Tuesday, January 31, 2012

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல்

நீர்கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல விகாரை அருகில் இடம் பெற்றுள்ளது .

மாநகர சபை உறுப்பினர் கபில நந்தன சுலோச்சன மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலது கையில் காயங்களுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் பின்னர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கையில் பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாநகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை இன்று காலை பாடசாலையில் விட்டு வரும் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்து வந்தவர், மாநகர சபை உறுப்பினரை வாள் ஒன்றினால் வெட்ட முயன்றுள்ளார்.இதன் போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது . சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பி சென்றுள்ளனர் .

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை,

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com