Tuesday, September 17, 2013

வட மாகாண தேர்தலிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்! -எஸ். ஹமீத்

வட மாகாணத்தைப் பொருத்தவரை தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, 23 வருடங்களாக அகதி வாழ்விற்குள் நொந்து நூலாகி-வெந்து கரியாகிக் கிடக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இத் தருணத்தில் அமையும்.

வட மாகாண முஸ்லிம்களுக்கென்று இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவது, அவர்களின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம். அந்த இருட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி ஓரளவாவது வெளிச்சத்தைக் கண்ட பின்புதான், தமது அரசியல் உரிமைகளைப் பற்றியோ-ஏனைய உரிமைகளைப் பற்றியோ அவர்களால் சிந்திக்கத் தொடங்க முடியும்.

இந்த வெளிச்சத்தை ஆளும் கட்சியினால்- அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து தமது மக்களின் விடிவுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனின் கட்சியினால் மட்டுமே வழங்க முடியும்.

வட மாகாண முஸ்லிம்களினால் காலம் காலமாக ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் அம் மக்களுக்கு, இந்த 23 வருடங்களாக எந்தவித காத்திரமான உதவிகளோ, குறிப்பிடத்தக்க சேவைகளோ, சொல்லக் கூடியளவுக்கு அபிவிருத்திகளோ வழங்க முடியவில்லை. மாறாக, காலத்துக்குக் காலம் வன்னி முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டு ஒன்றோ, இரண்டோ பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வந்திருக்கின்றனர்.

எதிர்க் கட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியில் இருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வந்த செல்வாக்கைக் கண்டு பயந்து போயும் பொறாமைப் பட்டும் அரசாங்கத்துடன் அவசர அவசரமாகத் தானும் இணைந்து அமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கபட நாடகத்தைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கும் அரசாங்கம், அதனை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறது. தானாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற வேண்டிய பல அழுத்தங்கள் அதற்கிருந்தும், பதவி மோகமும்-ரிசாத் பதியுதீனை வளர விடக் கூடாதென்ற காழ்ப்புணர்வும் சேர்ந்து, கழுத்தைப் பிடித்து அரசாங்கம் தள்ளும் வரை அது காத்துக் கொண்டிருக்கிறது.

ரிசாத் பதியுதீனின் வருகையின் பின்னர்தான் வட மாகாண முஸ்லிகள் ஆறுதலையும் பாதுகாப்பையும் சேவைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அரச எதிர்ப்புக் காட்டி( அது எந்த அரசாக இருந்தாலும்) வீராப்புப் பேசுவதற்கு வடக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த தளமல்ல என்பதை வடக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வட மாகாண முஸ்லிம்களுக்குத் தன்னால் எந்த சேவைகளையும் செய்ய முடியாத ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இரவும் பகலும் அம் மக்களுக்காக அயராது உழைக்கும்-அரும் பாடுபடும் ரிசாத் பதியுதீனுக்குத் தமது மானசீக ஆதரவை வழங்குவதற்குப் பதிலாக, அவரை வஞ்சகக் கண் கொண்டு பார்ப்பதும்-அவரை வீழ்த்தத் திரை மறைவு எத்தனங்களில் ஈடுபடுவதும் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.

வட மாகாணத்தில்-சிறப்பாக வன்னி மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனுக்கு இருக்கும் நற் பெயரும்- செல்வாக்கும் உலகமறிந்த விடயம். அதனைத் தகர்த்து, அரசாங்கத்திடம் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்பதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது வகுத்துள்ள சதி வியூகம். அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, வட மாகாண முஸ்லிம்களைப் பலி கொடுக்கும் கைங்கரியத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த சதிக்கு வட மாகாண முஸ்லிம்கள் பலியாகி விடக் கூடாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், வட மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அளிக்கும் வாக்குகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, எதிர்வரும் 21ம் திகதி தத்தமது மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு தமது எதிர்கால சுபீட்ச வாழ்வைத் தீர்மானிக்கும் வாக்குகளை வட மாகாண முஸ்லிம்கள் அள்ளி வழங்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் ரிப்கான் பதியுதீனின் தலைமையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமூக நோக்கமுடைய சிறந்த வேட்பாளர்களே. தலைமை வேட்பாளர் ரிப்கான் பதியுதீனுக்கு தமது வாக்கை அளிப்பதோடு, ஏனைய தமக்குப் பிடித்தமான வாக்காளர்களுக்கும் விருப்பு வாக்குகளை அளித்து மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களையாவது வட மாகாண சபையில் உறுதிப்படுத்த வேண்டும்.

வரலாற்றில், வடக்குக்கென்று தனியாக நடக்கும் இந்தத் தேர்தலில், வட மாகாண முஸ்லிம்களின் வருங்காலம் தங்கியுள்ளது. எனவே, வெற்றிபெறும் நிலைமையில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை மேலும் அமோக வெற்றி பெறச் செய்து, தமது எதிர் காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தனது கட்சியினால் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும், முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடித்து, அதன் மூலம் வடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காத நிலைமையை உருவாக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் ஈடுபடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டியதுமாகும்.

தன்னை நம்பியிருந்த வட மாகாண முஸ்லிம்களுக்குத் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்ற வக்கற்ற தன்மையைப் புரிந்து கொண்டு, தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும் ரிசாத் பதியுதீனுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாமல், அவராவது செய்யட்டும் என்றெண்ணி, இந்தத் தேர்தலிலிருந்து இறுதி நேரத்திலாவது வாபஸ் பெற்றுக் கொண்டு, தனது ஆதரவாளர்களிடம் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படிப் பகிரங்கமாகவும் அறிவிக்க வேண்டும். இதுவே, வடக்கு முஸ்லிம்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யக் கூடிய மிகப் பெரும் சேவையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com