Sunday, August 28, 2011

முதலில் யாருக்கு தூக்கு? : குலுக்கல் முறையில் தேர்வு

வேலூர் சிறையில், செப்., 9ம் தேதி தூக்கிலிடப்படும் மூவரிடமும், கடைசி ஆசை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டு, அவர்களுக்கான தூக்கிலிடும் நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும், செப்., 9ம் தேதி தூக்கில் போட, சிறைத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, வேலூர் மத்திய சிறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை உள்கேட் வரை, பத்திரிகையாளர்கள், போட்டோ கிராபர்கள் செல்ல, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறை அலுவலர்கள் வாகனங்கள், சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சிறையைச் சுற்றி நான்கு இடங்களில் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேரம் வாகனச் சோதனை நடக்கிறது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில், 19 இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில், 7,500 பேர் தங்கியுள்ளனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் கடிதம்:
"என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் சாவின் மடியில் இருக்கிறேன். இவ்வழக்கில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு நேற்று, பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போடும் வரை, பார்வையாளர்கள் சிறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, மூவரின் ரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தூக்கிலிடும் நேரம்:

செப்., 9ம் தேதி அதிகாலை, 4.30 மணி, 5:00 மணி, 5.30க்குள் என, அடுத்தடுத்து மூன்று பேரையும் தூக்கில் போட முடிவு செய்துள்ளனர். முதலில் யாரை தூக்கிலிடுவது என்பது, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். ஒரே சமயத்தில் இருவரை மட்டுமே, வேலூர் சிறையில் தூக்கு போட வசதி உள்ளதால், சேலம் சிறையில் ஒருவரை தூக்கில் போட, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடைசி ஆசை:

மூன்று பேரிடம், "கடைசி ஆசை என்ன?' என்று தெரிவிக்கும்படி, எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ளது. முருகன் தினமும் காலை, 6 மணிக்கு வாக்கிங் செல்வார். நேற்று முதல், வாக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் துறை கண்காணிப்பாளர் அறிவுடையநம்பி நேரடி கண்காணிப்பில், தனித்தனி செல்களில் அடைக்கப்பட்ட இம்மூவருக்கும், சிறை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின் உணவு தரப்படுகிறது.
பத்திரிகைகள் படிக்க, "டிவி' பார்க்க, ரேடியோ கேட்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, தினம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை, மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐ.ஜி., சைலேந்திர பாபு நேற்று சிறைக்கு வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,யுடன் நான்கு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

28 ஆண்டுகளுக்கு பின் மூன்று பேருக்கு தூக்கு :

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சந்துரு, 35. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக் கொன்று, குழந்தை தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு, 1983, நவம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், செப்., 9ம் தேதி, ராஜிவ் கொலை வழக்கில் கைதான மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காத்திருக்கும் கைதிகள்: ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன்; தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ரவிச்சந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன்; சென்னை சிறுவன் கொலை வழக்கில் மோகனரங்கன், கோபி ஆகிய எட்டு பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் இவர்கள் தூக்கு கயிற்றை எதிர்நோக்கியுள்ளனர்.

வேலூர் சிறையில் தூக்கு மேடை தயார் :

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு, செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்காக, சிறை மதில் சுவர்களுக்கு வெளியே, சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தூக்கு மேடை சரிபடுத்தும் பணி, நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கி, நேற்று மாலை 3 மணிக்கு முடிந்தது. சிறைக்கு வெளியே உள்ள தோட்டப் பகுதியை ஒட்டி, தூக்கு போடும் இடம் சிறிய கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக, இங்கு சேட்டு என்பவரை தூக்கில் போட்டனர். அதன் பின், 28 ஆண்டுகளாக இங்கு யாரையும் தூக்கில் போடவில்லை. இதனால், இந்த இடம், காடு போல இருந்தது. பொதுவாக இந்த இடத்தில், ஒருவரை தூக்கில் போட்டு விட்டால், அதற்குப் பின் யாரும் பார்க்க முடியாதபடி, துணியால் மூடி வைத்திருப்பர். கடந்த 28 ஆண்டுகளாக இந்த இடம் மூடி இருந்ததால், துணியும் கிழிந்து கந்தை போல தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தூக்கு மேடை கம்பிகள் சரிப்படுத்தப்பட்டன.

ஆனால், மூன்று பேரும் ஜனாதிபதிக்கும், தமிழக முதல்வருக்கும் கருணை மனுக்கள் அனுப்பியதால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது, ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கும், செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் போடுவது நிச்சயமான பின், அவசர கதியில் இந்த இடம் சரி செய்யும் பணி துவங்கியது. இதற்காக, 16 அடி ஆழத்தில் கிணறு போல காணப்படும் தூக்கு மேடையின் கீழ்ப் பகுதி, சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டது. மேடையைத் தாங்கி நிறுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பி, தூக்கு பள்ளத்தில் இருந்து கீழே உடல் விழும் போது தூக்கும் இரும்புத் தகடுக்கும், கறுப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், தூக்கு போடும் இரும்பு விசை, கிரீஸ் போட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூக்கு மேடையின் மேற்கூரையும் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் மிகவும் வலுவான நிலையில், இரு தூண்கள், அதனிடையே பலமான இரும்புக் கம்பியும் அமைக்கப்பட்டன. அவை இன்றும், நல்ல கண்டிசனில் இருப்பதாக, சிறை அதிகாரிகள் கூறினர். தற்போது, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு தூக்கு போடும் நிலை இங்குள்ளது. தூக்கு மேடை தயாராக இருப்பதாக, வேலூர் சிறைத்துறை அதிகாரிகள், சிறைத் துறை தலைவருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

தூக்கு மேடை சீர் செய்ய பூஜை :

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், ஆரம்பம் முதல் இந்த தூக்கு மேடை மட்டும் தான் உள்ளது. இங்கு இதுவரை, 1,500க்கும் மேற்பட்டவர்களை தூக்கில் போட்டிருப்பதாக, சிறைத் துறையினர் கூறினர். தற்போது, இந்த தூக்கு மேடையை சரிப்படுத்த வேண்டும் என, சிறைத் துறையினர் பல மேஸ்திரிகள், இரும்புக் கம்பிகளை சரிசெய்பவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மறுத்து விட்டனர். 25க்கும் மேற்பட்ட கான்ட்ராக்டர்களிடம் கேட்டும், யாரும் முன்வரவில்லை. இதனால், வெறுத்துப் போன சிறைத்துறை அதிகாரிகள், சிறை வார்டன்களை கொண்டே இதை சரிசெய்தனர். உள்ளே செல்லும் முன், சூடம் ஏற்றி பூஜை செய்தனர். பின்னர், பணி முடிந்ததும், இதே போல பூஜை செய்தனர். சரிசெய்து முடிக்கும் வரை, 50 சிறைக்காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

நன்றி தினமலர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com