Wednesday, March 19, 2014

தமிழ் மாமன்றம் பெருமையுடன் நாடத்தும் 'இயல் விழா 2014'

இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழவான 'இயல் விழா 2014' ஐ எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, வவுனியா கலாசார மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தவுள்ளது.

தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்தும் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கை கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

இந் நிகழ்வு காலை, மாலை எனும் இரு அமர்வுகளாக நடாத்தப்படவுள்ளது. காலை 9.00 தொடக்கம் மதியம் 12.30 வரை காலை அமர்வும், மாலை 4.30 தொடக்கம் இரவு 8.30 வரை மாலை அமர்வும் இடம்பெறவுள்ளது.

காலை அமர்வில், பாடசாலை மாணவர்கள் பங்கேற்று விவாதம் புரியும் விவாத அரங்கும், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும், சுழலும் சொற்போரும் இடம் பெறவுள்ளது. விவாத அரங்கிற்கு தமிழாசிரியர் என்.கே.கஜரூபன் அவர்களும், சுழலும் சொற்போருக்கு கலாநிதி ஸ்ரீ.பிராசாந்தன் அவர்களும் தலைமையேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

மாலை 4.30 தொடக்கம் இரவு 8.30 வரை இடம்பெறவுள்ள, மாலை அமர்வில், கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா தலைமையில், சிறப்பு பேச்சாளர்கள் பங்கு பெறும், பட்டி மன்றமும், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் கவியரங்கும் இடம் பெறவுள்ளது.

குறைந்து செல்லும் தமிழார்வத்ததை, மீண்டும் துலங்க வைத்து, வவுனியா மாவட்டத்தினுடைய, கலை இலக்கிய ரசனையும், இளம் சமுதாயத்தினுடைய கலை இலக்கிய ஆர்வத்தையும் பெரிதும் உயர்த்திச் செல்ல, இவ் விழா கால்கோளாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தரமான நிகழ்வுகளால் நிறையவுள்ள, தமிழ் மாமன்றத்தினுடைய இயல் விழாவில், கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பித்து, பயன் பெறுமாறு, தமிழ் மாமன்றம் அன்புடன் அழைக்கின்றது.

'தமிழால் வையகத்தலைமை கொள்வோம்'


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com