சட்டத்தின் ஆளுகையில் தெற்காசிய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்!
2014ஆம் ஆண்டு சட்டத்தின் ஆட்சிச் சுட்டியில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலாமிடத்தைப் பெற்றுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் உள்ள 99 நாடுகளின் மத்தியில் இலங்கை 48வது இடத்தைப் பெற்றுள்ளது.
உலக நீதித் திட்டம் 2014ஆம் ஆண்டுக்கான சட்டத்தின் ஆட்சிச் சுட்டியை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் சட்டத்தின் ஆட்சி மக்கள் மத்தியில் எவ்வாறு அனுபவிக்கப்படுகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.
உலகத்திலுள்ள 99 நாடுகளில் நாளாந்த வாழ்க்கையில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைக் கொண்டே இச்சுட்டி தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இதன் படியே நாடுகள் தரப்படுத்தப் பட்டுள்ளன.
உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சம் வீட்டுடைமைகள் மற்றும் 2400 நிபுணர்களை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதுடன் இச்சுட்டிக்கு அமைய இலங்கை உலகளாவிய ரீதியில் 48வது இடத்திலும், பிராந்திய ரீதியில் முன்னிலையிலும் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதே வேளை தெற்காசிய நாடுகளில் இந்தியா 66 வது இடத்திலும், பாகிஸ்தான் 96வது இடத்திலும், பங்களாதேஷ் 92வது இடத்திலும், நேபாளம் 57வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 98வது இடத்திலும் காணப்படுகின்றன.
சட்டத்தின் ஆட்சி சுட்டியின் அடிப்படையிலான நாடுகளின் தரப்படுத்தலில் டென்மார்க் முதலாவது இடத்திலும் தொடர்ந்து நோர்வே, சுவீடன், பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
0 comments :
Post a Comment