Friday, April 18, 2014

ரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டன் அச்சுறுத்தல்களை அதிகரிக்கையில் CIA இயக்குனர் உக்ரேனில் நிற்கின்றார்! By Mike Head

பெப்ருவரி மாதம் மேற்கு ஆதரவுடைய கியேவ் ஆட்சி சதியின் பிரதிபலிப்பாக கிழக்கு உக்ரேனில் பரவும் எதிர்ப்புக்கள் மற்றும் கட்டிட ஆக்கிரமிப்புக்களை பயன்படுத்தி ஒபாமா நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிரான அதன் குற்றச்சாட்டுக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை விரிவாக்கியுள்ளது.

உக்ரேன் நெருக்கடியில் அமெரிக்க ஈடுபாட்டைத் தீவிரமாக்கும் தெளிவான அடையாளமாக, CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் வார இறுதியில் கியேவிற்கு பறந்து சென்றார் என்பதை கடுமையான மறுப்புக்களுக்குப் பின் வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு வேற்று பெயருடன் வந்திறங்கிய பிரென்னன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பெப்ருவரி ஆட்சி சதி நடாத்துவதன் மூலம் வேண்டுமென்றே தூண்டிவிட நெருக்கடியை இன்னும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விவாதங்களுக்காக வந்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜீ லாவ்ரோவ் இந்த மறைவான வருகையின் தன்மை குறித்து விளக்கம் கோரியுள்ளார்; பதவியிறக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், நாட்டின் கிழக்குப் பகுதியின் எதிர்ப்புக்களை வன்முறையாக அடக்குமாறு பிரென்னன் உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

CIA ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டுக்களை “முற்றிலும் தவறானவை” என்று ஏளனம் செய்த்தது. ஆனால், நேற்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே பின்வருமாறு அறிவித்தார்: “நாங்கள் பொதுவாக CIA இயக்குனரின் பயணம் பற்றி கூறுவதில்லை. ஆனால் இந்த விவகாரத்தின் அசாதாரணத் தன்மை மற்றும் ரஷ்யர்கள் CIA மீது கூறும் தவறான கூற்றுக்களினால், இயக்குனர் ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக கியேவில் இருந்தார் என்பதை உறுதிபடுத்துகிறோம்.

கேலிக்கூத்துபோல், கார்னே நிருபர்களிடம் “உளவுத்துறை மூத்த அதிகாரிகள் விஜயம் செய்வது பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு வாடிக்கையான வழிவகை ஆகும், இதில் அமெரிக்க ரஷ்ய உளவுத்துறை கூட்டுழைப்பும் அடங்கும்” என்றார். “அமெரிக்க அதிகாரிகள் ஏனைய உளவுத்துறையினரை சந்திப்பது இதைத்தவிர வேறு தூண்டுதலால் எனக் கூறுவது அபத்தமானது” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரென்னனுடைய உக்ரேன் மறைமுக விஜயத்தை சூழ்ச்சியற்றது என்று கூறுவதும் மற்றும் ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒற்றுமையை வளர்க்கும நோக்கத்தை உடையது என்று கூறுவதும் வெளிப்படையாக மடைத்தனமானது. CIA உலகம் முழுவதும் ஆட்சி சதிகள், சதித்திட்டங்கள், படுகொலைகள் என்பவற்றை நிகழ்த்தியுள்ளதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன. இதில் 1965-66 இல் இந்தோனேசியாவும், 1973இல் சிலியும் அடங்கும்.

ஒபாமாவின் 2012 மறு தேர்தலுக்குப்பின் CIA தலைவராக நியமிக்கப்பட்ட பிரென்னன் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்ததில் நெருக்கமான ஈடுபாடு கொண்டவர் மட்டுமல்லாது, காவலில் இருப்பவர்களை CIA சித்திரவதை செய்ததிலும், அமெரிக்க குடிமக்கள் உட்பட பலரின் அமெரிக்க டிரோன் படுகொலைகளிலும் தொடர்புடையவர். அவர் தற்பொழுது, ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் அவ்வமைப்பால் செய்யப்பட்ட தடுப்பில் வைத்தல் மற்றும் “விரிவான விசாரணை” பற்றி பரிசீலிக்கும் அமெரிக்க செனட் குழு உறுப்பினர்களை ஒற்றுப்பார்த்த ஊழலில் அகப்பட்டுள்ளார்.

கியேவில் பிரென்னனுடைய விவாதங்களைத் தொடர்ந்து, உக்ரேனிய இடைக்கால ஜனாதிபதி ஒலெக்சாந்தர் ருர்ஷினோவ் தமது நாடு இப்பொழுது ரஷ்யாவுடன் “போரில்” உள்ளது என அறிவித்தார். உக்ரேனின் அரச பாதுகாப்புப் பிரிவு (SBU) உடைய தலைவர் வாலென்ரைன் நாலிவைசெங்கோ, இப்பொழுது கிழக்கு உக்ரேனில் 10 நகரங்களில் உத்தியோகபூர்வ கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை எச்சரிக்கைகளை விரிவாக்கி “அவர்கள் அழிக்கப்படுவர்” என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

மற்றொரு அமெரிக்க ஆத்திரமூட்டலில், ஆயுதமற்ற ரஷ்ய இராணுவப் போர்விமானம் ஒன்று கருங்கடலில் அமெரிக்க கடற்படையின் அழிக்கும் கப்பலை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதாக பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது. Su-24 விமானத்தில் இருந்து USS Donald Cook கப்பலுக்கு “அச்சுறுத்தல் ஒருபொழுதும்” இருந்ததில்லை என்று பென்டகன் ஒப்புக்கொண்டு, கப்பலுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெருக்கமாக அது வந்ததில்லை எனக் கூறியது.

ஆயினும்கூட இந்த நிகழ்வு ரஷ்ய ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டாக பெரிதுபடுத்தப்பட்டதுடன், ஒரு தனித்த தவறான கணிப்பு பேரழிவுகரமான போரைத் தூண்டும் என்ற ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு அதிர்ச்சி தருபவையாக உள்ளது. மெக்சிகோ வளைகுடாவிற்கு ரஷ்யா ஒரு போர்க்கப்பலை அனுப்பி, அக்கப்பல் மீது அமெரிக்க யுத்த விமானத்தை அனுப்பி கண்காணிப்பு பறப்புக்களை நடத்தினால் எவ்வாறான கூக்குரல் எழும் எனக் கற்பனை செய்துபாருங்கள்!

எந்தவித சான்றையும் முன்வைக்காமல், வாஷிங்டன் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடைய அரசாங்கம் கியேவில் பதவியிலிருத்தப்பட்டுள்ள தீவிரவலதுசாரி ஆட்சிக்கு பரந்த மக்கள் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதன் மூலம் உக்ரேன் மீது படையெடுக்கிறது என்னும் குற்றச்சாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று ஜனாதிபதி பாரக் ஒபாமா புட்டினிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை அலட்சியம செய்தார். அதில் புட்டின் ஒபாமாவிடம் தேர்ந்தெடுக்கப்படாத கியேவின் ஆட்சி எதிர்ப்புக்களை வன்முறையாக ஒடுக்கும் திட்டங்களைக் கைவிடுமாறு கூறவேண்டும் என்றார்.

தொலைபேசி பற்றிய வெள்ளை மாளிகையின் கூற்றின்படி, புட்டினிடம் ஒரு தொடர் கோரிக்கைகளை ஒபாமா முன்வைத்தார்: “நாட்டில் இருக்கும் முறையற்ற படைகள் அனைத்தும் அவற்றின் ஆயுதங்களைக் களைய வேண்டும்”, “புட்டின் இந்த ஆயுதமேந்திய ரஷ்ய சார்பு குழுக்களிடம் தன் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் கைப்பற்றியுள்ள கட்டிடங்களைவிட்டு நீங்க வேண்டும் என வலியுறுத்தவேண்டும்” என்றார்.

