Thursday, October 6, 2011

நியூட்டனின் மூன்றாம் விதியை சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன் படுத்தலாமா?

அதுவும் இலங்கைத் தமிழர்களாக? கனகண்ணா லண்டன்

தமிழுக்கு எதிர் சொல் சிங்களம் என்று தமிழ் மக்களைச் சில இனத்துரோகத் தன்மையுடைய மனிதர்கள் நம்ப வைக்கிறார்கள், இது சரியா? தமிழும் சிங்களமும் இரு வேறு மொழிகளே தவிர எதிர்ச் சொற்களல்ல. இதை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். முதலில் நாங்கள் இலங்கையர்கள் பின்புதான் சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர் அல்லது மலேயர், அந்த மனோபாவம் எங்கள் மனதில் என்றும் எப்பவும் குடி கொண்டிருக்க வேண்டும்.

எனவே அதையே நாம் எமது தாரக மந்திரமாகக் கொண்டால் நாம் எல்லோரும் சகோதரகளே அன்றி வேறுயாராகவும் இருக்க முடியாது. எதிர்ப்பை எதிர்ப்புக் குடி கொண்டால் அதுதான் நியூட்டனின் மூன்றாம் விதியாகவே இருக்கும். அன்புக்கு அன்பு துணை போகும் வரை எம்மானிலத்திலும் எதிரிகள் உருவாக மாட்டார்கள். இது ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி.

இன்றைய சூழ்நிலையில் நெருப்பெடுக்க ஒருவர் வீடு கொழுத்த என்னொருவர் என்று சமுதாயம் சீர் கெட்டு நிற்கிறது, இதை மாற்ற நாம் விழித்தெழுதல் மிக முக்கியம். அதற்கு நாம் என்ன விலை கொடுத்தாவது வாங்க எம்மைத் தயார் பண்ணிக் கொள்ளல் வேண்டும் என்பதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

கெட்டவை நடக்கும் போது எம்மனம் எவளவு அல்லல் படுகிறது, அதே நேரம் நல்லவை நடக்கும் போது அதே மனம் எவளவு சந்தோசப் படுகிறது, என்பதை நாம் உணர்ந்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது வெள்ளிடை மலை. ‘’நிற்க அதற்குத் தக’’ என்ற குறளின் கருத்தை உணரல் வேண்டும்.

எல்லாளனின் காலத்தில் சொல்லப்பட்டவை இன்றும் சொல்லப்படுகிறது அன்று மதத்திற்காக உருவாமாகியதென்றும் இன்று மொழிக்காக உருப்பெறுகிறதென்றும் நிகழ்வுகளும், நடந்தவைகளும் எம்மை உளரீதியாகக் கொடுமைப் படுத்துகிறது என்றால் மிகையாகுமா? ஆனால் நாம் ஒரு நேரம் சத்தியாகிரகம் பண்ணித் தோற்கடிக்கலாம் என்றும், போரால் தோற்கடிக்கலாம் என்றும் மனக் கணக்குபோட்டும் செயலாற்றியும் கண்ட மிச்ச்ம் என்ன? இரண்டும் இரத்த வெள்ளத்திலும் உயிர்காவு கொள்ளலிலும் முடிவடைந்ததை நாம் அனைவரும் அறிவோம்.. இவையாவும் எமது அனுபவங்கள். அனுபவங்கள் படிப்பனையாக வேண்டாமா?

எப்படி நாம் நடந்தால் ஒற்றுமையைப் பேணலாம் என்று ஒரு சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் உண்மையை உணர முடியும் அத்துடன் எதைச் சமர்பணம் செய்தால் அதைச் சரி செய்யலாம் என்று சற்றுச் சிந்திப்போமா?

1949ம் வருடம் எஸ்.ஜே.செல்வநாயகம் என்பவர் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார், அப்படி ஆரம்பித்த கட்சிதான் இவளவு கஸ்டத்துக்கும் காரணம் என்றால் மிகையாகுமா? தமிழர் நலன் கருதிய கட்சிக்குப் பெயர் பொருத்தமானதாக என்னால் எண்ணமுடியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பெயரையும் தமொழில் இன்னுமொரு பெயரையும் கொண்டதே இந்தக் கட்சியின் பெயர்.
சில அரசியற் பிரமுகர்களால் திரிபுரப் படுத்தப் பட்டுள்ளது என்பதும் மிகையாகாததொன்றுதான்.

பிறந்த பிள்ளைக்குப் பெயர் இடும் போது சிந்தித்து வைக்கும் எமது சமுதாயம் அன்று ஏன் சிந்திக்கவில்லை? ஒவ்வொரு மேடையிலும் பேச்சு அது அனேகமாக இன ஒற்றுமையை மேம்படுத்திக் காட்டிய போதும் விழங்கிக் கொள்ளாதவர்க்கு இனத்துவேசத்தை ஊட்டிய ஒரு பேச்சாகவே இருந்தது அதுதான் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினராக உயர்த்தியது என்றால் மிகையாகுமா? அதை வைத்து எத்தனையோ நல்ல சமுதாய மாற்றங்கள் செய்திருக்கலாம் என்பதை அதைச் உருவாக்கியவர்கள் உணர்ந்தார்களா? வாழ விடார்களா இலங்கைத் தமிழர் சமுதாயத்தை? பெறுபேறு முள்ளிவாய்க்காலில் போய் முடிந்ததே!

அதுமட்டுமா போர் முடிந்தபின் வந்த தலைவர் தேர்தலில் நமக்காப் பேசிய கலாநிதி விக்கிரமபாகு கருணரெத்தினாவை விட்டுவிடு எங்கிருந்தோ வந்த சரத் பொன்சேக்காவிற்கு வாக்குகளை அளியுங்கள் என்று சொன்னது யார்? அதே தமிழரசுதான் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை, எல்லோரும் அறிந்ததே இதே போல்தான் டாக்டர் என்.எம்.பெரேராவும் கூறிய போதும் அது சிங்களக் கட்சி எமக்கு என்ன செய்ய முடியும் என்று கூறி தங்களுக்கே வாக்களியுங்கள் என்று கூறிச் சேர்த்த மொத்தப் பாராளுமன்ற உறுப்பினரும் மக்களுக்கு என்ன செய்தார்கள். கடைசியில் கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் என்றனர். கடவுள்தான் காபாற்றுவார் என்றால் எதற்கு வாக்குரிமையைப் பயன் படுத்தக் கேட்கவேண்டும். கோவிலில் மட்டும் நின்று விடலாமே. ஏன் மதியை உபயோகிக்கத் தவறினார்கள் அது இருந்தால்தானே. இது தமிழரின் குற்றமா? அல்லது தமிழரை வழி நடத்தியவர்கள் தங்களுக்குத் தெரியாத பாதையை மக்களுக்குக் காட்டிய வன்மமா?

ஜீ.ஜீ.யை ஓரங்கட்ட எடுத்த முயற்சியே தவிர வேறொன்றில்லை. நடந்தவைகள் நடந்தவைகளா இருக்கட்டும் இனி நடப்பவைகளைக் கவனிப்போம் அவையாவது இனிமையாக இருக்கவேண்டாமா? இருக்கவேண்டும், இருக்கவேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும்; முதலில் அன்பு எனும் அம்பைப் பிரயோகிக்க வேண்டும் நடிப்புக்காகவல்ல, நட்புக்காக, சகோதர்களாக, இலங்கைர்கள் நாம் என்ற நாட்டின் மேல் உள்ள பாசத்திற்காக, நாட்டின் கொளரவத்திற்காக ஒற்றுமை என்னும் கோசத்துடன் ஒன்று சேர்ந்து, பிரிவினை தெரியாமல் வாழ்ந்து காட்டுவோம்.. அப்படி வாழ வேண்டுமானால், பழைய எண்ணங்களை மறந்து விடவேண்டும் மீண்டும் யார் ஓதினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் இருக்கவேண்டும் அப்போதுதான் நாம் இலங்கையர் என்ற ஞாபகம் எம்மைத் தொடரும், அதுதான் எமக்குத் தேவை.

