Wednesday, March 5, 2014

இலங்கைக்கு எதிராக செயற்படுவோர் இலங்கையின் யுத்தத்தின் பின்னரான நிலையை பார்க்கவேண்டும்! ஜப்பானிய தூதுவர்

ஜப்பான் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும்!

இலங்கைக்கு எதிராக குரல் எழுப்புவோர், யுத்தத்தின் பின்னர், வடபகுதி மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை, நேரில் சென்று அவதானிக்க வேண்டுமென, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிதோ ஹொபோ தெரிவித்தார்.

30 ஆண்டுகால யுத்தத்திற்கு பின்னர் வடபகுதி மக்கள் இன்று சுதந்திரக்காற்றை சுவாசித்து வருகின்றனர். அரசாங்கம் வட மாகாணத்தை கட்டியெழுப்ப மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கவை என்றும், ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.

வட மாகண கல்வி, சுகாதாரம் உட்பட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்தும் முழு அளவிலான ஆதரவை வழங்குமென்று, ஹொபோ தெரிவித்தார். இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்தபோதே, இதனை தெரிவித்தார்.

வட பகுதியின் தற்போதைய நிலைமை தொடர்பாக திருப்தியடைய முடியுமென தெரிவித்த ஜப்பானிய தூதுவர், இலங்கைக்கு ஆதரவு வழங்க ஜப்பான் அரசாங்கம் என்றும் தயாராகவிருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

இதேநேரம், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, மாகாண உள்ளுராட்சி அலுவலகத்தில் வைத்து ஜப்பானிய தூதுவர் சந்தித்தார். மாகாண சபையின் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்த தூதுவர், எதிர்காலத்தில் தொடர்ந்தும் வட மாகாண அபிவிருத்திக்கு உதவ ஜப்பான் என்றும் தயாராகவிருப்பதாகவும், தெரிவித்தார்.

இச்சந்திப்பை தொடர்ந்து மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வட மாகாணத்தை பொறுத்த வரையில், அரசியல் தேவைகளுக்கு அப்பால், அபிவிருத்தியே இன்று எமக்கு தேவைப்படுவதாக கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com