இக்கோரிக்கைகளை புட்டின் நிறைவேற்றமுடியாது என்பதை அமெரிக்க அரசாங்கம் அறியும். உக்ரேன் ஆட்சி சதிக்கு பிரதிபலிப்பாக மாஸ்கோ கிரிமியாவிலும் கிழக்கு உக்ரேனிலும் ரஷ்ய தேசியவாதத்தை கிளப்பிவிட்டிருக்கையில், வெடித்துள்ள கட்டிட ஆக்கிரமிப்புக்களில் எவ்வித கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

இந்த எதிர்ப்புக்கள் கியேவ் ஆட்சியின் பாசிசத் தன்மைக்கு உள்ள ஆழ்ந்த விரோதத்தால் உந்து பெற்றவையாகும். இவை இரண்டாம் உலகப்போரின்போது உக்ரேனில் நாஜி ஒத்துழைப்பாளர்கள் நடத்திய அச்சுறுத்தும் ஆட்சியின் கசப்பான நினைவுகளைத்தான் நினைவிற்கு கொண்டுவருகின்றன. இந்த எதிர்ப்பு கியேவின் ஆட்சியின் ரஷ்யா மொழியை உத்தியோகப்பூர்வ மொழி என்னும் தகுதியை அகற்றியதால் இன்னும் தூண்டப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச நாணய நிதியின் பிணையெடுப்பு உதவிக்கு தகுதிபெற எடுக்கும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளினாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் உடன்படிக்கையினாலும் தூண்டுதல் பெற்றுள்ளன. இந்த உடன்படிக்கை அனைத்தும் தவிர்க்கமுடியாமல் கிழக்கு உக்ரேனில் ஆலைகளும் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்படுவதையே அர்த்தப்படுத்தும்.

பாசிச Right Sector படைகளைப் பெரிதும் நம்பியுள்ள கியேவ் ஆட்சி ஆக்கிரமிப்பாளர்கள் அரசாங்க கட்டிடங்களை விட்டு அகல வேண்டும் என்று மூன்று நாட்களில் இது இரண்டாவது தடவையாக ஒத்திவைத்த உள்ளூர் நேரம் திங்கள் காலை 9 மணி என்பதை செயல்படுத்த முற்படவில்லை என்றாலும் இது முழு அளவு “பயங்கரவாத எதிர்ப்புச் செயலை” நடாத்தும் நோக்கத்தை தொடர்ந்தும் அறிவித்துள்ளது.

இந்த இறுதி எச்சரிக்கையை மீறி நிர்வாக, பொலிஸ் தலைமையகங்களின் ஆக்கிரமிப்பு, சில இடங்களில் நகரங்களில் பரந்த பகுதிகள் ஆக்கிரமிப்பு ஆகியவை திங்களும் பரவின. 300,000 மக்களைக் கொண்ட ஹோர்லிவ்கா முக்கிய கட்டிடங்களை தீவிரவாதிகள் எடுத்துக் கொண்ட சமீப நகரமாயிற்று. கியேவ் ஆட்சியில் இருந்து இதுவும் சுயாட்சியைக் கோருகிறது.

கியேவில் பாசிச துணைப்படைகளின் தலைமையில் வலதுசாரி ஆட்சி சதிக்கு ஒழுங்குசெய்தபின், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் இப்பொழுது எதிர்பார்க்கத்தக்க விடையிறுப்பான ரஷ்ய மொழிபேசும் கிழக்கு உக்ரேன் முழுவதிலும் ரஷ்யா இதேபோன்ற தலையீட்டைச் செய்கிறது எனக் குற்றம் சாட்டப்பயன்படுத்துகின்றன.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் அடுத்த வாரம் கியேவிற்கு அனுப்பப்படுகிறார். இது இன்னும் வெளிப்படையான இராணுவ தலையீடு வருவதற்கான தயாரிப்புக்கள் உள்ளன என்னும் குறிப்புக்களுக்கு நடுவே கியேவ் ஆட்சிக்கு வாஷிங்டனின் ஆதரவை எடுத்துக்காட்டுகின்றது.

 உக்ரேனின் இடைக்கால ஜனாதிபதி ஓலெக்சாந்தர் ருர்ஷினோவ், ஐக்கிய நாடுகள் சபை துருப்புக்கள் கிழக்கு உக்ரேனில் நிலைப்பாடு கொள்ள வேண்டும் என முறையிட்டார். இந்த அணிதிரள்வு மேற்கு இராணுவப் படைகளுக்கு ஒரு வாகனமாகலாம்.

 அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரியின் மூத்த ஆலோசகர் தோமஸ் ஷானோன் உக்ரேனிய படைகளுக்கு ஆயுதம் கொடுப்பது “வெளிப்படையான ஒரு விருப்புரிமையாக பார்க்கப்படுகின்றது” என்றார் என நேற்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 அசோசியேட்டட் பிரஸ்ஸிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், நேட்டோவின் ஐரோப்பிய தளபதி, அமெரிக்க விமான தளபதி பிலிப் ப்ரீட்லவ் ஐரோப்பாவில் “ஸ்திரப்பாட்டை” உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கத் துருப்புக்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றார். நேட்டோவின் 28 உறுப்பு நாடுகள் ப்ரீட்லவ்வை அடுத்தவார ஆரம்பத்தில் ஒரு திட்டத்தை தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

கியேவ் ஆட்சி மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை வியாழன் அன்று ஜெனிவாவில் நெருக்கடி குறித்து விவாதிக்க மாஸ்கோ உடன்பட்டுள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை ஏற்கனவே பேச்சுக்களில் இருந்து எத்தீர்வும் வரும் வாய்ப்பு இல்லை என்று உதறிவிட்டது. அமெரிக்க செய்தி ஊடகங்களில் ஆணவமான தலையங்கங்கள் ரஷ்யாவுடன் போர் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாது என்றும், ஒபாமா நிர்வாகம் இராஜதந்திர தீர்வு காண வேண்டும் என்ற கருத்தைக் கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளன. நேற்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம்: “கிழக்கு உக்ரேனில் போரைத் தடுப்பது என்பது மிகவும் தாமதமாகிவிட்டது.” என அறிவித்தது

“ரஷ்யா கிழக்கு உக்ரேன் மீது படையெடுத்திருப்பது ஏற்கனவே நிகழ்ந்திருக்கலாம்” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கம் எழுதியுள்ளது; “புட்டின் இராஜதந்திர முறையில் ஆர்வம் கொண்டவர் என்னும் நப்பாசையை அமெரிக்க கைவிட வேண்டும்” என்றும் சேர்த்துக் கொண்டுள்ளது. புட்டினுடைய உண்மையான இலக்கு “போருக்குப் பிந்தைய ஐரோப்பாவை ரஷ்யாவின் நலனுக்கு ஏற்ப வரைதல், அவரால் முடிந்தால் போலி இராஜதந்திர முறையில், தேவைப்பட்டால் படைவலிமையை பயன்படுத்தி” என எழுதியது.

இது உண்மையை தலைகீழாக வைப்பது போல் ஆகும். ரஷ்யாவை மூலோபாய இராணுவரீதியாக சூழ்ந்து அதன் இறுதி நோக்கமான ரஷ்யக் கூட்டமைப்பை கலைத்து யூரேசிய நிலப்பகுதியில் சவாலுக்கு இடமில்லாத மேலாதிக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் பங்காளிகளும்தான் ஐரோப்பிய வரைபடத்தை மறுபடி வரைய முற்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com