சரணம்! சரணம்!! ஜனாதிபதி நீங்களே சரணம்…! - தயாசிரி
முஸ்லிம்களுக்கு எந்தவித குறைகளும் ஏற்பட நான் விடமாட்டேன்!
“எங்களுக்கு வேறு எவரினதும் உதவி கிடையவே கிடையாது. வேறு அரசாங்கம் உருவாக்க வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையவே கிடையாது. அதிமேதகு ஜனாதிபதியுடன் இணைந்து, அவரது பயணத்தில் பங்குகொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்.
அன்று போலவே நான் இன்றும் சொல்கிறேன். முஸ்லிம்களின் பாதுகாப்பை வடமேல் மாகாண சபை உறுப்பினராக இருந்து நான் உறுதிப்படுத்துவேன்”
என உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சியிலும், நூலகத் திறப்பு விழாவிலும் கலந்து உரையாற்றும்போது வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
விசேடமாக ஆசிரியப் பற்றாக்குறையே பாரிய பிரச்சினை. புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிங்கள, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு இப்பிரச்சினை தலையிடியாகி உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் 63 ஆசிரியர்களுக்கு நான் ஆசிரிய நியமனம் வழங்கினேன். புத்தளத்திற்கே நான் அனைவரையும் அனுப்பினேன். இப்போது குருணாகலையிலிருந்து புத்தளத்திற்கு அனுப்புவதை நிறுத்தவே விரும்புகிறேன்.
நானும், எங்கள் சனத் நிசாந்தவும் ஒன்றிணைந்து முடிவு செய்தோம்.. என்னவென்றால், தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கு புத்தளத்திற்கு புத்தளத்திலிருந்து மட்டுமே ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வோம். இதன் பிறகு நாங்கள் குருணாகலையிலிருந்து புத்தளத்திற்கு ஆசிரியர்களை அனுப்ப மாட்டோம்.
அதனால் தமிழ் மொழிமூல பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்வதற்கு நான் விரும்புகிறேன். சென்ற முறை நடைபெற்ற பரீட்சையில் தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் 85 பேர் தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது. என்றாலும் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். அது எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. நாங்கள் அந்த 8 பேருக்கும், இன்னும் 10 பேருக்கும் ஆசிரிய நியமனம் வழங்கி இப்பகுதிக்கு அனுப்பினோம்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள பிள்ளைகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கி உங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்துள்ளேன்.
ஆசிரிய வெற்றிடம் என்பது இப்பகுதியில் நிலவாமலிருக்க நான் ஆவன செய்வேன். நான் முஸ்லிம்களை நேசிக்கிறேன்… அவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன். ஜெனீவா பிரச்சினை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்கள் பெரும்பான்மை சமூகத்தினரை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடித்த போது, இந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள்தான் அடைக்கலம் கொடுத்தார்கள். அந்த வேதனை, துன்பம், ஆகியவற்றைச் சுமந்து பயங்காரவாத இன்னல்களுடன் நிற்பவர்கள் நீங்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.
அதனால், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமலிருக்க அதிமேதகு ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து பயணிக்க நீங்கள் எல்லோருடம் என்னுடன் சேர்ந்துகொள்ளுங்கள் என முஸ்லிம்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எங்களுக்கு வேறு யாரிடமும் உதவி கிடையாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே எங்களுக்கு சரணம்! எங்களுக்கு வேறு ஆட்சியமைக்கத் தேவை கிடையாது. ஜனாதிபதியுடன் ஒன்றித்து பயணிக்கவே வேண்டியுள்ளது. அன்றுபோல் இன்றும் மீண்டும் நான் சொல்கிறேன். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராகிய நான் முஸ்லிம்களாகிய உங்களின் வெற்றிக்காக, உங்களின் பாதுகாப்புக்கு நான் உறுதியளிக்கிறேன்”
(NWP Media விலிருந்து தமிழில் கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment