Sunday, May 4, 2014

மட்டு பெரும்காணிப்பரப்பை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அரச அதிபர் முயற்சி. தடுத்து நிறுத்த ஜனாதிபதியை நாடுகிறார் பிள்ளையான்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 2300 ஏக்கர் காணிகள் வெளிமாவட்டத்தினை சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் தன்னிச்சையாக வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் காணி வழங்கும் நடைமுறைகளை மீறி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு காணியை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் பல வளங்களைக் கொண்டுள்ள போதிலும் வறுமைக் கோட்டில் முதலாம் இடத்தில் உள்ளது. இதனைத் தடுக்க அரசினால் மகிந்த சிந்தனையின் கீழ் பல வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் இவ்வாறு பொருந்தொகையான வளம்மிக்க அரச காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு அரச சுற்று நிருவங்களுக்கு முரணாக வழங்கப்படுகின்ற வேளையில் அப்பிரதேசத்தை நம்பி தொழில்புரிந்து கொண்டிருக்கும் விவசாயிகள், பண்ணையாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட தொழிலாளிகள் பாரியளவில் பாதிப்பினை எதிர்நோக்குகின்றார்கள்.

தனியார் முதலிட்டு நிறுவனங்களுக்கு காணிகள் வழங்கப்படும் வேளையில் அப் பிரதேச பொது அமைப்புக்கள், ஆலய நிருவாகம், கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற பிரதேச வாழ் அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து சமூத்திற்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் முன்மொழிவுகள் வளங்கப்பட்டு அவை பிரதேச, காணிப் பயன்பாட்டுக் குழுவில் அனுமதிக்கப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவின் அங்கிகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் மேலதிக அனுமதிக்காக மாகாணசபைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

ஆனால் இந் நடைமுறைக்கு மாறாக வளம்மிக்க அரச காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு முன்னனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி EP/PR/GA/2014/KA/01 எனும் இலக்கமிடப்பட்ட கடிதம் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு எம்மால் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரையிலும் எமக்கு எந்தவெரு பதிலும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக பொறுப்பு மிக்க அரசியற் கட்சி என்ற வகையிலும், கிழக்கு மண்ணில் அக்கறை கொண்ட கட்சி என்ற வகையிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை மேற்கொண்டுள்ளோம். எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு எமது மக்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.



1 comments :

karan ,  May 4, 2014 at 6:11 PM  

இவளை உடனடியாக யாழ்பாணத்திற்கு அடித்து கலைக்க வேண்டும். இவள் யாழ் சுரண்டும் வர்க்கத்தின் வாரிசு. இன்று மட்டக்களப்பு கச்சேரி இரண்டாக பிளவு பட்டுள்ளது. கச்சேரியில் மக்கள் பணி பதவிப்போட்டியால் மந்தகதியிலேயே நடைபெறுகின்றது. அரச அதிபருக்கும் மேலதிய அரச அதிபர் பாஸ்கரனுக்குமிடையேயுள்ள போட்டியால் அதிகாரிகள் பலர் தர்மசங்கட நிலையில் உள்ளனர். இந்த நிலைதொடர்பில் எவரும் கண்டு கொள்ளாதது ஏன்?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com