Sunday, November 13, 2011

18ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்த தினம்

எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் 65 ஆவது பிறந்த தினமாகும்.இதனை முன்னிட்டு எதிர்வரும் 18ஆம் திகதி நாடு பூராகவும் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கத்திற்கமைய, மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இத்தேசிய வேலைத்திட்டம் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தினை பாடசாலைகளிலும் அன்றைய தினம் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர சகல பாடசாலை அதிபர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அலுவலக வளாகம், நெடுஞ்சாலைகளின் தெரு மருங்குகள், கைவிடப்பட்ட காணிகள், குளக்கரைகள், பள்ளத் தாக்குகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியில் இவ் வேலைத் திட்டம் நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் பிறந்த தினத்தையிட்டு அன்றைய தினம் நாட்டின் பல இடங்களிலும் விஷேட சமய நிகழ்ச்சிகளும், தானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com