Monday, November 4, 2013

ஆற்றுக்குள் விழுந்த தலைக் கவசத்தை எடுக்கப் பாய்ந்த அண்ணன், தம்பி மரணம்!

அக்கரைப்பற்று பனங்காட்டு பாலத்தின் அருகே களப்பில் தவறி வீழ்ந்த தலைக்கவசத்தை எடுக்கச் சென்ற இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். சம்பவத்தில் நாவற்காடு பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானசேகரம் ஜெயந்திவாசன்,21 வயதுடைய ஞானசேகரம் ஜனார்த்தனன் ஆகிய இரு சகோதரர்களுமே மரண மடைந்தவர்கள்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (02) மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. சுழியோடிகள் பொதுமக்களின் உதவியோடு இரு மணித்தியாலயங்களின் பின் அண்ணனுடைய சடலமும், ஆறு மணித்தியாலங்களின் பின் தம்பியின் சடலமும் மீட்கப்பட்டது.

சம்பவ தினமான தீபாவளி நாளை கொண்டாடுவதற்காக தங்களது நண்பர்களுடன் சேர்ந்து இரு சகோதரர் களும் சென்றுள்ளனர்,கொண்டாட்டங்களின் போது மதுவும் அருந்தியுள்ளனர்.இந்நிலையில் பாலத்தருகே நிற்கும்போது கைகளில் இருந்து தலைக் கவசம் களப்பினுள் தவறிவிழுந்துள்ளது. தவறிய தலைக் கவசத்தை எடுப்பதற்காக மூத்த சகோதரர் முயற்சித்த வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார். அண்ணன் நீரில் மூழ்குவதை அவதானித்த தம்பியும் களப்பினுள் குதித்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரு சகோதரர்களும் மிகவும் நெருக்கமுடையவர்கள் என்பதுடன் எவ்வேளையிலும் ஒன்றாகவே இருப்பவர்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஒன்றாகவே விபத்துக்குள்ளானவர்கள். இளையவர் அண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் என்பதுடன் நேற்று முன்தினம் குடும்பதாருடன் இருவரும் ஆலயம் சென்று பொங்கல் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இது இவ்வாறிருக்க களப்பில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தோணி ஒன்று கவிழ்ந்த போதிலும் அனைவரும் தப்பித்துக் கொண்டனர். இச்சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com