Saturday, April 5, 2014

புல்மோட்டை மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்விசார் மாநாடு!

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன முஸ்லிம் கலாச்சார நலன்புரிச்சங்க கல்விப்பிரிவு மற்றும் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த கல்விசார் பிரச்சனைகளும் தீர்வுகளுக்கான ஆலோசனைகளும் என்னும் தலைப்பில் மாபெரும் மாநாடு புல்மோட்டை மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், அனைத்து பள்ளிகளின் பிரதிநிதிகள், ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகர்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகர்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கமநல சேவை உத்தியோகர்தர்கள் என புல்மோட்டையில் உள்ள சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு சொற்பொழிவை பன்னூலாசிரியரும், ஆய்வாளருமான அஷ் ஷெய்க் A.B.M.இத்ரீஸ் (நளீமி,B.A) "தலைவர்கள் என்றால் யார்..? அவர்களின் பணிகள் என்ன?" என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது.

அழைப்புக்கள் விடுக்கப்பட்ட சகலரும் கலந்துகொண்டதோடு அரசியல் பிரமுகர்கள் உட்பட வருகை தந்த அனைவரும் இறுதி வரை அமர்ந்திருந்து நிகழ்வை சிறப்பித்தமையானது விசேட அம்சமாகும்.

புல்மோட்டை பிரதேசத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள கல்வித்துறையை முன்னேற்றும் நோக்கில் முதற்கட்டமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோடு தனி நலம், சுயலாபம், பக்கச்சார்பு, அரசியல் சார்ந்த செயற்பாடுகள் என அனைத்திலும் இருந்து முற்றாக விடுபட்டு கல்வி என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு தூய மனதோடு சுயாதீனமாக இயங்கி இன்னும் பல்வேறான செயற்திட்டங்களை தாம் முன்னெடுக்கப்போவதாக மேற்படி அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

(புல்மோட்டை றினாஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com