Tuesday, August 21, 2012

இன்று முதல் பல்கலைக்கழகங்கள் மூடப்படும்

நெருக்கடியை தீர்த்து வைத்து பல்கலைக் கழகங்களை வழமை நிலைமைக்கு கொண்டு வரும் முயற்சியாக, இன்று முதல் பல்கலைக்கழகங்களை மூடிவிட போவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பேரதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, யாழ்ப்பாணம், ருஹூன, ஆகிய பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதுடன், அவற்றின் மருத்துவ பீடங்கள் மாத்திரம் திறந்திருக்கும் எனவும், இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்படுவதுடன், அதன் சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடம் திறந்திருக்கும் எனவும், இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்படுவதுடன், மருத்து மற்றும் அதற்கு இணைவான விஞ்ஞான பீடங்கள் திறந்திருக்கும் எனவும், சப்ரகமுவ, வயம்ப, மொரட்டுவ, அழகியல்கலை பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், சுதேச மருத்துவ நிலையம் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிலையம், மனித வள அபிpவிருத்தி நிறுவனம், தொழில்நுட்ப விஞ்ஞான நிறுவனம், ஸ்ரீபாலிபீடம், திருகோணமலை பீடம், வவுனியா பீடம் ஆகியன மூடப்படும் எனவும், இப்பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படுமென உயர்கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு விரிவுரையாளர் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதனால், அவர்களுடன் பேச்சுவாரத்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இதன் பயனாக அரசாங்கம் அவர்களின் 6 கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளுக்கு கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க விரிவுரையாளர்கள் சங்கங்கள் தொடர்ந்தும் தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆச்சரியத்திற்குரியதென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

தற்போது பல்கலைக்கழகங்களில் நிலவும் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். இதனடிப்படையில் 1978 ஆம்ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20 இல் 4 ஆ சரத்தின் படி உயர்கல்வி அமைச்சர் என்றவகையில் தனக்குள்ள அதிகாரங்களின் படி இவ்வாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை மூடிவிட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க வெளியிட்டுளள அறிக்கையில்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com