ஜனாதிபதி முன்னிலையில் இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவைக்கான உடன்படிக்கை
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் கைச்சாத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந்தியா சார்பில் தூதரக அதிகாரி அசோக் கே. காந்தா, இலங்கை சார்பில் துறைமுகங்கள், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுஜாதா குரேயும் கையெழுத்திட்டனர்.
இதன்படி கொழும்பு- தூத்துக்குடி, தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. என்றாலும், கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலேயே முதலில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இக்கப்பல் போக்குவரத்துச் சேவையினால் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகர்கள், உல்லாசப் பயணிகள் மற்றும் மாணவர்கள் பெரிதும் நன்மையடைவார்கள்.
தற்போது ஆரம்பிக்கப்படவிருக்கும் கொழும்பு - தூத்துக்குடிக்கிடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று தடவைகள் நடத்தப்படவிருக்கின்றன.
இப்பயணிகள் கப்பல்சேவைக்கான கட்டணம், விமானப்பயணத்தின் கட்டணத்தைவிட 30 விழுக்காடு குறைவானதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment