கத்தரிகோலைப் பிடித்து தொப்புள் கொடியை வெட்டி பிறாடோவில் திரியும் சிவமோகனுக்கு எங்கட கஸ்ரம் எப்படி தெரியும்- மீனவர்கள் ஆவேசம்
வடபகுதி மீனவர்களை வைத்து மாகாண அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனால் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் இந்திய மீனவர்களால் எமது கடல் வளம் அழிக்கப்படவில்லையென்றும் எமது தொப்புள்கொடி உறவுடன் வாழ்பவர்கள் அவ்வாறு நடக்க மாட்டார்களெனவும் மாறாக தென்பகுதி மீனவர்களும் வெளிநாட்டு மீனவர்களுமே எமது வளங்களை அழிக்கின்றனரென்ற கருத்தை தெரிவித்தார்.
ஆனால், தற்போது இவர்களின் இவ்வாறான இந்திய மக்கள் மீதும் எல்லை மீறும் மீனவர்கள் மீதும் ஏற்பட்டுள்ள திடீர் காதல் ஏன் என்பதுடன், இதன் உள்நோக்கமும் அனைவருக்கும் தெரிகின்றது. இவர்கள் மீனவர்களை எந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளனர் என்பது தற்போது தெரிகின்றது.
வடபகுதி மீனவர்கள் கடந்த காலங்களில் இந்திய மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்களின் அத்துமீறிய வருகையை எதிர்த்து உண்ணாவிரதம், பாதயாத்திரை, அமைதி ஊர்வலம், ஆர்ப்பாட்டப் பேரணியென முன்னெடுத்ததை இவர்கள் பிழையென கருதுகின்றார்களா?
மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை கொள்ளையிடுவதுடன், எமது கரைக்கு வந்து இளநீர் குடித்து விட்டு செல்லும் நிலை உள்ளதென தெரிவித்தது வெறுமனே மீனவர்களின் கைதட்டலை பெற்றுக்கொள்வதற்காகவா?
வடபகுதி மீனவர்களுக்காக இன்று வரை இம்மாகாண சபையில் ஒரு தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? இவர்களின் பிரச்சினைகள் இச்சபையில் பேசப்பட்டுள்ளதா? எனவே, வடபகுதி மீனவர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்டவர்களை மீனவச் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
வடமாராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த மீனவரான என்.சகாயசீலி கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று வடமாகாணசபை தொடங்கி எவ்வளவு நாள் ஆகிவிட்டது. யாராவது எமக்காக ஏதாவது சட்டத்தை நிறைவேற்றினார்களா? இல்லை. அதைவிடுத்து எம்கு தொப்புள் கொடி உறவைப் பற்றி சொல்லித் தெரிகிறார்கள். கத்தரிக்கோலைப் பிடித்து தொப்புள் கொடியை வெட்டிவிட்டு பணம் உழைத்து பிறாடோவில் திரியும் சிவமோகனுக்கு எங்கட கஸ்ரம் தெரியுமா? தயது செய்து எங்களை வைத்து பிழைப்பு நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment