Sunday, October 5, 2014

இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்.- த.விமலானந்தராஜா

'ஓர்நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ'


நீக்கமற எங்கும் நிறைந்து விளங்கும் ஏகபரம் பொருளான இறைவனுக்கு பற்பல நாமங்களும் பற்பல வடிவங்களும் தருகின்றது இந்து தர்மம். அடியார்களின் பக்தித் திறத்துக்கு கேற்ப பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கின்ற இறைவடிவங்களில் பட்டி தொட்டிகள், வீதிஓரங்கள், ஆற்றங்கரை, குளக்கரை என எங்ஙணுகும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வடிவம்தான் விநாயகர் பெருமானின் திருவடிவம்.

அந்தவகையில் சிவபூமியாம் இலங்காபுரியின் கண்ணே அஞ்ஞான இருள்போக்கி மெய்ஞான ஒளி கொடுக்கும் ஆதவனின் வரவுகாணும் கிழக்கிலங்கையின் மீன்பாடும் வாவிமகள் நீண்டிலங்கும் புகழ்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே 'தேன் கதலி சூழ்ந்து விளங்க', கல்வியும் கலைகளும் சிறந்து ஓங்கும் சிவபதிதான் 'தேனூர்' எனும் தேற்றாத்தீவுக் கிராமம். இக்கிராமத்தில் குடிப்பரம்பல் தோன்றிய காலந்தொட்டே தமிழர்களின் பாரம்பரிய கலையான கொம்புமுறி விளையாட்டு இக்கிராமத்தின் மத்தியிலே ஆடப்பட்டு வந்ததையும், இவ்விளையாட்டை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு இயற்றப்பட்டதாகவும் அறியலாம். இதனால் இவ் விநாயகர் கொம்புச்சந்திப் பிள்ளையார் எனவும் போற்றப்படுகின்றார்.

ஆரம்ப காலத்தில் நீற்றுக் கட்டடித்தில் இருந்த இவ்வாலயம் கடந்த 2007 ம் ஆண்டு தை மாதம் பாலஸ்தானம் செய்யப்பட்டு நீற்றுச்சுவர் ஆலயம் முற்றாக அகற்றப்பட்டு ஆகம முறைக்குட்பட்டதாகவும் இந்து கலை அம்சங்கள் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டு நிர்மானவேலைகள் நிறைவுறும் நிலையில் உள்ளது.

புதிய இவ்வாலய கட்டுமானப்பணியினை நோக்கும் போது இந்துக் கட்டிடக் கலைப்பாணிகளான நாகர, வேசர, தராவிட கட்டிடக் கலைப்பாணிகள் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றது என்றால் மிகையாகாது.

இவ்வாலயத்தில் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம் ஆகியவற்றோடு வசந்த மண்டபம், யாகசாலை என ஆகமம்கூறும் அளவுப் பிரமாணங்களுக் கேற்ப மண்டப அமைப்புக்ககள் விளங்குகின்றன. இதன் விமானமனது மூன்று தளங்களைக் கொண்டதாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றது. இவ்வாலயத் தூண்கள் வட்டவடிவ, சதுரவடிவ, எண்கோணவடிவமாகக் காணப்படுவதோடு பல்வேறு புடைப்புச்சிற்பங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. இதில் விநாயகப் பெருமானின் 32 வடிவங்களும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்தின் மண்டபங்கள், சுற்றுமண்டபங்கள் என்பவற்றின் உட்புறக்கூரையானது(பிளேட்) 12 இராசிகள் வடிவங்கள், கமலம், ரிசபகுங்சரம், மூசிகம், குதிரை, அன்னம், நாகம் போன்ற பல்வேறுபட்ட புடைப்புச் சிற்பங்களால் பொலிவுறுகின்றது. ஆலயத்தின் மகாமண்டபத்தில் தேவசபையும், நிருத்த மண்டபத்தில் சிவன் பார்வதி ஆகிய தெய்வங்களுக்கான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய ஆலயங்களும் அமைகக்கப்பபடுள்ளதோடு சமய குரவர் நால்வரது வடிவங்களும் அவர்களது வயதுத்தோற்றத்துக்கோற்ப அங்கலெட்சணங்களோடு தத்துருபவமாக அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும் தம்பமண்டபத்தில் பலிபீடம் அமைந்துள்ளதோடு, கொடிதம்பம் 27 அடி உயரம் கொண்டதாகவும், கொடிமரத்தைச் சுற்றி வெங்கலவார்ப்பு வேலைகள் உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின உள்வீதியில் பரிவாரக் கோயில்களாக நாகதம்பிரான், மகாவிஸ்ணு, முருகன், பைரவர், நவக்கிரகங்கள், ஆஞ்ஞனேயர் ஆகிய தெய்வங்களுக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளதோடு சண்டேஸ்வரருக்கான ஆலயமும் மற்றும் சிவலிங்கத்தைப் பிரதிஸ்டை செய்வதற்காக செவிதரிசன முறையில் வணங்கக் கூடியவாறு குறிஞ்சிக் கோட்டை அமைப்பை பின்பற்றி ஆலயமும் என பல சிறிய ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அழகிய சிற்பவேலைகளுடன் அமைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. மேலும் 41 அடி உயரம் கொண்ட 2 மணிக் கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன.

