Saturday, March 24, 2012

வானொலிக் குயில் ராஜேஸ்வரி அம்மாவுக்கு கவிதாஞ்சலி

(சிரேஷ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அன்னாருக்கான கவிதாஞ்சலி இது)

கவியாக்கம் :- “சாமஸ்ரீ தேசகீர்த்தி” கலாநெஞ்சன் ஷாஜஹான்

வானலை வீதியிலே

கொடிகட்டிப் பறந்த

எங்கள்

வானொலிக் குயிலின்

குரலுக்கு ஓய்வா?



ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா) !

நீங்கள்

தேனில் குரல் நனைத்து

வார்த்தைகளைக் கோர்த்து பேசும் போது

கவிதை மழையல்லவா

வானொலி வழியாய் பொழியும்!



வானொலியே வீடாய்

வீடே வானொலியாய்

இலங்கை வானொலி விருட்சத்தில்

கூடுகட்டி வாழ்ந்த

கலைக் குயில் நீங்கள்!

வானொலிப் பூங்காவில் தோகை விரித்தாடிய

கலை மயில் நீங்கள்!



நீங்கள்

உங்கள் இல்லத்தில் இருந்த

பொழுதுகளை விட

வானொலி

கலையகத்தில் வாழ்ந்த

காலங்கள் அல்லவா அதிகம்?



மந்திரக் குரலால்

தேசத்தைக் கடந்து

புகழ் மணம் வீசிய

பூங்குயில் நீங்கள்!

கலை மணம் பரப்பிய

தமிழ் மகள் நீங்கள்!



எல்லோரும்

காற்றை சுவாசிப்பார்கள்

வாழ்வதற்காக...!

நீங்கள்

காற்றிலே தவழ்ந்தீர்கள்

நேயர்கள் சுவாசிப்பதற்காக...!



பல்துறை ஆற்றலால்

வானொலி வரலாற்றில்

முத்திரைப் பதித்த

சாதனைப் பெண் நீங்கள்!



இலங்கை வானொலியை

தாய் வீடு என்பர்.

அந்த தாய் வீட்டின்

தலை மகள் நீங்கள்!

கலை மகள் நீங்கள்!



காலன் உங்களை

அழைத்துச் சென்றாலும்

காற்றுள்ள வரையில்

உங்கள்

புகழ் வாழும்!

காலமெல்லாம் உங்கள்

புகழ் ஓங்கும்!



உங்கள்

ஆத்மா சாந்தி அடைய

எல்லாம் வல்ல

இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com