Saturday, July 13, 2013

புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் புகைப்படத்துடன் மேர்வின் சில்வா யாழில்.

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி யாழ் முஸ்லிம்கள் மர்வினிடம் மனு!

தெற்கில் தெருச்சண்டியன் என அறியப்பட்டவர் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா. வடக்குக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ் தேர்தல் நிலைகளை கண்காணிக்க களமிறங்கியுள்ளார் நமது மக்கள் தொடர்பாடல் அமைச்சர். இவர் இன்று காலை கல்லூரி வீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பணிமனை ஒன்றையும் உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார்.

யாழ் மாவட்டத்திலுள்ள மூலை முடுக்கெங்கும் நுழைந்து வெளியேறிய மர்வின் சில்வா , புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் யாழ் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் உருவப்படத்தினைத் தாங்கியவாறே அங்கு காட்சி தந்தார்.

நிகழ்வொன்றில் பேசிய மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மல்வின் சில்வா, 30 வருடங்களாக கொடிய யுத்தத்தால் வட பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும் இதற்கு காரணம் பிரபாகரனே என்றும் தென் பகுதியை எப்படி ஜே.வி.பி.யினர் வைத்திருந்தார்களோ, அதே போன்று வடக்கை பிரபாகரன் வைத்திருந்தார் என்றும் கூறினார். இவ்வாறான பிரதேச வாதம் இன்று முற்றுப்பெற்று விட்டது என்ற அமைச்சர் இனி நாங்கள் அபிவிருத்தியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றதுடன் அதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.சிராஸ் , முடியப்பு ரெமிடியஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடிய மர்வின் சில்வா குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

இதேநேரம் யாழ் முஸ்லீம்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து யாழ் முஸ்லீம் சிவில் சமூக பிரதிநிதிகளால் சின்ன முகைதீன் ஜீம்மா பள்ளி வாயலில் வைத்து மர்வின் சில்வாவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

மகஜரினை பெற்றுக்கொண்ட மர்வின்; முஸ்லீம் மக்களின் தேவைகளை இயன்ற வரை நிறை வேற்றித்தருவதாகவும் இதற்கு தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






























































1 comments :

Anonymous ,  July 14, 2013 at 5:12 AM  

மேர்வின் சில்வா தெருசண்டியன் மட்டுமல்ல, கொலை, கொள்ளை, கடத்தல் பாதாள கோஷ்டியை நடத்திவரும் மறைமுக தலைவருமாவார். இதை அறிந்தும், யாழ் முஸ்லிம்கள் அவரின் பக்கம் தொப்பி பிரட்டும் வேலையை தொடர்ந்தால், நிம்மதியான வாழ்வு, சமாதானத்தை என்றும் அடையமுடியாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com