Monday, February 9, 2015

சந்தர்ப்பங்களை கோட்டை விடும் தமிழ் தேசிய தலைமைகள்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் மிக சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இரு விடயங்களையும் கோட்டை விட்டே வந்து இருக்கின்றன என்பது கடந்த கால வரலாறாகவும், நிகழ் கால நிதர்சனமாகவும் உள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய அதிக அசுர பலத்தை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வழங்கி வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் என்கிற பெயரில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக சிதைத்தே வந்திருக்கின்றது.

இன்று நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தமிழர் வாழ்விலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் அதிகார மையத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார். இவர் கடுமைப் போக்காளர் அல்லர். எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பீடம் ஏறிய இவரே இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இதனால் எதிர்க்கின்ற கட்சிதான் எதிர்க் கட்சி என்கிற நிலை இன்று இல்லை. நீலம், பச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் போய் விட்டது. உண்மையில் எதிர்க் கட்சி இல்லாத தேசிய அரசாங்கம் மலர்ந்திருக்கின்றது என்றும் கூறலாம். எனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள இது மகத்தான வாய்ப்பாக கிடைக்கப் பெற்று உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சந்தர்ப்பத்தையாவது தவற விடாது பயன்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகார முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை இவ்வாறான வாய்ப்பு கிடைக்கப் பெறவே மாட்டாது.

புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டபோது இதில் இணைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தலைவர் இரா. சம்பந்தன், தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்க மாட்டார்கள் என்று அறிவித்து கெடுத்து கொண்டனர்.

ஆனால் யதார்த்தத்தில் இது அல்ல உண்மையான நிலை. அமைச்சரவையை விட அதிகாரம் மிக்க சபை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தேசிய விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சகல கட்சிகளின் தலைவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

இதன் பெயர் தேசிய நிறைவேற்று சபை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றார். எனவே அரசாங்கத்தில், அமைச்சரவையில் இல்லை என்று சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றவோ, தீர்வு முயற்சியில் இருந்து தப்பிக் கொள்ளவோ முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசநாயக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியூதீன், ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்பு உருவாக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இன்னொரு வடிவம் போலவும் நிறைவேற்று சபை அமைகின்றது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேரப் போவது இல்லை என்று சொல்லி அடம் பிடித்தது போல் அல்லாது நிறைவேற்றுக் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து இருப்பது ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் இதன் மூலமான உச்ச நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்பட தவறுகின்ற பட்சத்தில் இதுவும் தவற விடப்படுகின்ற வாய்ப்பாகவே வரலாற்றில் பதிவாகி விடும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை உளுத்துப் போன தீர்வு முயற்சி என்று சொல்லி பொன்னான வாய்ப்பை முன்பு மண்ணாக்கினார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தீர்வுப் பொதியை எரித்தார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு முயற்சியை எதிர்த்தார்கள்.

ஆனால் காலம் காலமாக சுமந்து வந்திருக்கின்ற பாரம்பரிய அரசியல் நிலைப்பாடுகள் சிலவற்றில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வது போன்ற தோற்றப்பாடு பல விடயங்களில் இப்போது தெரிகின்றது. மாகாண சபை ஆட்சியில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஜனாதிபதியின் தேசிய நிறைவேற்று குழுவில் அங்கம் வகிக்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் பங்கேற்று உள்ளனர். வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவை எல்லாவற்றையும் தமிழ் மக்களின் நன்மைகளை உத்தேசித்தே செய்கின்றனர் என்று கூறுகின்றார்கள். இது உண்மையாக இருக்குமானால் கிடைத்து இருக்கின்ற புதிய சந்தர்ப்பத்தை தவற விடாது வேகமாகவும், விவேகமாகவும் செயற்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அர்ப்பணிப்புடன் தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.

