Thursday, August 4, 2011

இலங்கை- இந்தியா இடையில் பிளவு ஏற்ப்படுத்த தமிழக அரசியல் வாதிகள் முயச்சி.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதான முயற்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கைக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலேயே உறவு நீடிப்பதால் தமிழகத்தின் கருத்துக்களை நாம் ஒருபோதும் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 'இந்தியாவுக்கான புனித யாத்திரை செல்லும் இலங்கையர்கள், பல்வேறு பகிடிவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இந்திய மத்திய அரசுக்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்.

இலங்கை எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளைப் பேணி நல்லுறவை வளர்த்து வருகின்றது. இதனால் இந்தியாவின் ஒரு மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை' என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com