Thursday, January 17, 2013

பிரென்னன் நியமனம்: சித்திரவதை செய்பவர்கள், படுகொலை செய்பவர்களின் அரசாங்கம்.Bill Van Auken

தனது புலனாய்வுத் துறையின் புதிய தலைவர் பற்றி ஒபாமா என்ன புழுகுகின்றார் தெரியுமா?

“எமது முயற்சிகளை ஒரு வலுவான சட்ட வடிவமைப்பிற்குள் ஒருங்கிணைத்துவிட அவர் உழைத்துள்ளார்” என்று கடந்த திங்களன்று வெள்ளை மாளிகை கிழக்கு அறையில் பேசிய ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்தார். “நாம் சட்டங்களின் வழி நிற்கும் ஒரு நாட்டினர் என்பதை அவர் உணர்ந்துள்ளார். விவாதங்களிலும், தீர்மானங்களை எடுக்கும் கணங்களில் அவர் மிகவும் கடுமையான வினாக்களை எழுப்புகிறார், மிக உயர்ந்த மற்றும் கடுமையான தரங்களை வலியுறுத்துகிறார்.”

தான் CIA க்கு இயக்குனராக நியமித்துள்ள ஜோன் பிரென்னன் பற்றி ஜனாதிபதி இவ்வாறு விவரித்துள்ளார். பிரென்னன் தற்பொழுது ஒபாமாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகராகப் பணியாற்றுகிறார். பிரென்னனுடைய “நேர்மை” மற்றும் “நம்மை அமெரிக்கர்கள் என வரையறுக்கும் மதிப்பீடுகளுக்கு உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளார்” என்று ஜனாதிபதி பாராட்டினார்.

பிரென்னனை நாட்டின் தலைமைப் படுகொலை செய்பவர் என்று ஒபாமா விவரிக்கிறார் என்பதை இத்தகைய உயர் வார்த்தைஜாலங்களில் இருந்து ஒருவரும் ஊகித்துக்கொள்ளமுடியாது. பிரென்னன் தன்னுடைய “நேர்மையையும்” மதிப்பீடுகள், சட்டங்கள் மற்றும் தரங்களுக்கு உறுதிப்பாட்டையும் “பயங்கரவாத செவ்வாய்” கூட்டங்கள் என வெள்ளை மாளிகையில் நடத்தப்படுவதில் நிரூபித்துள்ளார். தொலைக்கட்டுப்பாட்டில் ஆளற்ற பிரிடேட்டர் டிரோன்கள் மூலம் கண்காணிப்பதற்கும் “கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலை” ஒன்றாகத் தொகுத்து ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்வைக்கின்றார்.

“வலுவான சட்ட வடிவமைப்பு” என்பது அவருடைய “ஒழுங்கமைக்கும் வடிவம்” என்று அழைக்கப்படுவதை உருவாக்கியதை குறிக்கிறது. இது கிட்டத்தட்ட அன்றாட நடைமுறையில் டிரோன் ஏவுகணைகள் மூலம் நடத்தப்படும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்து “தொகுத்து ஒருமுகப்படுத்துவதை” குறிக்கிறது. இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவால் வளர்க்கப்பட்டுள்ள இத்தகைய வடிவமைப்பு, ஹிட்லர் மூன்றாம் குடியரசின் காலத்தில் வெளியிட்ட ஆணைகளான “நாட்டின் சட்டங்கள்” என்பதுடன் அதிகம் பொருந்தியுள்ளது.

இது, ஒரு 25 ஆண்டுகளாக CIA செயலராக இருக்கும் பிரென்னனை நியமனம் செய்யும் ஒபாமாவின் இரண்டாம் முயற்சி ஆகும். 2009ல் அவர் பதவிக்கு வந்தபின், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தாராளவாதிகள் மற்றும் “இடதுகள்” என ஜனநாயகக் கட்சியைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து புயல்போல் எதிர்ப்பு வந்ததை அடுத்துக் கைவிடும் கட்டாயம் நேர்ந்தது.

புஷ் நிர்வாகத்தின் முதல் வரைக்காலத்தில் CIA இயக்குனர் ஜோர்ஜ் டெனட்டிற்கு தலைமை உதவியாளராகவும், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள பிரென்னன் அக்காலத்தில் நடத்தப்பட்ட குற்றங்களைச் செயல்படுத்துவதிலும், அவற்றை ஆதரிப்பதிலும் ஆழ்ந்த முறையில் தொடர்பு கொண்டிருந்தார். அவற்றுள் சித்திரவதையில் இருந்து அசாதாரண கடத்தல் மற்றும் சட்டவிரோத உள்நாட்டு உளவுவேலை ஆகியவையும் அடங்கியிருந்தன.