நாம் எல்லோரும் சீட்டாட்டம் குறித்து பொதுவாக அறிவோம். திறமையான சீட்டாட்ட வீரர்கள் அருமையான சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத போதும், அற்பமான சீட்டுக்களே கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும். ஈடுபாட்டுடனும் விளையாடி வெற்றியை தட்டிக் கொள்வார்கள். திறமை அற்ற வீரர்கள் அருமையான, அபூர்வமான சீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றபோதும் சாமர்த்திய குறைவு, அலட்சியம் ஆகியவற்றால் வெற்றியை கோட்டை விட்டு விடுவார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் சீட்டாட்டத்தில் இப்போதாவது சாதுரியமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

1 comments :

Unknown February 10, 2015 at 2:36 AM  

தமிழரசு கட்சித் தலைவர் திரு இரா சம்பந்தன் அவர்கள் இலங்கையின் சுதந்திர விழாவில் பங்கு பற்றியதை இட்டு எங்களுக்கு எந்த எதிர் கருத்தும் இல்லை. மாறாக அது காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்கிறோம். எமது மக்களின் அவசர அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பல காரியங்கள் திரு இரா சம்பந்தன் முன் இருக்கின்றன. அவைகளை செயல் படுத்த மத்தியில் உள்ளவர்களுடன் ஒரு வித இணக்கப்பாட்டை பாட்டை பேண வேண்டிய நிலையில் அவர் உள்ளார் என்பதை நாங்கள் மறுக்க வில்லை.
வடக்கில் உள்ள தமிழர்களின் இதயங்கள் இன்னும் வெல்லப் படாமலே உள்ளது என்று இலங்கை ஜனாதிபதி உரையாற்றும் அளவுக்கு நிலைமைகள் உள்ளன. அதை சரியாக பயன் படுத்துவது திரு இரா சம்பதன் அவர்களின் கடமை.
சம்பூர் மக்கள் தங்கள் பூர்வீக இடத்திற்கு சென்று குடியேற வேண்டும். கன்னியா, பன்குளம் போன்ற இடங்கள் மீண்டும் தமிழ் கிராமங்களாக புத்துயிர் பெற வேண்டும். கன்னியா வெந்நீர் கிணற்றுப் பகுதி மீண்டும் உப்பு வெளி நகர சபைக்கு சேரவேண்டி உள்ளது.
மட்டகளப்பு மாவட்டம் தமிழர்களிடம் இருந்து பறி போகும் நிலையில் உள்ளது. அரசே முன்னின்று நடத்தும் ஆக்கிரமிப்புகளை இல்லாமல் செய்ய வேண்டி யுள்ளது.
நாட்டின் யதார்த்த நிலைமை தெரியாமல் திரு இரா சம்பந்தன் அவர்களை கண்டிப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. அவருக்கு எதிராக தெரிவிக்க பட்ட கருத்துகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்களுக்கு எதிராக நடந்த எதிர்ப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
அர்த்தம் இல்லாத தீவிர செயல்களினால் எம் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவது இல்லை.
பொறுப்பற்ற செயல்களினால் தேவையில்லாத தலைப்புச் செய்திகளுக்கு சில வேளை உதவலாம். அனால் மக்களுக்கு ஏதும் கிடையாது.
இன்று தமிழ் மக்கள் இலங்கை பேரின வாதத்தினால் மட்டும் அல்ல வேறு பல சக்திகளினாலும் பெரும் ஆபத்துக்களை எதிர் நோக்குகிறார்கள் என்பதை ஒரு சில தனி நபர்கள் உணர வேண்டும்.
தமிழ் அரசுக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி திரு சம்பந்தன் அவர்களை தவிர வேறு யாருக்கும் இப்போதைக்கு இல்லை. காலத்திற்கு ஏற்ப சம நிலை பேணி தமிழ் மக்களின் நலன்களை கைவிடாமலும் எதிரிகளையும் வெறுப்பு ஏற்றாமல் சீரான தலையை அவர் கொடுத்து வருகிறார். அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக இருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை முட்டாள்த் தனமாக எதிர்த்து, அதன் விளைவு இன்று எங்கு வரை எம்மினத்தை கொண்டு சென்றிருக்கு என்பதை எல்லாரும் புரிந்து பகுத்தறிவுடன் நடக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பா. செழியன்
பொதுச் செயலாளர்
காந்தியம்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com