Friday, November 12, 2010

ஜனாதிபதி பதவி ஏற்கும் நிகழ்வுகளை வெள்ளம் அள்ளிச் செல்லும். பொன்சேகா

இராணுவ நீதிமன்றின் தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பாராளுமன்று செல்வதை தடை செய்யப்பட்டுள்ளமையை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றதுடன் அது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 18ம் திகதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் இடத்திற்கு தேர்தல் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜேவிபி உறுப்பினர் நிப்புணாரட்சியின் சட்டத்தரணிகள் இன்று பாராளுமன்றில் ஆஜராகியிருந்துடன் , முன்னாள் இராணுவத் தளபதி பாராளுமன்றம் செல்வதற்கு ஏதுவான இடைக்கால உத்தரவொன்றினை நீதிமன்று பிறப்பிக்குமாயின் அதற்கு தமது தரப்பில் எவ்வித எதிர்ப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் நீதின்றில் ஆஜராகியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அங்கிருந்து வெளியேறிச் செல்கையில் குற்றவாளிகளுக்கு இயற்கையே தண்டனை விதிக்கும் என தெரிவித்துள்ளார். போர் வெற்றி தொடர்பான தேசிய நிகழ்வுகளை நடத்தும்போது பெரியளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டதை போன்று ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போதும் இயற்கை இடையூறுகள் ஏற்படும் என்றும், கொழும்பு வெள்ளத்தில் மிதக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாம் தவணை பதவியேற்பு நிகழ்வுகளை ஒட்டி கொழும்பு பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் யாவற்றுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறையினை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு அரசினால் வேண்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com