‘’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.’’இம்முறை எட்டாம் திகதி இந்த மாதம் மீண்டும் பல இடத்தில் வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் இருக்கிறது முக்கியமாக நமது வாக்குக்கள் யாரைத் கவரும் என்பது எமக்குத்தான் தெரியும், சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியது என் கடமை, காரணம் இலங்கையில் நடந்த நன்மை தீமைகளைப் பார்கும் சந்தர்ப்பத்தை அடைந்தேன் அதை உங்களுடன் பகிர்வதை பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன்.

வடமாகாணம் மெதுவாக ஆனால் உண்மையாக வளர்கிறது, உடைந்து பழுபோன பாதைகள் தீவிரமாகத் திருத்தப்படுகிறது, விரைவில் முடியும் சந்தர்ப்பத்தையும் எட்டியுள்ளது. வாகனம் ஓட்டுவோர்மட்டும் திருந்தவேயில்லை, திருத்திய வீதிகளில் உள்ள வெளிச்சக் கம்பங்களைக் கண்மூடித்தனமாக முட்டி உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார்கள், பலத்த காயமும் அடைகிறார்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் தயவு செய்து உங்களின் உடன் பிறப்புகளுக்கு அறிவியுங்கள் கையில் வாகனம் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று. போட்டி வேண்டாம் தேவைக்குத் தக்கமாதிரி கணக்காகவும் அவதானமாகவும் வண்டிகளைச் செலுத்துமாறு. பொறுமை என்பதை என்னால் அங்கு பார்க்க முடிவில்லை. இதையே ஜனாதிபதியும் மக்களுக்குக் கூறினார், அது அவர் மக்களின் மேல் உள்ள அன்பைக் காட்டுகிறது, யாழ்ப்பாணத்தில்தான் நடந்ததென்று பேசாமல் இருக்கவில்லையே, எங்கெங்கு குற்றங்கள் நடை பெறுகிறதோ, தலைவனாக அதைச் சுட்டிக்காட்டினார். நமது நாட்டை ஒரு முதல்தர நாடாக்கப் பாடுபட்கிறார் என்பதை எண்ணும் போது எமக்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்து விட்டார் என்பதை உணரமுடிகிறது. அவரைப்பற்றிப் பலவிதமான கதைகள் பலர் பேசுகிறார்கள். ஆனால் அவர் இலங்கையர் நண்பனாகத்தான் இருக்கிறார், ஒரு குடும்பத் தலைவனைப் போல் குற்றங்களைத் திருத்து என்றும் நல்லவைகளை நடத்து என்றும் கூறுகிறார்.

யார் எதை வேண்டுமென்றாலும் கூறலாம் நல்லதைக் கூறுபவர்களையே நாம் விரும்புகிறோம். நல்லதை கூறுபவரும் அவரே ஆவர். சிலர் தப்பாகக் கூறினால் நாம் என்ன செய்யமுடியும். சொல்வதைச் செய்வதும், செய்வதை சொல்பவரும் அவரே, இதுவரை வந்த தலைமைகளில் அவருக்கு ஈடு அவரே!எனவேதான் வாக்குரிமையை அளிக்க எண்ணும் அனைவர்கும் என்னால் கூறக்கூடியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு உங்கள் வாக்கைத் தந்தால் நாம் அவரை ஆதரிக்கிறோம் என்ற உண்மை விளங்கும். அப்போதுதான் ஒற்றுமையான இலங்கையர்கள் நாம் என்பதை உலகிற்குக் காட்ட முடியும். ஏனெனில் அவர் விரும்புவதும் ஒற்றுமையான இலங்கையையே!

உங்கள் அன்பின்
கனகண்ணா லண்டன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com