புஷ் நிர்வாகத்தின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதனை தொடர்ச்சியான உருவகமாகக் கொண்ட பிரென்னன் நியமனத்திற்கும், ஒபாமாவின் 2008 தேர்தல் பிரச்சாரமான “நம்பிக்கை மற்றும் மாற்றம்”, மற்றும் அவருடைய பதவிக்கு முன்னர் இருந்தவரின் இழிந்த கொள்கையில் இருந்து முறிவு என்னும் உறுதிமொழி ஆகியவற்றிற்கும் இடையே உள்ள முரண்பாடு, மிகவும் அப்பட்டமாகத்தான் உள்ளது.

இப்பொழுது நான்கு ஆண்டுகளுக்குப் பின், பிரென்னன் நியமிக்கப்பட்டுள்ளமை தாராளவாத, “இடது” ஊடகம் என்று கூறப்படுபவற்றில் சிறிதும் எதிர்ப்பைத் தோற்றுவிக்கவில்லை. இந்நியமனம் செனட் மன்றத்தால் இலகுவாக உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயோர்க் டைம்ஸ் செவ்வாயன்று CIA க்கு பிரென்னன் தலைமை தாங்குதல், முன்னாள் குடியரசுக் கட்சி செனட்டர் சக் ஹாகெல் பாதுகாப்புத் துறைக்குத் தலைமை தாங்குவது இவற்றை எதிர்கொள்ளும் வகையில் மாதிரியாக ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. டைம்ஸ் தலையங்கத்தின் முதல் பகுதி ஹாகெலின் “ஓரினசேர்க்கையாளர்கள் பற்றிய கருத்துக்கள் பிரச்சினைக்கு உரியவை” என்ற கவலையைப் பற்றிக் கூறுகிறது. ஏனெனில் 1998ம் ஆண்டு அவர் உணவுப் பொதிசெய்யும் பெரும் நிறுவனத்தின் வாரிசான ஜேம்ஸ் ஹோர்மெலை அமெரிக்கத் தூதராக நியமித்தது குறித்துக் கூறியவை அக்கவலையின் அடித்தளம் ஆகும். சித்திரவதை, டிரோன் மூலம் நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் பிற கொலைகள் கடைசிப் பத்திக்கு முந்தைய பத்தியில்தான் கூறப்படுகின்றன.

இன்றைய அமெரிக்காவில் தாராளவாதம் எனக் கூறப்படும் அரசியல் முன்னுரிமைகள் குறித்து இதைவிடச் சிறந்த விளக்கத்தைக் காண்பது கடினம் ஆகும். மக்களில் அதிகச் சலுகை உடைய அடுக்குகளின் அடையாள அரசியலுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற பெரும் விழைவு இதில் உள்ளது. அதே போல் உள்நாட்டின் ஜனநாயக உரிமைகளைப் பற்றியும் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவவாதத்தின் குற்றங்களைப் பொருட்படுத்தாத்தன்மையும் இருக்கவேண்டும்.

இதேபோல் நியூ ரிபப்ளிக் ஆசிரியர் ஆண்ட்ரூ சுல்லிவானுடைய கட்டுரையும் நிலைப்பாட்டை நன்கு புலப்படுத்துகிறது; அவர் 2009ம் ஆண்டு பிரென்னன் CIA இயக்குனராக நியமிக்கப்படுவதைக் கண்டித்திருந்தார். திங்களன்று Daily Beast ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர், “இம்முறை அவர் நியமனத்தை எதிர்க்க நான் விரும்பவில்லை. இதற்குக் காரணம் சித்திரவதை ஓரளவிற்கு முடிந்துவிட்டது, மேலும் டிரோன் திட்டத்தில் அதிகரித்தளவில் முக்கிய நபராக அவர் உள்ளார்.”

“மக்கள் மாறுகின்றனர்” என்று சுல்லிவான் சேர்த்துக் கொண்டார். உண்மையில் அவர்கள்தான் மாறுகின்றனர்.

வெள்ளை மாளிகை விருந்துகளுக்கு அழைப்புக்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இத்தகைய மாற்றங்களை விரைவுபடுத்த உதவுகின்றன. வசதியுடன் இருக்கும் தாராளவாத நடைமுறையின் முழுத்தட்டினரும் அடுக்கு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் குற்றங்களுக்கு நாணமின்றி ஆதரவுத்தளமாக மாறிவருகின்றன. இந்த நிகழ்போக்கிற்கு ஆழ்ந்த சமூக வேர்கள் உள்ளதுடன், அவை ஒபாமா நிர்வாகத்தின் கீழ் விரைவுபடுத்துப்பட்டுள்ளன.

