Tuesday, March 18, 2014

சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிவந்த 14 மற்றும் 16 வயதுடைய கர்ப்பிணி சிறுமிகள் பொலிஸாரால் கைது!

சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்து தப்பி வந்ததாக தெரிவிக்கப்படும் 14 மற்றும் 16 வயதுடைய சிறுமிகள கர்ப்பிணி சிறுமிகள் இருவரை பஸ் தரிப்பிடம் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்தே இந்த இரு சிறுமிகளும் தப்பிவந்ததாகவும், இவ்விரு சிறுமிகளும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரக்கல்லி பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த போதே நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் காதல் தொடர்பு கொண்டிருந்ததன் காரணத்தினால் அவர்களது காதலர்களினால் கர்ப்பிணியாக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறு வயது தாய்மார்களுக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளனர்.

இவ்வாறு சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்விரு சிறுமிகளும் தப்பி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறுமிகள் இருவரும் எதற்காக அங்கிருந்து தப்பி வந்தார்கள் என்ற சரியான காரணத்தைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார் இவ்விருவரும் மீண்டும் தமது காதலர்களுடன் செல்லும் நோக்கிலேயே தப்பி வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

புத்தளம் கல்லடி மதுரகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், உடுகம மொரகஹயாய எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு சிறுமிகளையும் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com