Thursday, January 24, 2013

இராணுவத்தினரால் சிறு சிறு தவறுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் - பாதுகாப்புச் செயலர் கோத்தபாய

இலங்கை இராணுவத்தினரால் சிறு சிறு தவறுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இவ்வாறு இராணுவத்தினர் மேற்கொண்ட சிறு தவறுகள் தொடர்பாக ஆராய்வதற்கே இராணுவத்தளபதியால் விசாரணை சபையென்றும் நியமிக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இராணுவம் ஒழுக்கமானதாகவும் வான்மைத்துவமிக்கதாகவும் எப்போதும் செயற்பட்டுள்ளது. இதனால் தான் யுத்தத்தை வெற்றி கொண்டு சர்வதேச ரீதியில் நற்பெயர் பெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் வான்மைத்துவம், ஒழுக்கம் இந்த இரு விடயங்களிலும் சிறந்து விளங்கியதனாலேயே கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர்.

எனவே அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com