Tuesday, December 3, 2013

எந்த ஒரு நாடும் எம்மை அச்சுறுத்தவோ அழுத்தங்களை கொடுக்கவோ முடியாது - ஜீ. எல். பீரிஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெளிநாட்டுக் கொள்கையானது எமது நாட்டிற்கு மாத்திரமின்றி பொது நலவாய நாடுகளுக்கே அத்திவாரமாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எந்தவொரு நாடும் தமது நாட்டின் பொறிமுறைகளை பயன்படுத்தி மாத்திரமே தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்பதை பொதுநலவாய நாடுகள் ஏற்று க்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2014ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கான முதலாவது நாள் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் உரையாற்றுகையில்:-

எமது நாட்டின் பிரச்சினை எமது நாட்டிற்குள்ளேதான் தீர்க்கப்பட வேண்டுமே தவிர வேறு ஒரு நாட்டிலோ வேறு ஒரு மண்ணிலோ அல்ல. இதனை ஜனாதிபதி அவர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளார்.

எனவே எந்த ஒரு நாடும் எம்மை அச்சுறுத்தவோ அழுத்தங்களை கொடுக்கவோ முடியாது. ஏனெனில் எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறான அச்சுறுத்தல்களை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.அதேபோன்று ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்காக எவரும் எமக்கு காலக்கெடுகளை விடுக்க முடியாது. அவ்வாறான கால எல்லைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நாங்கள் சரியானவற்றை சரியான முறையில் இனங்கண்டு சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார்.

மனித உரிமை விவகாரம் இன்று அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இது விடயத்தில் எந்தவித காலக்கெடுவையும் ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை. அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதும் இல்லை.புலிகள் யுத்தத்தில் தோல்வி யடைந்திருந்தாலும் அதன் அரசியல் ரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. புலம்பெயர் அடிப்படைவாத அமைப்புகளின் நிதிபலம் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றது.

மனித உரிமைப் பிரச்சினைகள் உங்களுக்கு மட்டுமல்ல எமது நாடுகளுக்கும் இருக்கின்றன என பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவந்த அரச தலைவர்கள் பிரதிநிதிகளில் சிலர் தெரிவித்தனர்.அரசியல் சவாலாகக் காணப்படுகின்ற மனித உரிமை விவகாரம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பாரிய சவால்களாக உள்ளது.

இலங்கை தொடர்பில் சீனா விடுத்திருந்த அறிக்கையை சிலர் திரிவுபடுத்தியதால் சீனா மீண்டும் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. இது தொடர்பில் சுமந்திரன் எம். பி. முன்வைத்த கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானது.மனித உரிமைகள் என்ற போர்வையில் வெளிநாடுகளின் அழுத்தங்களையும் தலையீடுகளையும் சீனா இந்த அறிக்கையின் மூலம் கண்டித்துள்ளது.

சர்வதேசம் நியாயமான முறையிலும் உண்மையாகவும் எம்மை பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடுவதை எவருமே விரும்புவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.கண்ணாடி கூட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என ஜனாதிபதி கூறியுள்ளார் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், எமக்கு சரியானவையே நாம் செய்வோம். மற்றவர்கள் கூறுவதை அல்ல என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தற்பொழுது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் தலைமை வகிப்பதன் மூலம் பொதுநலவாய நாடுகளின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கென்யா நாட்டின் சுத்திர தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இதன் போது பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கை குழுவின் கூட்டம் கூடவுள்ளது. பொதுநலவாய நாட்டின் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளார்.

பொதுநலவாய அமைப்பு அடுத்த இரண்டு ஆண்டுகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக இதன் போது ஜனாதிபதியின் தலைமையில் விரிவாக ஆராயவதுள்ளது. இதன் போது பல நாடுகள் தமது கருத்துகளை முன்வைக்கவுள்ளன என்றார். அதேபோன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை அமுல்படுத்தும் பொருட்டு 1300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது பல அமைச்சுக்களுடன் தொடர்புபட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு தூதர்களுக்கும் விளக்கமளித்துள்ளோம்.எனவே சர்வதேச சமூகத்தினருடன் நாங்கள் திறந்த மனதுடன் செயற்படுகின்றோம் என்றும் அமைச்சர் ஜீ. எஸ். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com