Tuesday, April 1, 2014

மக்களின் கருத்துக்களுக்கு தலைசாய்த்து அபிவிருத்தி நடவடிக்கை மேலும் முன்னெடுப்பேன் - சான்

தென் மற்றும் மேல் மாகாணம் இரண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்திருப்பதானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மக்களுக்குள்ள திருப்தியையும், இரு மாகாணங்களும் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளை மேலும் மெருகூட்டுவதற்காக விருப்பத்தைத் தெரிவித்திருப்பதையும் காட்டுகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக காலி மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்ட சான் விஜயலால் த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலி மாவட்ட செயலாளர் பணிமனையில் விருப்புவாக்குகள் பற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது -

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் கீழ் தென் மாகாண சபைத் தேர்தல்கள் ஐந்திற்கு நாங்கள் முகங்கொடுத்துள்ளோம். ஐந்திலும் அமோக வெற்றியீட்டியுள்ளோம். இம்முறை ஆறாவது முறையாகவும் வெற்றியீட்டியுள்ளோம். அதனால் நாங்கள் வெற்றிபெறுவதற்காக எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நாங்கள் தலைசாய்த்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மகிந்த ராஜபக்ஷவின் மகிந்த சிந்தனையோடு ஒட்டிய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன் என இவ்வேளை தெரியத்தருகிறேன்.

கடைசியாக பாரிய வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொள்வதற்காக சகல வகையிலும் பேருதவி புரிந்த அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com