இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மனித உரிமைகளை மீறியது! குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் கேணல் ஹரிகரன்.
இலங்கையில் அமைதி காக்கும் படையில் ஈடுபட்ட இந்திய இராணுவத்தினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இந்திய அமைதிகாக்கும் படையின் முன்னாள் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாகவிருந்த ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
த இன்டர்நெஷனல் லோ ஜேர்னல் ஒப் லண்டன் செய்தியாசிரியர் பரசரன் ரங்கராஜனுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு :
இந்திய அமைதிகாக்கும் படை வடக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வல்வெட்டித்துறையில் படையினர் மேற்கொண்ட பதுங்கி தாக்குதலின்போது அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இராணுவ தலைமையகமும் அரசாங்கமும் தவறு இழைத்து விட்டதாக ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்த நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள் அப்போது இந்திய அமைதிகாக்கும் படையினரால் படுகொலை செய்த மனித உரிமை மீறல்களை இந்திய அமைதி காக்கும் படையினர் புரிந்துள்ளதையும் ஹரிகரன் ஒத்துக்கொண்டுள்ளார்.
இதே நேரம் எல்ரிரிஈ யினரும் இதே பாணியில் அப்பாவி மக்களை பிடித்து மின் கம்பங்களில் கட்டி டயர் இட்டு எரித்ததை தான் நேரில் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எரிக்கப்பட்ட மக்களின் பாதி எரிந்த உடல்களை தான் பார்த்தாகவும் அவற்றை பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் ஈழம் தொடர்பாக கருத்தில் தான் கொண்டிருந்த மிக குறைந்த ஆர்வத்தையும் தான் இழந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் தனக்குமுழு அதிகாரமும் வழங்கப்பட வேண்டுமெனவும் இடைக்கால நிர்வாகத்தில் பகுதி அளவிலான அதிகாரம் வழங்கப்படுவதை அவர் விரும்பாமல்மோதல்களை தொடர்ந்தமையினாலும் போரில் அவர் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபாகரனை ஒரு சுதந்திர போராளியாக நாம் கருதவில்லை. ஏனைய ஆயுத குழுக்களின் தலைவர்கள் மற்றும் தன்னுடன் ஒத்து வராத தமிழ் அரசியல் தலைவர்களை அவர் ஈவிரக்கமற்ற முறையில்படுகொலை செய்ததாகவும் ஹரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment