Wednesday, February 12, 2014

கள்ளப்படகில் நியூசிலாந்து செல்ல முயன்ற 75 பேர் பேருவளையில் கைது!

இலங்கையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த கள்ளப்படகின் மூலம் வெளிநாடு தப்பிச் செல்லும் சம்பவம் நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

கள்ளப்படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வது முடிந்து தற்போது நியூசிலாந்து நோக்கிச் செல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடல் வழியே சட்டவிரோதமாக நியூசிலாந்து நோக்கிச் செல்ல முயன்ற 75 பேர் இன்று (12) அதிகாலை பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மொரகல்ல, மாரகஹ பகுதியில் தங்கியிருந்த 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 60 ஆண்களும் 9 பெண்களும் மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமியரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், பஸ் மற்றும் வேன் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த தமிழர்களாவர். சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com