ்துக்கள் பற்றிய விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும். இதன் தீமைகளை எடுத்துரைப்பதும், இப்பானையாளர்களை விற்பனையாளர்களை சமூகவிரோதியாக பார்ப்பதற்கு தமிழ்சமூகத்தை உந்துவதும் இப்படியான வன்போதைப் பொருள் பாவனையை முளையிலேயே கிள்ளுவதற்கான யோசனைகளாகும். சட்டத்தால் முடியாதவற்றை சில காலாசாரங்கள் திறமையாகவே செய்யும்.

ஒருவினத்தை அழிக்கவேண்டுமானால் அவ்வினத்தின் மொழி,கலை, கலாசாரம், ஆழ்நிலம், பொருளாதாரம், கல்வி போன்றவற்றை அழிப்பதனூடாகவே மிக இலகுவாக இனவழிப்பை நிறைவேற்றலாம். இதில் இளையவர்களை சுயசிந்தனையற்றவர்களாக உருவாக்கும் போது ஒரினமே தனக்குத் தானே தீயிட்டுக் கொள்கிறது. இதில் இந்த மாவா பாக்கு பெரும்பங்கை ஆற்றுகிறது. காலாசாரம், கல்வி, பொருளாதாரம் என்பற்றை ஒரேநேரத்தில் குறிவைத்துத் தாக்குகிறது. இனவிடுதலை, தேசியம், போராட்டம், விடுதலை பற்றி வாயறக்கத்தும் பெருமக்களே! இப்போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதும் போராட்டமே என்பதை அறியுங்கள். ஆயுதம் எடுத்துப் போராடுவதும், கூட்டங்கள் போடுவதும், மேடையில் பேசுவதும், ஊர்வலங்கள் நடத்துவது மட்டல்ல போராட்டம். ஒரினத்தை அதன் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் போராடுவதும் மனிதநேயத்துடன் கூடி இரட்டிப்பான இனவிடுதலைப் போராட்டம் என்பதை உணர்க. தேசியம் சுயநிர்ணயம் பேசுபவர்கள் அடிப்படையில் சுயமாகச் சிந்திக்க முடியாத மக்களிடம் அது குறித்து எப்படிப் பேசுவீர்கள். சுயமாகச் சிந்திக்கும் மனிதனால் மட்டுமே தன்னினம், மக்கள், தன்னிலம், தேசம் என்று சிந்திக்க முடியும். சுயநினைவுடன் ஆரோக்கியமாக சிந்திக்கும் மனிதனாலும் மக்களாலுமே ஒரு இனவிடுதலையை வென்றேடுக்க முடியும். புலத்தில் இருந்து சுயநலனுக்காக போராட்டம், இனம், சுயநிர்ணயம் என்று பேசுபவர்கள் அம்மண்ணின் மக்களின் நிலையை சிந்திக்கவே மாட்டார்கள். ஏதாவது சாட்டுகச் சொல்லிப் பணம் பறிப்பதே குறியாக இருக்கும். ஈழத்தமிழர்களின் போராட்டத்தின் தோல்வியே சுயநலன்களின் விஸ்வரூபமே என்பதை அறிக.

எம்மினத்தை ஆரோக்கியமாகவும், கல்வி, கேள்வி, பொருளாதாரம், கலை, கலாசாரம், உடல் உளநலன்களுடன் வாழவைத்தாலே போதும் விடுதலை, சுதந்திரம் என்பது தானாகவே வந்துசேரும். தமிழ்தேசியம் தானாகவே காப்பாற்றப்படும். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்குத்தான். சுயம்பன் கொடியும் பணம் சுருட்டலே நடப்பு. எம்மினம் சிந்திக்குமா? இதற்கான முதலடியை எடுத்து வைக்குமா? கால் முழுமையாக முறிவதற்குமுன் பத்தைக் கட்டிவிடுங்கள். சமூகம் தானாகவே நடக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com