தன்னகத்தே ஒருங்கே கொண்டு விளங்கும் இவ்வாலயத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமும் எல்லோராலும் பேசப்படக் கூடியதும், வராற்றில் பொறிக்கப்படக் கூடியதும், 21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சியில் புதிய பரிமாணமுமாக விளங்குவதுதான் இவ்வாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு கொண்டுடிருக்கும் விநாயர் பெருமானின் 64 அடிஉயர சுதை விக்கிர ராஜ கோபுரக் கட்டுமாகம் பணியாகும்.

இந்து ஆகமமாகிய காமிய ஆகமத்தின் 21 வது பிரகார லக்ஷண விதிப்படலத்தில் இராஜகோபுர அமைப்புமுறை கூறப்பட்டுள்ளது. இதற்கமைய இராஜ கோபுரம் என்பது கருவறையில் சூக்கும் லிங்கமாக விளங்கும் இறைவனை ஆலயத்துக்கு வெளியே தொலைவில் நிற்கும் அடியார்களுக்குக் காட்சி தரும் வகையிலும், ஆலய மூலமூர்த்தியை நினைவுக்குக் கொண்டுவரும் வகையிலும் அமைக்கப்படும் அடையாள சின்னம் ஆகும். இதனால் இது ஸ்தூல லிங்கம் என அழைக்கப்படுகின்றது. அதாவது கருவறையில் சிறிய வடிவில் விளங்கும் இறைவனின் உருவத்தைப் பெரிதாக காட்சி தரக்கூடிய வகையில் அமைப்பதையே ராஜகோபுர சுட்டுகின்றது. ஆலயத்துக்குச் செல்லும் அடியார்கள் தொலைவில் இக் கோபுரத்தைக் கண்டதும் மூலமூர்த்தியாக இதனை நினைத்து வழிபடவேண்டும் என்பது ஆலய தரிசன விதியாகும். இந்து ஆலய அமைப்பானது ஒருமனிதனது உடமைப்பைப் போன்றது எனக் கூறப்படுகின்றது. அந்த வகையில் கருவறையானது தலையாகவும், அர்த்த மண்டபம் களுத்தாகவும் மகா மண்டபம் மண்டபம் மார்பாகவும் நிருத்த மண்டபம் வயிறாகவும், தம்பமண்டபம் கால்களாகவும் கோபுரம் பாதமாகவும் கொடிமரம் முள்ளந்தண்டாகவும் அல்லது தொப்புளாகவும் உருவகிக்கப் படுகின்றது. இங்கே கோபுரமானது பாதமெனக் கூறப்படுவதால் சமய அறிவு குறைந்த சிலர் கோபுரத்தை உயரமாகக் கட்டுவது பாதத்தை உயர்த்துவதுற்கு சமம் என்றும், கோபுர அமையப்படும் இடத்தில் பிரமாண்டமாக தெய்வ உருவை சிற்பமாக அமைப்பது பிழை என்று வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது கருத்தாகும்.

இந்துக் கட்டிடக்கலை வராலற்றில் இராஜகோபுரங்கள் காலத்துக்குக் காலம் பல பரிமாண வளர்ச்சியைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம்.டி பல்லவர் கால மன்னர்கள் குடவரைக் கோயில்களையும், கற்றளிக் கோயில்களையும் அமைக்க, சோழர்கள் பெரிய விமானங்களைக் கொண்டதாக ஆலயங்களை அமைத்தனர். பல்லவர், சோழர், காலங்களை விட நாயக்கர் காலத்தில் மிகப்பிரமாண்ட இராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்கள் குறிப்பிடதக்கவை. ஆனால் தொடர்ந்து பிற்காத்தில் பிரமாண்டமான ஆலயங்கள் அமைக்கப்பட்டதோடு இக்கோபுரங்களின் மூலமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள், தேவஅசுர யுத்தம் போன்ற வீரதீரச் சிற்பங்கள் என தெய்வங்கள் ஏராளாமாக அமைக்கப்படுவதோடு கோபுரங்களின் உயரமும் அதிகரித்து (மட்டக்களப்பு போரதீவு காளி அம்மன் 13 தளத்தில் அமைக்கப்படுகின்றது) இந்து கட்டிட, சிற்ப கலையானது பெருவளர்ச்சி கண்டுவருவதை அவதானிக்கலாம்.

அந்தவகையில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் விநாயப்பெருமானின் 64 அடி உயர சுதைவிக்கிரக ராஜகோபுரகட்டுமானப் பணியானது ஆகமமுறை தழுவியதாகவும் அதேவேளை இந்துக் கட்டக்கலையும் ஒருங்கே அமைந்த பெருவளர்ச்சியாக திகழ்கின்றது. இது வரையில் எங்கும் இல்லாதவாறு அமைக்ப்படும் இவ்வாலய நிர்மானமானது இந்து கட்டிடக்கலை வளர்ச்சிகும் பெரிதும் உதவுவதோடு இந்து தர்மத்துக்கும் இக்கிராம மக்களுக்கும் கிடைத்த் பெருமை என்றால் அது மிகையாகது.







படங்கள்- எஸ்.ஸிந்தூ

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com