Thursday, August 21, 2014

ரயிலில் மோதுண்டு பாடசாலை மாணவி பலி!

கண்டியிலிருந்து பதுளை வரை சென்ற ரயிலில் பாடசாலை மாணவி ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (21) காலை 9.35 மணியளவில் தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் ஹெலிரூட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

12.30 மணிக்கு இடம்பெறவுள்ள புவியியல் உயர் தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வீட்டிலிருந்து 7.30 மணிக்கு பாடசாலை சீருடையுடன் தலவாக்கலைக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த மாணவி ரயிலில் மோதியபோது படுங்காயத்திற்குள்ளாகியுள்ளார். இதன் பின்னர் ரயிலின் சாரதிகள் மேற்படி மாணவியை அந்த ரயிலில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது நானுஓயா புகையிரத நிலைய அதிகாரிகள் குறித்த மாணவியை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதித்தபோது மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்த மாணவி திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தை சேர்ந்த வெள்ளசாமி பிரியா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தற்கொலையா ? அல்லது விபத்தா ? என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com