பிரென்னன் நியமனம் புத்துயிர்ப்பு பெற்றது புஷ் நிர்வகத்தின் கீழ் நடந்த சித்திரவதை மற்றும் பிற போர்க்குற்றங்கள் அனைத்திற்கும் பொறுப்பானவர்களுக்கு ஒபாமா நிர்வாகம் பாதுகாப்பு அளித்ததால் எளிதாயிற்று. “வருங்காலத்தைப் பாருங்கள், பின்னே பார்க்கவேண்டாம்” என்னும் தவறான மந்திரத்தின் மூலம் ஒபாமாவும் அவருடைய நீதித்துறையும் CIA நடத்திய சித்திரவதைகள் அல்லது ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷில் இருந்து கீழே உள்ளவர்கள் என அவற்றை மேற்பார்வையிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அகற்றிவிட்டனர். அதேபோல் அவர்கள் ஒவ்வொரு வழக்கிலும் தலையிட்டு இக்குற்றச்சாட்டுகளில் இருந்து மீட்டுக்கொள்ளவும் அல்லது தகவல் பெறுவதற்கான வழிவகைகளையும் தடுத்து விட்டனர்.

ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் குற்றங்கள் புஷ் காலத்தில் நடத்தப்பட்டதையும் நிழலில் இருத்திவிட்டன. பிரென்னன்தான் இவற்றிற்கு மத்தியில் இருந்தவர். அவர் இயக்கிய டிரோன் போர்முறை முழு மக்களையும் பெரும் பீதியில் தள்ளிவிட்டது. குறிப்பாக பாக்கிஸ்தானில். ஆனால் பெருகிய முறையில் யேமன், சோமாலியா இன்னும் சந்தேகத்திற்கு இடமின்றிப் பல இடங்களிலும். ஜூன் 2011 ல் பகுத்தறிவிற்கு ஒவ்வாத வகையில் பிரென்னன், முந்தைய ஆண்டில் ஒரு குடிமகன் கூட டிரோன் தாக்குதலில் கொல்லப்படவில்லை என்று கூறியபோது, பாக்கிஸ்தானிய அரசாங்கம் அத்தகைய கொலையுண்டவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உள்ளனர் என்று வலியுறுத்தியது.

மேலும் ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் குடிமக்களை, நீதிமன்றத்தில் குற்றங்களை நிரூபிப்பது ஒருபுறம் இருக்க, எக்குற்றமும் சாட்டப்படாமல், நீதிமன்றத்திற்குப் புறம்பாக கொலை செய்யும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வதற்கு வாதிட்டவர்களில் பிரெனென்னன் முக்கியமானவர் ஆவார். இக்கொள்கை செப்டம்பர் 2011ல் நியூ மெக்சிகோவில் பிறந்த மதகுரு அன்வர் அல்-அவ்வாகி, மற்றொரு அமெரிக்கக் குடிமகனை யேமனிலும் டிரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்குச் செயல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு வாரங்களுக்குப்பின் அவ்லாகியின் 16 வயது மகனைக் கொல்வதற்கும் இது செயல்படுத்தப்பட்டது.

2012ல் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பல தாராளவாதிகளும் போலி இடதுகளும் அவர் இன்னும் “முற்போக்கான” செயற்பட்டியலை இரண்டாம் பதவிக்காலத்தில் தொடர்வர் என ஊகித்தனர். “பாதுகாப்பாக மறு தேர்தலில் வெற்றிபெற்றபின், ஒபாமா தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தில் இன்னும் தைரியமாக இருப்பார் என நாங்கள் நம்புகிறோம்” என்று நேஷன் ஏடு கடந்த மாதம் எழுதியது. “தன்னுடைய உள்பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் அமைச்சரவையில் நியமிக்கப்படுவோர்களைப் பல துறைகளில் இருந்தும் இன்னும் முற்போக்குக் குரல்களைக் கொண்டவர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.” என்றும் எழுதியிருந்தது.

பிரென்னன் நியமனம் இத்தகைய நப்பாசைகளை வளர்ப்பவர்களின் குற்றம் சார்ந்த அரசியல் பங்கை அம்பலப்படுத்துகிறது. இரண்டாம் முறை பதவி ஏற்பதற்கு முன்னரே தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தில் ஒபாமா அமெரிக்காவில் ஆளும் நிதிய தன்னலக்குழு மற்றும் அதன் இராணுவ, உளவுத்துறைக் அமைப்புகள் ஆணையிடும் அரசியல் செயற்பட்டிலைத் தொடர்வார் என்பது நன்கு தெளிவாயிற்று. இதன் அச்சாக மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தரங்களைத் தாக்குதல் என உள்நாட்டிலும், இராணுவத் தலையீடு மற்றும் போர்க் குற்றங்கள் விரிவாக்கம் என்று வெளிநாடுகளிலும் இருக்கும்.

ஆளும் வர்க்கம் சமூக எழுச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்புக்களைக் மேற்கொள்கையில் இக்கொள்கைகளை தொடர்வதற்கு இன்னும் அதிகமான பொலிஸ் அரச அதிகாரங்கள் தேவைப்படும். அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சமூக நிலைமைகளையும் பாதுகாத்தல் என்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வு மற்றும் வரவிருக்கும் வரலாற்றுப்போராட்டங்களுக்கு ஒரு புதிய புரட்சிகரத் தலைமைக்கான தயாரிப்பு ஆகியவை தேவையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com